Wednesday, October 25, 2006

ஜேசுதாஸ் ஏன் அழுதார்?

“நா ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன் நல்லா பாடும் பாட்டுக்காரன்” எஸ்.பி.பி சும்மா சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தார்.பாட்சா படம் வந்தபோது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது இதுதான் மிகவும் பிரபலமான பாடல் எனக்கு பிடித்த பாடலும் கூட.நான் படத்தை பிறகு நான்கைந்து வருடம் கழித்து தான் பார்க்கமுடிந்தது.

பாட்டுக்களை கேட்பது எப்படி என்றால் அது ஒரு பெரிய புதினம் ஒரு சைக்கிளை கவிட்டுப்போட்டு அதிலிருக்கும் டைனமோவை இயக்கி கிடைக்கும் மின்சாரத்தில் தான் றேடியோ போடுவது. எவ்வளவு வேகமாக சுத்துகிறோமோ அவ்வளவு அதிகமாக மின்சாரம் கிடைக்கும். கூட கரண்ட வந்தால் தான் றேடியோ பெரிசாகப்படிக்கும் இல்லாவிட்டால் ஓய்ங் ஓய்ங்……. என்று இழுபட்டு இழுபட்டு படிக்கும். றேடியோ என்று சொல்வது (2 இன் 1) கசட் பிளேயரும் இருக்கும் கசட்டில பாட்டுப்போட்டா அது ஒரு பிரச்சினை இல்லாமல் படிக்கும் ஆனா ஏதாவது ஸ்ரேசன் பிடிக்க றேடியோவை இயக்கினால். அவ்வளவுதான் ட்ர்ர்ர்ர்ர்ர் ஒரே இரைச்சல் மயம்தான்.

FM என்றால் ஒரே இரைச்சல் மயம் தான். MW என்றால் பரவாயில்லை. நான் எங்கேயாவது விளையாடிக்கொண்டிருப்பேன் எந்த வீட்டு ரேடியோவிலாவது எனக்கு விருப்பமான பாட்டுகள் கேட்டாலும் உடனே வீட்டுக்கு ஓடிச்சென்று அந்த மீற்றரை பிடித்து சவுண்டை கூட்டி விட்டு கேட்பேன்.(எந்த ரேடியோ என்றாலும் என் வீட்டு ரேடியோ போல வருமா என்ன)அம்மா பேசுவா ஏன்ரா இப்பிடி சவுண்டை கூட்டி வைச்சிருக்கிறாய் எண்டு. நான் கேட்டால் தானே பாட்டு முடிய ஒரே ஓட்டம் விளையாட்டுக்கு.

சிலபேர் டைனமோக்கெண்டே ஒரு சில புதிய உபகரணங்களை உருவாக்கத் தொடங்கினார்கள். பழைய சைக்கிள் பார் எடுத்து அதை கட்டையில் இறுக்கு இறுக்கெண்டு இறுக்கி இன்னும் ஏதோதோ செய்து கீழே படத்தில் இருப்பது மாதிரி ஒன்றை செய்து வைத்து ரேடியோக் கேட்டார்கள். அநேகமாக தமிழர் பிரதேச வீடுகளில் றேடியோக் கேட்டது இப்படித்தான்.

ஒளிப்படம் அமரதாஸ்
( வாழும் கணங்கள் புகைப்படத் தொகுப்பிலிருந்து)
எங்களை வீட்ட இருக்கிற ஒலிபரப்பு நிலையமாக கருதிக்கொண்டுதான் எங்கள் பெரியம்மா மாமா க்களின்ர அண்ணாக்கள் மச்சாள் மார் எல்லோரும் நினைச்சினம். அப்பிடியெ மச்சாள் களும் அக்காக்களும் அவையள் மாறி மாறி பேன் பார்த்துக்கொண்டிருக்கும் போது தம்பி இந்தப்பாட்டு ஒருக்கா போடமாட்டியே என்று கேப்பினம் எங்களுக்கு புழுகம் எங்களையும் ஒரு மனுசரா மதிச்சு கேக்குதுகளே எண்டு நாங்களும் மாஞ்சு மாஞ்சு சவுண்டை கூட்டி விட்டு சுத்துவம்.


(ஒளிப்படம் கானாபிரபா)
எங்கட வீட்டதான் அந்த ஏரியாவில் எல்லோரும் குடிதண்ணி அள்ள வருவினம். பெரியம்மான்ர ஜீவன் அண்ணா பக்கத்து வீட்டு பவானி அக்கா தண்ணி அள்ள வரேக்க மட்டும் ஒரு சோகப்பாட்டு கசட்டை குடுத்து இதைப்போடு தம்பி என்று சொல்லுவார். பாட்டுகளில் ஜேசுதாஸ் அழுவார் “ஏலேலங்கிளியே என்னைத்தாலாட்டும் இசையே” என்று. எனக்கு ஏன் அண்ணா இப்பிடிச் செய்யிறார் என்று விளங்கவில்லை. இருந்தாலும் ஏதோ விசயமிருக்கு எண்டு நினைச்சு ஒரு நாள் போடமாட்டேன் என்று ஸ்ரைக் பண்ணினேன். அவர் டக்கெண்டு காமதேனுவுக்கு கூட்டிக்கொண்டு போறன் எண்டு சத்தியம் பண்ணினார். எனக்கு யார் எப்பிடிப்போனா என்ன காமதேனு தானே முக்கியம் (ம் அப்ப காமதேனு மட்டும் தான் வன்னியில் இருந்த ஒரே ஒரு கூல்பார்) அதை விட யாருக்கும் மனம் வருமே. எனக்கு ஜஸ்கிரீம்தான் முக்கியம். ஜீவன் அண்ணாக்கு பவானி அக்கா என்ன செய்ய… சைக்கிளை கவுட்டுப்போட்டு சுத்தும் போது இப்பிடி சில நல்ல விசயங்களக்கு உதவியிருக்கிறம் எண்டு நினைக்கும் போது பெருமையாக் கிடக்கு (சீ என்னை அப்பிடி கேவலமாப் பாக்காதேங்கோ)



அப்போதெல்லாம் வீட்டிலிருக்கும் பெரியவர்கள் எல்லாச்செய்திகளும் கட்டாயம் கேட்பார்கள். நாட்டு நிலைமை அப்படி அதிகமாக லண்டன் பி.பி.சி. வெரித்தாஸ் போன்ற வானொலிகள் அதிகம் கெட்கப்படும். இரவு 7.30 வெரித்தாஸ் வானொலியில் நிகழ்ச்சிகள் தொடங்கும் என்று நினைக்கிறேன். இப்போது இளையராஜாவுடன் சேர்ந்து திருவாசகம் இசையமைப்பு பணிகளில் இயங்கினாரே ஜெகத் கஸ்பார் அடிகளார் அவர்தான் வெரித்தாஸ் வானொலிக்கு பொறுப்பாக இருந்தார். தமிழர் தரப்பு நியாயங்களை உலகிற்கு சொன்னதில் வெரித்தாசின் பங்கு குறைவில்லாதது என்றே சொல்ல வேண்டும். அந்த வானொலியையும் நாங்கள் சைக்கிளை கவிட்டுப்போட்டு சுத்தியே கேட்டோம். வெரித்தாஸ் வானnhலி தனது வெள்ளி விழாவை யொட்டி போட்டியே நடத்தியது. சைக்கிளில் சுத்தி றேடியோ கேட்பது மாதிரி புகைப்படம் எடுத்து அனுப்பும் படி வெரித்தாஸ் வானொலி போட்டி வைத்தது.

இப்படித்தான் நாங்கள் எல்லாவற்றையும் கேட்டோம் 1994 ல் சந்திரிகா எனக்கு நினைவு தெரிந்த பிறகு முதல்முதலாக இலங்கையில் சமாதானம் என்று பேசிக்கொண்டு தேர்தலில் நின்றார். நாங்கள் அப்போது சந்திரிகா ஆட்சிக்கு வரவேண்டும் என்று வைக்காத நேத்தியெல்லாம் வைத்தோம் சந்திரிகாவுக்கு எதிராக நின்ற காமினி திசநாயக்கா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வைத்து கொல்லப்பட்போது மகிழ்ந்தோம். தேர்தலன்று இரவு டைனமோவை சுத்தி சுத்தி தேர்தல் முடிவுகளை கேட்டுக்கேட்டு ஒரு கொப்பியில் குறித்துக்கொண்டிருந்தேன் சந்திரிகாவின் கட்சி எந்தந்த மாவட்டங்களில் எவ்வளவு ஒட்டு வித்தியாசத்தில் ஜெயித்தது என்பதையும் மொத்தமாக நாட்டில் எவ்வளவு ஒட்டு அவர்களுக்கு அதிகமாக கிடைத்தது என்பதையும் நான் எழுதிக் குறித்து வைத்தேன். பிறகு நான் பாதுகாத்து வைத்த அந்தக் கொப்பியையும் விட்டு விட்டு ஓடும்படி சந்திரிகாவே செய்தார். நாங்கள் ஊரை விட்டு ஓடினோம்.

1996 ல் சந்திரிகா சமாதானம் என்று சொல்லிக்கொண்டிருந்த காலத்தில் எனக்கு நினைவு தெரிந்த நாளில் முதல் முதலாக இலங்கை வானொலி தமிழில் கிரிக்கெட் நேர்முக வர்ணணை செய்தது. அரவிந்த டீ சில்வா லாகூரில் அவுஸ்ரேலியர்களை பின்னியெடுத்தபோது முரளி முறித்துக்கொட்டியபோது அர்ஜூன ரணதுங்க உலகக் கிண்ணத்தை எந்தி புன்னகைத்தபோது நான் சைக்கிளை கவிழ்த்துப்போட்டு சுற்றிக்கொண்டிருந்தேன்.

ஒவ்வொரு சிக்சருக்கும் சுற்றல் வேகமெடுக்கும் . அவுட்டென்றால் கை ஓய்ந்து போகும் மறுபடியும் யாராவது வாணவேடிக்கை நிகழ்த்த கை வெகமெடுக்கும் றேடியோவின் வழியாக லாகூரை காதுக்குள் கொட்டிக்கொண்டிருந்தார் எழில்வேந்தன். என் எதிரே வெறித்த படி இருந்த ஜன்னல் காணமல் போய் அப்டியெ மைதானமாகி டீ சில்வா நானாகி அப்டியே சிக்சரும் பவுண்டரிகளுமாய் கனவுகள் விரிய அப்பிடியே ஒய்ங்.. ஒய்ங்.. என்று குரல் இழுபட்டு தேய்ந்து கொண்டிருப்பார் எழில் வேந்தன். அடுத்தநாள் எல்லாரும் தென்னை மட்டைகளை சீவிக்கொண்டு கிரிக்கெட் ஆட கிளம்பிவிடுவோம்.

இப்படி சைக்கிளை கவிழ்த்துப்போட்டு சுற்றி றேடியோக் கேட்ட அனுபவம் மைதானம் வரை விரியும். ம் இப்போது மறுபடியும் சமாதானம் வந்து மின்சாரம் வந்து இணையம் வந்து எவ்வளவு வசதியாக இருந்தம். ஒரு நாலுவருசம் தான் இப்ப மறுபடியம் பொருளாதாரத் தடை கரண்ட இல்லை எனக்கு ஒரே யோசினையாகக் கிடக்கு மறுபடியும் சைக்கிளைக் கவுட்டுப்போட்டு சுத்த வேண்டி வருமோ என்று….

த.அகிலன்

Tuesday, October 24, 2006

உதிர்ந்து கொண்டிருக்கும் நான்..


உன்
கொலுசின் அசைவுகளில்
நான் உதிந்து கொண்டிருக்கிறென்…

உதடுவரை வந்து
உள்ளடங்கிப்போகும்
உனக்கான ஒரு சொல்…
எனை தின்றுவிட்டுப்போகட்டும்.

நான்
ஏங்கிக்கொண்டிருக்கிறேன்...

நடுக்கடலில்
கப்பலினின்றும்
உதிர்ந்த
காலி மதுப்புட்டியைப்போல
உன்
மனசின் ஆழங்களுக்குள்
போய்விடமாட்டேனா?

த.அகிலன்

மூழ்கும் கப்பல்கள்....


பெருமாள் கோவில்
சிற்பங்களைக் கழுவிக்
கொண்டிருக்கிறது மழை

நிர்வாணப்பெண்கள்
மறுபடியும் நனைய
மரங்களினிடையே
மறையும் கண்ணன்.

என்
காலகளினடியில் மறுபடியும்
நழுவி ஓடிக்கொண்டிருக்கிறது
பூமி

நீரின் மீது
முடிவிலிக்கோடுகளை
ஒற்றைப்புள்ளியில் இருந்து
வரைந்து கொண்டிருக்கிறது
இலையிருந்து நழுவும்
ஒற்றைத் துளி.

குழந்தைகள்
கொப்பிகளைக்கிழிக்கின்றன

எனக்குள்
மிதக்கத்தொடங்கின கப்பல்கள்

இப்போது
நீரினிலாகிறது
குழந்தைகளின் உலகு
யாரேனும் அதை
மறுக்கையில்

மழை
இடம்பெயர்கிறது
குழந்தைகளின்
கண்களிற்குள்..

எனக்குள்
மூழ்கத் தொடங்கின
கப்பல்கள்...

த.அகிலன்

Tuesday, October 17, 2006

அபிராமியின் அட்டிகை என்னாச்சு?

நண்பாகளே அபிராமியின் அட்டிகைக்கு என்னாச்சு விடுவாரா மாயாவி?கும் கும் என்று ஒரு கும்மாங்குத்து தலைப்பைத்தான் இந்த பதிவுக்க முதல் இட்டிருந்தேன் ஆனால் புளொக்கர் அந்த பதிவை தின்று தீர்த்துவிட இப்போது மறுபடியும் பதிய வேண்டியதாகிவிட்டது.மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
அன்புடன்
த.அகிலன்


நிலாவுல ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்கிறாள் என்று நம்பிக்கொண்டிருந்தேன். எவ்வளவு தான் வடிவாக பார்த்தாலும் தடியுடன் ஒரு பாட்டியின் முகம் எனக்கு நிலவில் தெரிந்து கொண்டேதான் இருந்தது. அம்மா என்னை மடியில் இருத்தி பாட்டி வடை சுட்ட கதைதான் சொல்லுவாள் நீங்கள் எல்லாரும் உங்கள் வாழ்வில் முதல் கேட்ட கதை என்ன அநேகமாக பாட்டி வடை சுட்ட கதையாகத்தான் இருக்கும். பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்க காகம் தூக்கிக்கொண்டு போக….நரி அதை கேட்க காக்கா பாட்டுப்பாட என்று காகம் இழந்து பொன வடைக்காக கவலைப்படுவதில் தான் கதைகளுடனான எனது பரிச்சயம் தொடங்குகிறது.

கதைகள் எப்போதுமே மனதை வசீகரிப்பவை என்னை வேறு ஓர் உலகத்துக்குள் புதிய மாயாஜால வித்தைகளுக்குள்.பிரமாண்ட மான ஏழு லோகங்களுக்குள் நகர்ந்து கொண்டேயிருக்கும். அரக்கர்கள் அரசர்கள் கடவுள்கள் எல்லாரும் எட்டுக்கைகளுடனும் 10 தலைகளுடனும் விதவிதமாக உலாவினார்கள். எப்போதும் எனக்கு கதை சொன்னவர்கள் பெரிய ஒலி களை எழுபப்பிய படி சொல்வார்கள். கதைகள் ஒலிவடிவில் இருந்த காலம் அது. நான் அது வெல்லாம் நிஜமென்று நம்பிக்கிடந்தேன். நானே அரசன் நானே மந்திரி என்று இறுமாந்த கனவுகள் அதிகமாயிருந்த காலம் அது.

கதைகள் என்னை கவரத்தொடங்கியது அப்போது முதல்தான்.பிறகு புத்தகங்கள் வாசிக்கத்தொடங்கிய பிறகு கதைகளின் உலகம் முற்றிலும் வரிவடிவமாகியது. அம்புலிமாமா, பாலமித்ரா,பூந்தளிர்,ரத்னபாலா,பார்வதி சித்திரக்கதைகள்,ஆ.. முக்கியமாக ராணிகாமிக்ஸ் இப்படி அம்மா எனக்கு எல்லாப்புத்தகத்தையும் வாங்கித்தருவார்.


அம்புலிமாமா எப்போதும் ஒரு புராண இதிகாச தொடரைக்கொண்டிருக்கும். நான் முதல் முதலாகப் படித்த அம்புலிமாமா புத்கத்தில் சீதை அசோக வனத்தில் மிகவும் வருந்திக்கொண்டிருந்தாள் . அப்போது ராவணன் அசோகவனத்தில் இருக்கும் சீதையிடம் வந்துபேசுவான்.அதை அனுமன் மேலே இருந்து பார்த்துக்கொண்டிருப்பான். அப்போதெல்லாம் நான் அனுமன் கட்சி சாத்தியம் அசாத்தியம் என்பதை பற்றியெல்லாம் நான் சிந்தித்ததே இல்லை இராவணன் சபையிலே அனுமன் வாலை ஆசனமாக்கி அமர்ந்த போது குதூகலித்தேன். அம்புலிமாமாவில் இன்னொன்று தொடர்ச்சியாக வரும் விக்கிரமாதித்தன் கதை வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டுவிட அடுத்த தடவையாவது அது அவன் தோளிலே போய்விடும் என்று நம்பினேன். இன்றைவரைக்கும் அது அவனோடு போகவில்லை.

பாலமித்ரா அம்புலிமாமாவைப்போல ஒரு பத்திரிகை தான் ஆனால் தொடராக ஒரு மாயாஜால தொடர் இருக்கும்.இளவரசர்கள் மந்திரவாதிகளின் சதிகளை முறியடித்து கிளிகளாக மாறிய இளவரசிகளை சுயஉருவம் பெறச்செய்து கல்யாணம் கட்டிக்கொள்வார்கள் எனக்கு ஒரு கேள்வி இருந்தது ஏன் இளவரசிகளின் அண்ணன் தம்பிகள் வந்து மீட்கக் கூடாது என்று யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.

எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் ராணி காமிக்ஸ் தான். அது குறித்த ஆவல் எப்போதும் தீராததாகவே இருக்கிறது.ஒரு வேளை அதில் கீறப்பட்ட சித்திரங்களும் கதாநாயகர்களின் சாகசங்களும் காரணமாக இருக்கலாம். அப்போதெல்லாம் அடுத்த காமிக்ஸ்சுகாகக் காத்திருந்திருக்கிறேன் புத்தகக் கடைக்காரரிடம் ராணிகாமிக்ஸ் என்று கேட்காமல் அடுத்த புத்தகத்தின் பெயரைச்சொல்லியே கேட்பேன்.


(உதாரணமாக கப்பல் வேட்டை, மாயக்காரி,தங்கக்கடற்கரை இப்படி இதற்கும் அவற்றின் பெயர்கள்) கடைசிப் பக்கத்தில் அடுத்த காமிக்ஸ் பற்றிய ஒரு விளம்பரம் இருக்கும் இப்படி
படிக்கத்தவறாதீர்கள்
அடுத்தகாமிக்ஸ்
காட்டுக்குள் புகுந்தது கொள்ளையர் கும்பல்
விடுவாரா மாயாவி கும் கும் ..




இப்படித்தான் இருக்கும் அந்த விளம்பரம். மாயாவி மட்டுமல்ல பிளாஸ்கார்டன் ,ஜேம்ஸ்பாண்ட, போன்றவர்களின் சாகசங்களிற்கும் குறைவில்லைத்தான் ஆனாலும் முகமூடி வீரர் மாயாவிதான் எப்போதும் விரும்பப்பட்டார். காட்டுக்குள் இருந்து கொண்டே டயானா என்கிற வெள்ளைக்காரியை கட்டியதற்காக அவருக்கு ஒரு பாராட்டு.

(முடிந்தால் மாயாவியைப்பற்றி ஒரு தனிப்பதிவு போடுகிறேன்)

கோகுலம் பிற்காலத்தில் தான் வந்து இந்தப்பட்டியலில் சேர்ந்து கொண்டது.ஆனாலும் கோகுலத்துக்குள் இலவச இணைப்பா வரும் லேபிள்கள். கலண்டர்கள், போன்றவை எம்மை வெகுவாக கவர்ந்தன. கோகுலத்தில் வரும் தொடர்கதைககள் சிறுவர்களின் சாகசங்களைப்பற்றியிருக்கும். நூறு ரூபாய் ரகசியம் என்;று ஒரு தொடர்கதை வந்தது.நான் மிகவும் ரசித்த கதை அது. பிறகு ஒரு கதை வந்தது அபிராமியின் அட்டிகை என்ற ஆனால் அந்தக்கதை யை நான் படித்து முடிக்குமன்பே ஈழத்தின் போர்சூழல் மெலும் விரிவடைந்து பாதைகள் மூடப்பட்டு அந்தப்புத்தகங்கள் வருவதே நின்று விட்டது.எனக்கு மிகவும் வருத்தம்தான் என்ன செய்ய எனக்கு அரசியல் புரியாத காலத்திலேயே அதன் கொடும் கரங்கள் என் ஆசைகளைத் தின்னத் தொடங்கிவிட்டன.


இப்போது எனது வாசிப்பின் தளங்கள் காலச்சுவடு உயிர்மை , ஆனந்தவிகடன், குமுதம், குங்குமம் என்று பெஸ்டு கண்ணா பெஸ்ட ரேஞ்சுக்கு மாறிவிட்டாலும்.இன்னமும் என்க்கு அபிராமியின் அட்டிகை தொடர்கதை முடியும் வரை வாசிக்க முடியவில்லை என்கிற பால்யகால ஏக்கம் உண்டு. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் அபிராமியின் அட்டிகைக்கு என்ன நடந்தது?

ரொம்ப சின்னபுள்ள தனமா இருக்கோ
அன்புடன்
த.அகிலன்

Monday, October 16, 2006

ஏன் இந்த மெளனமோ(புகைப்படம்)


ஒளிப்படம் கஜானி
இது ஒரு படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட படம்.தினம்
தினம் செத்துப்பிழைக்கும் அடுத்தகணம் பற்றிய கவலைகளுடனும் விடைதெரியாத கேள்விகளுடனும் நிச்சயிக்கப்படாமலிருக்கும் வாழ்தலின்
ஏக்கத்தை சொல்கிறதா ?

த.அகிலன்

Friday, October 13, 2006

சாட்சியாயிருத்தல்.....


எல்லாவற்றிற்கும்
சாட்சியாயிருப்பதன்
இயலாமை
எனை விழுங்குகிறது..

ஒரு
நாற்பது வயதுக்கன்னியின்
கறுத்தப்பொட்டைப்போல
நிஜத்தின் உறுத்தல்
என் கனவுகளின் மேல்
பயணிக்கிறது…..

முடியாது

புன்னகைக்கும்
வேதனைக்கும்
அழிவுக்கும்
மீட்சிக்கும்
அவமானத்திற்கும்
…………………….
இப்படி
எல்;லாவற்றுக்கும்
சாட்சியாய்
மௌனத்தை விழுங்கிக் கொண்டு
எத்தனை நாளைக்கு
இருந்துவிட முடியும்…ம்.

த.அகிலன்

கஜானியின் ஒளிப்படங்கள் தாகத்தின் ஒளியும் நிழலும்

நண்பர்களே நான் பழைய பதிவுகளிலே இட்ட முகத்தில் அறையும் நிஜம்,போர்ப்பசி,இன்றைக்குச்சேறு நாளைக்குச்சோறு என்பவற்றை எடுத்த புகைப்படக் கலைஞர் கஜானியைப்பற்றி ஈழத்தின் மூத்தபடைப்பாளியான கருணாகரன் அவர்கள் எழுதிய குறிப்பு இங்கே கஜானியின் படத்தின் பார்வையாளர்களுக்காக தருகிறேன்.
அன்புடன்
த.அகிலன்

வண்ணங்களாலான உலகத்தையும் வண்ணங்கள் சிதையும் உலகத்தையும் தன்னுடைய ஒளிப்படங்களின் மூலம் காண்பிக்கிறார் கஜானி. கஜனிக்கு ஒளியையும் வெளியையும் கையாளும் நுட்பம் நன்றாகத் தெரிகிறது. ஒளியைக் கையாள்வதன் மூலம் தனது உலகத்தை அவர் வலிமையாகப் படைக்கிறார். ஒளியினூடாக நமது ஆன்மாவில் அவர் நிகழ்த்தும் நடனம் பெரியது. அது கட்டற்றது. எல்லையும் ஓய்வுமற்றது. நம்மைவியப்புக்குள்ளாக்குவது. நாம் விட்டுவிலகிய யதார்த்தங்களில் மீண்டும் நம்மை இணைக்கமுயல்வது.

இவர்தான் கஜானி


காலங்களைக் கடந்து செல்லும் பிரக்ஞைபூர்வமான தன்னுடைய ஒளிப்படங்களின் மூலம் இயற்கையையும் எதிர் இயற்கையையும் படைக்கிறார் கஜானி. கஜானியின் படைப்புலகம் இயல்பினூடாக ஆச்சரியங்களை உருவாக்கும் தன்மையுடையது. இதனால் அவருடைய படங்கள் ஒருபோது பேரிசையாகவும் இன்னொருபோது பெருநடனமாகவும் இருக்கின்றன. வேறு ஒருபோது அழகிய ஓவியங்களாகவும் பிறிதொருபோது உன்னத சிற்பங்களாகவும் வேறொரு சமயத்தில் மெய்ததும்பும் கவிதைகளாகவும் கூட அவை தோன்றுகின்றன.
கஜானியின் ஒளிப்படங்கள் இயற்கையை மறுபடைப்புச் செய்கின்றன. அதேவேளை சிதையும் சூழலின் தவிப்பையும் அதன் மூலத்தையும் அவை சாட்சிபூர்வமாக்குகின்றன. இயற்கையை அவர் படைப்பாக்கம் செய்யும் போது நாம் விட்டுவிலகிய இயற்கைக்கு மீண்டும் நம்மை சிநேகமாகவும் வலிமையோடும் அழைத்துச் செல்கிறார். நமது வாழ்க்கை எப்படியெல்லாம் இயற்கையைப் புறக்கணித்தும் நிராகரித்தும்விட்டு அலைகிறது என்பதை அவருடைய மறுப்படைப்பாக்கம் பெறுகின்ற இயற்கை நமக்கு உணர்த்துகின்றது. நாம் பொருட்படுத்தத்தவறிய உலகத்தை மீண்டும் நம்முன் நிகழ்;த்தி இதனைச்சாதிக்கிறார் கஜானி.

நாம் பொருட்படுத்ததவறும் சூழல் பற்றிய குற்றவுணர்ச்சி அப்போது நம்மை ஆழமாகப் பிளக்கிறது. மனதில் அது வலியையெழுப்புகிறது. ஆனால் அதேவேளை இந்ததவறு தொடர்ந்துவிடாமல் நம்மைச் சூழலோடும் இயற்கையோடும் இணைக்கும் பதிவாக அவரின் படைப்பியக்கமிருக்கின்றது. தண்டணைகளை விதிக்காமலே நம்மை நாமே ஒழுங்குபடுத்தி இணைத்துக் கொள்கிற மாதிரி ஆக்கிவிடுகிறார் அவர்.

கமெரா அவருடைய இனிய பயணியாக அவருக்கு ஒரு நெகிழ்ச்சிமிக்க துணையாக இருக்கிறது. பல சமயத்திலும் மாயங்களை நிகழ்த்தும் விதமாக அல்ல. பதிலாக மீண்டும் மீண்டும் இயற்கையோடும் சூழலோடும் வாழ்வை இணைப்பதற்தான ஆர்வத்தையும் அவசியத்தையும் தூண்டும் விதமானது என்பதே இங்கே பொருள்.
நமது குற்றவுணர்ச்சிகள் கொடிபோல படர்ந்து செல்லாமல் தன்னுடைய படங்களின் மூலம் அதனை கரைத்தொழிக்கிறார் கஜானி.; கஜானியின் கமெரா எதனிலும் கட்டுண்டுவிட வில்லை. அவர் இயற்கையை படமாக்கும் அதே ஆர்வத்தோடும் நுட்பத்தோடும் துயரப்படும் மனிதர்களையும் படமாக்குகிறார். அதனூடே அவர்களின் வாழ்கையைப் பகிர்ந்து கொள்கிறார்.
அத்துடன் அதைக் கவனப்படுத்தி சமூகத்தின் முன் சமர்ப்பிக்கிறார். புறக்கணிக்கப்பட்டிருக்கும் அந்த மக்களை அவர் அங்கீகரிக்கிறார்.
கஜானியின் ஏராளமான படங்களில் நெருக்கடிமனிதர்களின் வாழ்வையும் ஆன்மாவையும் காணமுடியும். குறிப்பாக உழைக்கும் மனிதர்கள் பற்றியபடங்கள் இதில் முக்கியமானவை. சிறுவர்கள் முதல் சகல வயதிலும் உழைக்கும் மனிதர்கள் ஆண் , பெண் வேறுபாடின்றியிருக்கிறார்கள். அதிலும் பெண் உழைப்பாளர்கள் சிறுவர் நிலை உழைப்பாளர்கள் முக்கியமான கவனத்திற்குரியவர்கள் ஆகின்றார்கள்.

இன்று அதிக கவனம் பெற்று வரும் சிறுவர் மற்றும் பெண்கள் உரிமை குறித்த கவனத்திற்கும் யதார்த்தத்திற்குமிடையிலான முரணை துல்லியமாக்குகின்றார் கஜானி.
யதார்த்தத்தில்; பெண்கள் கலாச்சார ரீதியாகவும் சமூகவாழ்கையின் நிரப்;பந்தங்கள் காரணமாகவும் இன்றும் இரண்டாம், மூன்றாம் நிலைகளியே உள்ளார்கள். சிறுவர் நலன்குறித்த சிந்தனைகளும் சட்டங்களும்; விழப்புணர்வும் முன்னரைவிட வலுவடைந்தபோதும் இன்றும் சிறுவர்கள் உழைப்பாளர்களாகவும் கல்வி மற்றும் வாழக்;கை உரிமை மறுக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதை ஆதாரப்படுத்துகிறன கஜானியின் ஒளிப்படங்கள். பல சந்தர்ப்பங்களில் கஜானியின் கமெரா பொறுப்புள்ள சாட்சியாகப் பேசுகின்றது.

சமூகம் மீதான கரிசனையும் ;சகமனிதர்கள் மேலுள்ள பரிவும் அக்கறையும்தான் இதன் அடிப்படை. நாம் வாழுகின்ற சூழல் எப்படிச் சிதைந்துபோய்யிருக்கிறது என்பதைக்காட்டுவதன் மூலம் நமக்குரிய பொறுப்பை அவர் உணர்த்த முற்படுகிறார்.
நாம் நாளாந்தம் பல இடங்களிலும் சாதாரணமாகக் காணுகிற காட்சிகளை ஆழப்படுத்தி அவர் காட்டுகிறார். அதன் மூலம் தொடர்ந்தும் நாம் அந்தக்காட்சிகளை சாதாரணமாகக் கடந்து போய்விடமுடியாதபடி அவர் ஆக்குகிறார். இதன் மூலம் சூழலின் சிதைவுகள் குறித்த அக்கறையை நமது புலனுள் நுழைத்து வளர்த்து நமக்குள் அதை நொதிக்கச் செய்கிறார்.
கமெராவை வெறுமனே ஒரு தொழில்நுட்பக்கருவியாகவோ காட்சியை பதிவு செய்யும் படமாக்கல் சாதனமாகவோ வெறுமனே கஜானியால் கையாளமுடியவில்லை.

அப்படிக்கையாள்வது அந்தச்சாதனத்துக்கும் சமூகத்துக்கும் தவறானது என்ற தெளிவு கஜானிக்கு இருக்கிறது. கமெராவை அறிவுப+ர்வமாக அதன் பெறுமானத்திற்குரியவாறு அவர் கையாள்கின்றார்.
தமிழ்ச் சூழலில் புழங்கும் கமெராக்கள் பன்முகத்தன்மையையும் ஆழத்தையும் இழந்தவை. வளர்ச்சியடையாத கமெரா பார்வையே தமிழ்ச்சூழலில் அதிகமுண்டு. கமெரா மூலம் நிகழ்த்தப்பட்டிருக்கவேண்டிய மிகச்சிறிய வேலைகள்கூட முழுமையாகாத நிலையே நமது சூழலில் பராமரிக்கப்படுகிறது. இந்த நிலையில் சாதனைகள் குறித்து நாம் எப்படிச் சிந்திக்கமுடியும்?

முடிவிலாப்பயணத்தில் நகர்ந்துகொண்டிருக்கும் பேரியற்கையையும் வாழ்வையும் ஒரு புள்ளியில் வைத்து அள்ளிக்கொள்கிறது. ஒளிப்படம். நிலையற்ற காட்சிப் புலத்தையும் ஒளித்தருணத்தையும் அதன் போக்கில் வைத்துவிட்டு ஒரு புள்ளியை அல்லது ஒரு பகுதியை வெட்டி நிலைப்படுத்தும் பேரியக்கம் அது.

ஒளித்தருணம் நிலையற்றது. அது சதா மாறிக்கொண்டேயிருப்பது. பொருட்களும் இடங்களும் மாற்றமடைந்துகொண்டேயிருப்பன. வேகமாக மாறும் ஒளித்தருணத்தையும் அதன் வழியான காட்சிப்புலத்தையும் பதிவு கொள்வதன் மூலம் மாறாப்புள்ளியொன்றை தன்வசப்படுத்தி விடுகிறது ஒளிப்படம். அது நிலையற்ற காட்சிகளை நிலைப்படுத்திக்கொள்ளும் வலிமை பொருந்திய வடிவம். மாறியபடியிருக்கும் காட்சிப்புலத்தை அதன்வழி நகரவிட்டு ஒரு தருணத்தை அல்லது ஒரு புள்ளியை அள்ளிக்கொள்ளும் ஒளிப்படம். மாறிய தருணங்களின் மாறிய காட்சிகளின் ஓர் மாறா அடையாளம். ஒரு தருணமும் ஒரு காட்சியும் இருந்ததற்கான ஆதாரம் அது. ஒரு புதிரான வடிவம். குலையும் வடிவத்தில் குலையா வடிவம்.

ஒளிபடங்கள் ஒரு வகையில் அழியா ஞாபகம். அது காட்சியொன்றின் ஞாபகம். மேலும் ஒளித்தருணமொன்றின் ஞாபகம். இந்த ஞாபகத்தின் வழி அது ஒரு காட்சியினதும் தருணத்தினதும் நிலை. நிலையின்மைக்குள் ஊடுருவும் நிலை. இத்தகைய வலிமைமிக்க நவீன கலைவடிவத்திற்கும் தமிழ்ச்சூழலுக்குமான நெருக்கம் மிகக்குறைவு.
தொழில்நுட்பம் பாதியும் கலை ஆழுமை பாதியுமாக இணைந்து திரட்சியுறும் ஒளிப்படக்கலை உலகளவில் நீண்டகாலமாக பெரும் அதிர்வுகளையும் மாற்றங்களையும் ஏற்படுத்திய தூண்டல்களின் வடிவமும்கூட.

இன்றைய தகவல் யுகத்தில் ஒளிப்படம் வகிப்பது அல்லது பெறுவது முதன்மையான பாத்திரம். ஒளிஊடகம் மற்றும் அச்சு ஊடகத்துறையில் ஒளிப்படங்களின் வலிமையும் அதிகம். பேசாப்படங்களாக நின்று அவை பேசும் சங்கதிகள் நிறைய. அத்துடன் வாழ்வின் சகல பருவங்களிலும், சகல நிலைகளிலும் தடையின்றி மிக இயல்பாக சேர்ந்தும் ஊடுருவியும் ஒளிப்படக்கலை நிற்கிறது.

தமிழ் வாழ்வில் சுருங்கிய நிலையில் மிக வரையறுக்கப்பட்ட வடிவங்களுக்குள் அடங்கியதாகவே ஒளிப்படம் பொதுப்புழக்கத்தில் இருந்து வருகின்றது. ஒளிப்படத்தைக் கலையாகவும் அதனை விரிந்த தளங்களில் அணுகுவதிலும் புரிந்துகொள்வதிலும் பெரும் தயக்கங்கள் நிரம்பி வழிகின்றன.

புறக்கணிக்க முடியாதவாறு ஒன்றிணைந்து நிற்கும் ஒளிப்படக்கலையின் மெய்ச் சாத்தியப்பாடுகளைப் புறக்கணிக்கும் போக்கே தொடர்கிறது. மிகச்சிறிய வட்டத்தினர் மட்டும் உயிர்ப்பு நிரம்பிய ஒளியின் சகாசங்களையும் அதன் நுட்பங்களையும் நாடகத்தையும் கவனிக்கின்றனர்.

அரசியல் மற்றும் சமூகவியல் புலத்தில் ஒளிப்படம் பெற்றிருக்கும் இடத்தைக் கடந்த நூறு ஆண்டு கால வரலாற்று நிகழ்வுகள் சொல்கின்றன. இன்றும் அச்சு ஊடகங்கள் தொடக்கம் சகல ஊடகங்களும் ஒளிப்படத்தினூடாகப் பலரையும் பலதையும் அறிதலாக்கியபடியே இருக்கின்றன.ஏதோ ஒரு நாட்டிலுள்ள ஒருவரை, ஒன்றை, ஒரு காட்சியை உலகம் முழுவதற்கும் ஒளிப்படம் அறிமுகப்படுத்தி வைக்கிறது.
ஒரு பருவத்தில் எடுக்கப்பட்ட ஒரு படத்தை அவருடைய இன்னொரு பருவத்தில் வைத்துப் பார்த்துக் கொள்ளும் பரவசம் எத்தனை இனியது. அதன் எல்லை மிகப்பெரியதல்லவா. ஞாபகத்தை மீட்டிப் பார்க்கவும் வரலாற்றைக் கற்றுக்கொள்ளவும் தன்னை நெகிழ்ந்து கொடுக்கிறது ஒளிப்படம்.

இன்று ஒளிப்படங்கள் ஊடகத்தளங்களில் நிரம்பிக் கிடக்கின்றன. முடிவுறா உரையாடலையும் பகிர்வையும் நிகழ்த்திக்கொண்டிருக்கும் ஒளிப்படங்கள் கனவின் சாயலுடையவை. கழிந்த காட்சி கனவு இப்போது கழிந்துகொண்டிருக்கின்ற காட்சியும் கனவு. நிஜம் எத்தனை உண்மையாக இருந்தாலும் அது அடுத்த கணம் கனவாக மாறிக்கொண்டிருக்கின்றது. நிஜம் தோற்றுக்கொண்டேயிருக்கின்றது. கனவு நிலைக்கிறது. கழிந்த போனதெல்லாம் இனிக் கனவுதான். ஞாபகத்தின் துளிர்போல சிறகுடையது கனவு. அந்தக்கனவின் முகமாக ஒளிப்படம் மாறிவிடுகிறது. கழிந்த காட்சி கனவாகிவிட ஒளிப்படம் மட்டும் நிஜமாக அந்தக்காட்சியின் மெய்யாக மாறும் விந்தை அது.


ஒளியை ஆழும் ஒரு கலைஞன் காட்சியை தன் அக ஒழுங்கிற்கும் விரிவிற்கும் ஏற்ப அதனை இழைக்கின்றான். எண்ணற்ற வேர்களையும், இலைகளையும், பூக்களையும் அவற்றின் வண்ணங்களையும, வாசனைகளையும் கனிகளையும் அவற்றின் சுவையையும் மரம் என்ற வடிவத்தையும் தன்னுள் கொண்டிருக்கும் ஒரு சிறு விதை போல நல்லதொரு ஒளிப்படம் எல்லா உயிர்ப்புகளையும் தன்னுள் அடக்கியபடியிருக்கிறது. அதற்கு வாசல்களும் அதிகம் திசைகளும் அதிகம்.

இவ்வாறெல்லாம் விரிவுகொண்டிருக்கும் ஒளிப்படத்துறையில் ஈடுபாடு கொண்ட கஜானி தன்னுடைய ஒளித்தருணங்களை தான் அள்ளிய சில புள்ளிகளை காட்சிப்படுத்தியுள்ளார். இங்கே காட்சி என்பது வெறுமனே ஒரு பொருளின் தோற்றத்தையோ ஒன்றின் அடையாள விரிப்பையோ குறிப்பதல்ல. அவர் ஒளி அடுக்குகளை கண்டவிதமே.
ஓளியின் வடிவங்களை அறிந்துகொள்வதில்;தான் ஒரு ஒளிப்பதிவாளரின் திறனும் பலமும் தங்கியிருக்கிறது.

ஓளி நாடகத்தை வைத்துத் தான் புரியும் விந்;தைகள் மூலம் பார்வையாளரின் அகப்புலத்தைத் திறக்கும் ஒளிப்பதிவாளரே சிறந்த கலைஞர்.
போரின் நெருக்குவாரங்கள் ஒரு ஒளிப்படக்கலைஞரை உந்துதலுடன் செயற்பட வைப்பது இயல்பு. போரின் பிடியில் இருக்கும் சூழல் சடுதியான சிதைவுகளுக்குள்ளாவதால் ஒளிப்படக்கலைஞரின் கவனம் அங்கே இயல்பாகக் குவிகிறது. முதற்கணத்திலிருந்த காட்சி அடுத்த கணத்தில் முற்றாக அழிந்துவிடும் அல்லது சிதைந்துவிடும் நிலை போர்க்களத்திலேயே அதிகமுண்டு. ஒரு குண்டுவீச்சோ, செல்தாக்குதலோ அச்சூழலின் விதியை மாற்றி விடுகிறது சடுதியாக.

இத்தகைய நிலையில் ஒளிப்படக்கலைஞர் இரண்டு தருணங்களையும் ஒரு படச்சுருளிலேயே படமெடுக்கும் நியதிண்டு. இது போர்ச்சூழலுக்கே பெரிதுமுடையது. இவ்வாறானதொரு சூழலில்த்தான் மக்கள் வாழ்க்கையும் இருக்கும்.

போர்க்காலம் ஒன்றின் மக்கள் திரளில் வாழும் ஒளிப்படக்கலைஞர் செயற்படும் விதம் தீவிரமானது. நிழலும் தீப்பிடித்தெரியும் வாழ்க்கையுடைய சூழலது. தன் சூழலையும் தன் காலத்தையும் சர்வதேச எல்லைகளை நோக்கி விரிக்கக்கூடிய சாத்தியங்கள் அந்தச் சூழலின் ஒளிப்படங்களுக்கும் ஒளிப்படக்காரர்களுக்குமுண்டு
-கஜானி இந்தக் குறைநிறையை மாற்றமுனைகிறார். கமெராவை அதன் பொருள் பொதிந்த நிலையில் கையாள வேண்டும் என்று அவர் தீர்மானித்திருக்கிறார். அதிலும் தனியே ஒளியையும் சட்டகத்தையும் கையாள்வதன்மூலம் மட்டும் எதையும் படமாக்கிவிட முடியும் என்ற இலகுவான பொறிமுறையைவிட்டு விலகவேண்டும் என்ற விருப்பத்தோடும் ஆர்வத்தோடும் அவர் இயங்குகிறார்.

-ஒளியினூடாக காட்டப்படும் வினோதங்கள் ஒளிப்படத்தில் கூடுதல் கவர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தும் என்பது உண்மைதான்.ஆனால் அது மட்டும் ஒளிப்படத்தின் வெற்றியாகாது. அது முன்மாதிரியாகப் பின்பற்றக்கூடிய ஒரு வழிமுறையுமல்ல எனபதை கஜானியின் ஒளிப்படங்கள் வாதிடுகின்றன.

ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளாக ஒளிப்படத்துறையில் ஈடுபட்டுவரும் கஜானியின் அனேக படங்கள் பல இதழ்களிலும் நூல்களிலும் வெளியாகியிருக்கினறன. ஆயிஷா,ஒரு பயணியின் நிகழ்காலக் ;குறிப்புகள், எலும்புக்கூட்டின் வாக்குமூலம், இருள் இனி விலகும், இனி வானம் வெளிச்சிரும் எனப்பல நூல்கள். இவை தவிர சர்வதேச ஒளிப்பட இதழ்களிலும் கஜானியின் படங்கள் பிரசுரமாகியுள்ளன.

-தமிழ்ப்பெண் ஒளிப்படக்கலைஞர்களில் கஜனிக்கு இருக்கின்ற கூடுதல் சிறப்பம்சம் அவர் போர்க்களப்படங்களையும் பிடித்துள்ளவராக இருப்பதன்மூலம் கிடைக்கிறது. வெளிச்சூழலிலும் போர்க்களச்சூழலிலும் கவனம் பெறக்கூடியமாதிரியான இருதள இயக்கம் இது. அநேகமாக அபூர்வமாகவே இது வாய்க்கும்.

விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்காப்படையினருக்கும் இடையிலான போரக்காட்சிகளை ஆச்சரியப்படுமளவில அவர் படமாக்கியிருக்கிறார். படையினர் கைவிட்டுச்சென்ற காப்பரண்கள், படைத்தளங்கள், மக்களில்லாத கிராமங்கள், இடப்பெயர்வுகள், சூனியப்பிரதேசங்கள் என சகலவற்றையும் அவர் படம்பிடித்துள்ளார். இன்னும் மக்கள் வாழும் நகரங்களிலும் கிராமங்களிலும் படையினர் ஆக்கிரமித்து நிற்பதையும் அவருடைய கமெரா சாட்சி பூர்வமாக காட்சிப்படுத்தியுள்ளது.

எவையெல்லாம் இன்று தன் சூழலை நெருக்கடிக்குள்ளாக்குகின்றனவோ அவற்றை அவர் எதிர் வினையாக்குகின்றார். அவருடைய பலமும் ஆயுதமும் கமெராதான். மறுக்கமுடியாத சாட்சியாக அந்தப்படங்கள் நிரூபணம் கொள்கின்றன.
பெண்பேராளிகளின் களமாடல் தொடக்கம் களவாழ்வுவரையான தொகுதிப்படங்கள் தமிழ்பெண்வாழ்வில் ஏற்பட்டிருக்கும் பண்பாட்டு விரிதலுக்கு புதிய அடையாளக்குறியானவை. அந்தப் பெண்களின் உடை தொடக்கம் அவர்களின் வாழ்முறைகள் அத்தனையும் தமிழ்ச்சூழலுக்கும் தமிழ்ப்பெண்பற்றிய புறச்சூழலுக்கும் அதிர்ச்சிகரமான ஒரு காட்சிப்புலமே.
விடுதலைப் புலிகளின் பெண்போராளிகள் பற்றிய படங்கள் கடந்த பதினைந்து ஆண்டுகளில் நிறைய வெளியாகியிருக்கின்றன. இதில் கஜானியின் படங்களும் அடங்கும். ஆனாலும் கஜானியின் ஒளிப்படங்களை ஒன்று சேரத்தொகுத்துப் பார்க்கும்போது அவர் பெண்போராளிகளின் வாழ்வையும் ஆற்றலையும் காட்சிப்புலத்தின் வழியாக சீராக ஒழுங்குபடுத்தியுள்ளமையைக் காணலாம். இன்றுள்ள போராட்டவாழ்வில் பெண் வாழ்க்கையும் அதன் அடையாளமும் பெற்றுள்ள இட்ததை அவர் கவனங்கொண்டுள்ளார். பெண்போராளிகளின் பல பரிமாணங்களையும் துலங்கவைக்கும் நோக்கில் அவருடைய பல படங்கள் உள்ளன. துலக்கம்பெறவேண்டிய அனைத்துப் பகுதிகளிலும் அவர் ஒளிபாய்ச்சுகிறார். அவற்றை அவர் போக்கஸ் ஆக்குகின்றார்.

ஒளியைக்கையாள்கை மற்றும் சட்டகங்களின் கவனம் பின்னகரும் சில படங்களும் இவருடைய செகரிப்பிலுண்டு. ஆனால் அவை படமாக்கப்பட்ட சூழ்நிலையும் களமும் வேறு. படமெடுப்பதற்கு அவகாசமற்ற சூழ்நிலைகளிலும் களத்திலும் அவற்றில் சில படமாக்கப்பட்டிருக்கின்றன.
தீர்மானிக்கப்பட்டிருக்காத சூழ்நிலைகளில் இயங்கும் ஒளிப்படக்கலைஞருக்குள்ள சவால்கள் எப்போதும் நெருக்கடிகள் நிறைந்தவை. குறிப்பாக போர்க்களம் மற்றும் அதுபோன்ற திடீர்ச் சந்தர்ப்பங்கள். அதில் தேர்வென்பது நெருக்கடிச் சூழ்நிலையும் அந்தக் களமுமே. அப்படியான தருணங்களில் எடுக்கப்படுகின்ற படங்கள் அவை எதிர்கொண்ட சவால்களுக்குரியவாறு பெரும் நிலைபேறைப் பெறுகின்றன. அப்படியான நிலமைகளின் போது எடுக்கப்பட்ட பல சர்வதேசப் புகழ் பெற்ற படங்கள் நமது ஞாபகப்பரப்பில் அழியாதவாறு பதியம் பெற்றிருக்கின்றன. பல ஒளிப்படக் கலைஞர்கள் இந்தச் சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். இதில் கஜானியும் சேரத்துடிக்கிறார்.

கஜானி தன்னளவில் தனக்குச் சாத்தியமான எல்லைவரையில் இயங்கியிருக்கிறார். அவருடைய கவனத்திற்கமைய இந்த ஒளிப்படங்கள் பதிவாகியுள்ளன.
போர்ச்சூழலில் ஒடுக்கப்படும் இனமொன்றின் பிரதிநிதியாக நின்று கொண்டு ஒளிப்படத்துறையில் இயங்குவதென்பது மிகவும் சிரமம். தமிழ்ச் சூழலில் ஒளிப்படம் குறித்த ஆர்வமுள்ள அளவுக்கு அதன் கலைப்பெறுமதி குறித்த புரிதல் இல்லை. இது ஒளிப்படத்துறையில் இயங்கும் ஒருவருக்கு இன்னொரு மறைமுகமான நெருக்குவாரம். இதைவிட இத்துறைபற்றி கண்டுகொள்ளாத்தனம் வேறு. இவையெல்லாம் சேர்ந்து தமிழ் வாழ்வில் ஒளிப்படத்துறையை ஒடுக்கிவைத்துள்ளன.

கஜானி இத்தகைய சூழலை எதிர்கொண்டபடிதான் இயங்குகின்றார். கஜானி தன்னார்வத்தின் வழி செய்த பயணத்தின் புள்ளிகளைக் கோர்வையாக்கியுள்ளர்.
கஜானியின் படங்கள் கொந்தழிக்கும் ஒரு சமூகத்தினது ஆன்மாவை காட்சி ரூபமாக்குகின்றன. இதற்காக அவர் தீராத தாகத்தோடு கமராவில் இயங்குகின்றார். இதற்கு அவர் தன்வாழ்வையும் ஈடுபாட்டையும் மக்கள் விடுதலை குறித்த திசையில் வைத்திருப்பமே அடிப்படை.

அவருடைய புலனில் பதியம் பெற்றுள்ள சமூக்கக் கவனம் சக மனிதர்கள் பற்றிய அக்கறை இயற்கை மற்றும் பிரபஞ்சம் மீதான பிரியமெல்லாம் அவரை முன்னோக்கி நகர்த்துகின்றன.
அவர் ஒளி;யை விரும்புகின்றார். ஒளியே அவருடைய ஆதாரம். ஒரு வகையில் சொன்னால் அவர் ஒளியைத் தொடர்கின்ற ஒரு பயணி.

Thursday, October 12, 2006

இண்டைக்குசேறு நாளைக்குசோறு


ஒளிப்படம் கஜானி
இது யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட காட்சி

Wednesday, October 11, 2006

போர்ப்பசி(புகைப்படம்)


(ஒளிப்பம்.கஜானி)
தமக்கும் நண்பர்களுக்குமான உணவை போர்க்களத்துக்கு எடுத்துச்செல்லும் இரண்டு பெண் புலிகள்.கூட இருந்தவன் செத்துப்போக எப்படிச் சாப்பிட மனம் வரும் சாப்பிட்டதை விட கொட்டியதூன் மிச்சம் என்கிறார்கள் அவர்களைக்கேட்டால்.

எனது முதல் பதிவான முகத்தில் அறையும் நிஜம் இற்கு கிடைத்த வரவேற்பை பார்த்தவுடன் பிறந்த நம்பிக்கையில் அடுத்தது இது. நீங்கள் விரும்பினால் இன்னும் வரும்.
த.அகிலன்

Tuesday, October 10, 2006

வண்ணத்திப்பூச்சி வயசென்ன ஆச்சு….(தேன்கூடு போட்டிக்காக)


“வண்ணத்தப்பூச்சி வயசென்ன ஆச்சி
உள்ளுரு முழுக்க உன்னைப்பத்தி பேச்சு”
இந்தப்பாடல் பிரபலமாயிருந்த காலம் அப்போதெல்லாம் சின்னக்கா இந்தப்பாட்டையே முணுமுணுத்துக்கொண்டிருப்பா இல்லாட்டி
“நானொரு சிந்து காவடிச்சிந்து”
இது இரண்டும் தான் அவாவுக்குப்பிடிச்ச பாட்டு இதைப்பாடிக்கொண்டே திரிவா நாங்களும் பின்னால திரிவோம்.

அப்பல்லாம் எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை சின்னக்கா எப்பவும் ஒரு கை விளக்குமாறு கையில வைச்சுக்கொள்ளுவா. நாங்கள் எல்லாரும் சந்தோசமா அவவுக்கு பின்னாலதிரிவோம். புல்லு பத்தை எண்டு ஒரு வண்ணாத்திப்பூச்சியையும் விடாமல் அடிப்பம் அடிச்சு அடிச்சு மஞ்சள்கலர், வெள்ளைப்புள்ளிபோட்ட கறுத்தக்கலர், தாச்சிச்சட்டிக்கலர், கோப்பிக்கலர், எண்டு விதவிதமா கலர்கலரா வண்ணத்திகளைச் சேர்ப்பம் சின்னக்கா அடிச்சு அடிச்சு எங்களிட்ட தருவா. அடிச்சு எண்டா உயிரைக்கொல்லுற இல்ல அவ வண்ணத்துப்பூச்சி அடிக்கிற ஸ்ரைலே தனி வண்ணத்துப்பூச்சிக்கு தெரியாம நைஸ் நைஸ்சா அதுக்குப்பின்னால போய் சட் என்ற ஒரே அடி. வண்ணத்துப் ப+ச்சி புல்லுகளுக்கிடையில் விழும் நாங்கள் பாய்ஞ்சு எடுப்பம்.



எப்பவும் எனக்கு மஞ்சள் கலர் வண்ணத்துப்பூச்சி தான் விருப்பம் அதால மஞ்சள் வண்ணத்துப்பூச்சியை சின்னக்கா அடிக்குமட்டும் நான் பாத்துக்கொண்டிருப்பன். ஆனா வண்ணத்துப்ப+ச்சி அடிக்கிறது அவ்வளவு சுகமில்லை சின்னக்கா நைஸ் நைஸா கிட்டப் போய் அடிக்;க விளக்குமாறு ஓங்க அது திடீரென்று பறந்து போய் மற்றப்புல்லில இருக்கும். புல்லுகள் எல்லாம் மஞ்சள் கலரில பூப்பூத்து வடிவா இருக்கும் அதில வண்ணத்தப்பூச்சி இருந்தா இன்னும் வடிவா இருக்கும்.

நாங்கள் வண்ணத்துப்பூச்சிகளை அதுகளின்ர காலில பிடிப்பம் அதுகள் துடிக்குங்கள் எங்களுக்குச்சிரிப்பு வரும். எங்கட கையில வண்ணத்துப்பூச்சிகளின்ர நிறம் பிரளும் நாங்கள் அதுகளை கொஞ்ச நேரம் வைச்சு பாப்பம் பிறகு விடுவம் ஆனா அப்பவே வண்ணத்துப்பூச்சி அரைவாசி செத்திருக்கும்.

ஒருநாள் வண்ணத்துப்பூச்சிகள் திடீரென்று அலையலையா கிளம்பி பின்வளவுல இருந்து கேற்றடிப்பக்கமா போகும். நாங்க அப்பிடியே உறைஞ்சு போய் பாத்துக்கொண்டு நிப்பம் பாக்க ஆசையா கிடக்கும் (அவ்வளவு வண்ணத்திகளையும் பிடிச்சா என்ணண்டு) அப்ப பெரியம்மாட்ட கேட்டன் “வண்ணத்துப்பூச்சியெல்லாம் எங்க போகுது” பெரியம்மா தான் சொன்னவா அதெல்லாம் காசிக்குப்போகுது எண்டு. வண்ணத்துப்பூச்சியெல்லாம் காசிக்குப்போனாப்பிறகு எங்களுக்குப் பிடிக்க வண்ணத்தி இருக்கேல்ல.

நாங்க விடுவமா பிறகு தும்பி பிடிச்சம் வண்ணத்துப்பூச்சியை விட தும்பி பிடிக்கிறது பயங்கர கஸ்டம் ஆனா பிடிச்சா சந்தோசம்தான். தும்பி ஹெலிஹொப்பரர் மாதிரி இருக்கும்.


அப்போதெல்லாம் ஹெலி எங்களின்ர வீட்டுக்கு மேலால எல்லாம் பறந்து போகும் நாங்கள் முத்தத்தில் நிண்டு பாப்பம் உள்ளுக்கு ஆக்கள் இருக்கிறது தெரியுதா எண்டு. சில நாட்கள் உள்ளுக்குள்ள இருக்கிற ஆட்களை கண்டுமிருக்கிறம்.

நாங்கள் ஹெலி மாதிரி இருக்கிற தம்பியின்ர கால்ல நூலைக்கட்டுவம் அது மேலே பறக்கும் எங்கட கையில இருக்கிற நூல் முடியுமட்டும் பறப்பார் பிறகு அப்பிடியே வட்டமடிப்பார். நாங்கள் சிரித்து சிரித்து விளையாடுவம். எங்களுக்கு திருப்தி யான பிறகுதான் தும்பிக்கு விடுதலை. தும்பி அப்பாடா என்று பறந்து போகும்.

மெல்லிய நூலால் தும்பியைக்கட்டி விளையாடிய அந்தப்பொழுதில் எனக்கு புரிந்ததே இல்லை. தும்பியின் வேதனை விடுதலைக்காக தும்பி எவ்வளவு தவித்திருக்கும் என்று புரியவேயில்லை.

பிறகொரு நாள் திடீரென்று எல்லாம் புரிந்தது. தும்பியைப்போல் இருந்த ஹெலி ஊருக்கு மேலால வந்தது அம்மா எங்களை இழுததுக்கொண்டு வீட்டுக்குள் ஓடினா. அம்மா ஏன் இப்படி செய்யிறா எண்டு விளங்காமலிருந்தம். நாங்கள் மேசைக்கு கீழை பதுங்கி இருக்கிறம் ஹெலி திடீரென்று சுடத்தொடங்கியது விட்டு பிளாற்றுக்கு மேல சட்சடவென்று சத்தம் கேட்டது இரண்டு மூண்டு ஓடுகளும் உடைஞ்சு விழுந்தது. நாங்கள் மேசைக்கு அடியில் ஒடுங்கிப்போயிருந்தம். நான் அப்ப சரியா நம்பினன் தும்பியைப்பிடிச்ச கோபத்திலதான் எங்கட வீட்டுக்கு ஹெலி சுடுகுதெண்டு. பிறகு வளர வளர அதுவும் புரிஞ்சுது.

தும்பியைக்கட்டி விளையாடேக்க எனக்குப்புரியாத விடுதலையின் ருசி எனக்கு இப்ப புரிஞ்சுது. விடுதலை எப்போதும் ஒரு அவாவாகவே இருந்தது. பிறகு நாங்கள் தும்பிகளைப்போல் நடத்தப்பட்டோம். ஊருக்குள் திரியவே வரையறைகள் இருந்தன. எத்தனை மணிக்குத்தான் வீட்டுக்கு வெளியால வரலாம் எண்டு இருந்தது. திடீர் திடீரென்று ராணுவம் எங்கட வீடுகளுக்குள்ள வரும் துவக்குகளோட. (அப்போதெல்லாம் எனக்கு விளக்குமாறோட நிக்கிற)
எங்கட பழைய ஞாபகம் வருவது தவிர்க்கமுடிhயமலிருந்தது.

விடுதலை வாழ்வின் தேவை மிக அவசியமான சாமான் என எனக்குப்பட்டது . சின்ன வயதில் என்னிடம் சிறைப்பட்ட தும்பிக்காய் மிகவும் வருத்தமெல்லாம் பட்டேன் (நம்புங்கள்). வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் விடுதலை தேவை விடுதலைதான் வாழ்வை பூரணமாக்குகிறது. பூக்களுக்கு மொட்டுகளிடமிருந்து,மழைக்கு மேகங்களிடமிருந்து இப்படி எல்லாவற்றிற்கும் விடுதலைதான் மூச்சாயிருக்கிறது ஒரு குழந்தையின் புன்னகையைப்போல விடுதலை மிக அழகானது.

நாம் தும்பியை நூலால் கட்டி விளையாடுகையில் புரியாத அது எனக்கு பிறகு புரிந்தது. நானும் தும்பியைப்போலான போது புரிந்தது. யார் யாரோ கயிறு கட்டி விளையாடும் பொம்மைகளாய் எம்மை உணர்ந்த போது விடுதலையின் ருசி உணர்ந்தேன்.

ஊர்நதியின் மூலங்களை விட்டு, ஊர்க்குருவியின் பாடலை விட்டு, ஊர் முழுதும் நிறைந்து கிடக்கும் எங்கள் வியர்வைகளை விட்டு, சுவடுகள் தொலையத்தொலைய துரத்தப்பட்போது விடுதலை ஒரு புன்னகையைப்போல இயல்பாய் இருக்க முடியாது என நம்பினேன். ஊர் நிலம் நிச்சயமாக மறுபடி பாhக்கும் போது அம்மாவின மடியைப்போலிருக்காது என்றும் நம்பத்தொடங்கினேன். காலம் எனக்கு கனவுகளைத் தந்தது. கனவுகள் கவிதைகளைத் தந்தன. கவிதைகள் விடுதலையைப்பாடின. விடுதலையை ஊர் கேட்டது. ஒர் நதியைப்போல ஒரு புன்னகையைப்போல , ஓர்பூவின் மலர்தலைப்போல , நான் இழந்துபோன ஊரின் விடுதலையும் கனவுகளும் மறுபடியும் வரக்காத்திருக்கிறேன்.

த.அகிலன்

முகத்தில் அறையும் நிஜம் (புகைப்படம்)



ஒளிப்படம்- கஜானி)
நாங்கள் ஊரைவிட்டுப்போய் மறுபடியம் எமது ஊருக்குள் வந்து தேடி எடுத்தவை.யாருடைய அம்மாவோ அல்லது அப்பாவோ,அக்காவோ...இன்னும்..... இதில் யார் அது தெரிகிறதா

த.அகிலன்

Sunday, October 08, 2006

மரண தண்டனையும் மண்ணாங்கட்டியும்

என் அன்னலச்சுமி போனதுக்கப்பறம் எனக்கு வாழ்க்கையில பிடிப்பில்லாமபோச்சு ஆனா மரணதண்டனையை விலக்கினாங்கண்ணா நான் நல்ல மனுசனா வாழமுயற்சி செய்வேன்…

அட இது என்னுதில்லீங்க விருமாண்டியோடது.

ஏன் நான் இதை சொல்றேன்னா தமிழ்மணத்தில நானும் பார்க்கிறேன் கொஞ்சநாளா எல்லோரும் மரணதண்டனை மரணதண்டனை எண்டு ஒரே மரணதண்டணை மயமாப்போச்சு நானும் என் பங்குக்கு எதையாவது போட்டுத்தாக்க வேண்டாமா அதான் கோதாவுல இறங்கிட்டேன்.

கமல்ஹாசன் தனது விருமாண்டி படம் மரணதண்டனைக்கு எதிரானது என்று சொன்னாலும் அந்தப்படம் எந்தளவுக்கு மரணதண்டனைக்கு எதிராக பாதிப்பை ஏற்படுத்தியது என்பது கேள்விக்குரியதே என்னைக்கேட்டால் அந்த மரணதண்டனை குறித்த சமாசாரங்களை விட்டுப்பார்த்தால் விருமாண்டி நல்லபடம்.



எத்தினை சினிமா பாத்திருப்போம் நீதிபதி தன் சுத்தியால டமார் டமார் எண்டு அடித்து இ.பி.கோ 302வது சட்டப்படி மரணதண்டனை அழித்து தீர்பளிக்கிறேன் என்பார்.

மரணதண்டனை தேவையா இல்லையா? எவ்வளவு பெரிய கேள்வி இது. மரணதண்டனை யாருக்கு கொடுக்கப்படுகிறது. பெரிய பெரிய கிரிமினல்களுக்கு கொடுக்கப்படுகிறது கொலை கொள்ளை இப்படி இனிமே அவனை திருத்தவே முடியாது இவனை விட்டு வைச்சா மத்தவங்களுக்கு ரொம்ப கெடுதல் எண்டு நீதிதேவதை நினைச்சா உடனே மரண தண்டனை வழங்கப்படகிறது.
(ம் அவ கண்ணை வேற கட்டி வைச்சிட்டு கை நீட்டி லஞ்சம் வாங்கி இந்த நீதிபதிகள் நிரபராதிகளுக்கு மரணதண்டனை வழங்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்).

அட என்னைக்கேட்டா நான் சொல்லுவன் மரணதண்டனை தேவையில்லலை என்று. தூக்குப்போட்டா ஒருத்தன் எப்பிடி செத்துப்போவான் தெரியுமா கழுத்து எலும்புகள் கழண்டுதான் செத்துப்போவான். அட நம்ப உடம்பு அவ்வளவு லேசில எங்களை சாக விடாது முதல் தரம் எலும்பு கழர கழுத்து தன்பாட்டுக்கு அதை பூட்டும் மூண்டாந்தரம் எக்கி எக்கிப்பாத்து அது முடியாம செத்துப்போவான் இந்த மரணத்திற்கிடையில் எவ்வளவு அவஸ்தை தெரியுமா?(வலியே தெரியாம சாகிறதுக்கு நிறைய எங்கட விஞ்ஞானிகள் கண்டு பிடிச்சிட்டாங்கள் தான். இருந்தாலும்)

அட அவன் எவ்வளவு பெரிய தப்பும் பண்ணியிருக்கட்டும் அதுக்காக அவனை கொல்லுறதா அப்பிடி நீங்க கொண்டா அவனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கமுடியம். வன்முறைக்கு வன்முறைதான் தீர்வுண்ணு உலகம் சொல்கிறது என்றால் அமைதிக்கான நோபல் பரிசை அணுகுண்டு செய்ய பயன்படுத்துங்கள். கத்திக்கு கத்தி குத்துக்கு குத்து என்பதெல்லாம் தப்பு என்பது தான் என்கருத்து.

சாதாரணமா ஊருக்குள் கொலை செய்யிறவனை பிடிச்சி மரணதண்டனை வழங்குகிறீர்கள் அட அமெரிக்க கழுகு புஸ்சுக்கு யார் மரணதண்டனை கொடுப்பது எத்தனை கொலைசெய்கிறார்.பயங்கரவாதத்தை தடுப்பது என்று சொல்லி செய்யாத பயங்கரவாதம் எல்லாம் செய்கிறார். ஏன் அண்மையில் இலங்கை முல்லைத்தீவில் 52 குழந்தைகளை குண்டு போட்டு கொன்றாரோ மகிந்த ராஜபக்ச அவருக்கெல்லாம் மரதண்டனை குடுப்பீங்களா? இப்பிடி பெரிய பெரிய கொலைகாரங்களையெல்லாம் சாதாரணமா சீச்சி ராஜமரியாதையோடு நடமாட விட்டு விட்டு உள்ளுர்கொலைகாரன் நாக்கை தொங்கப்போட்டுக்கிட்டு தூக்கில தொங்கணுமா? சும்மா போங்கய்யா மரணதண்டனை வேணும் என்று கத்தாம…..

Saturday, October 07, 2006

நிர்ப்பந்தம்

அலைகிறது மனசு
அப்படியே
ஸ்தம்பித்துப்போன
வாழ்வின் நினைவெழுந்து
மனவெளியெங்கும் அலைகிறது..

நிலவின் பின்னழகு போலவே
நிதர்சனங்களும்
விழிகளுக்கு தெரியாமலே....

முகங்களின் கொந்தளிப்பில்
மூடிவைக்கப்படுகின்றன மனசுகள்...

வா
நானும் நீயும்
திறந்த மனசோடு
காற்றைப்போல்
எங்கும் நுழைவோம்..

எனக்கு நானும்
உனக்கு நீயும்
எல்லைகள் வகுத்துக்கொண்டு
வறண்டுபோகாமல்
எனக்கு உன்னையம்
உனக்கு என்னையும்
முழுவதும் காட்டுகிறவரை
இருட்டுக்குள் இருக்கிற
நம் வாழ்க்கை

இருட்டுக்குள்ளேயே
இருக்க நிர்ப்பந்திக்கப்படுவதாய்....

த.அகிலன்

Friday, October 06, 2006

மரணத்தின் வாசனை - 03

அழுது கொண்டிருக்கும் பள்ளிக்கூடச் சுவர்கள்

அவனது வெறித்த விழிகள் நிலைகுத்தி இருந்தது.கண்களை இமைக்கவேயில்லை அவனது அருகில் வேகமாய் இயங்கிக் கொண்டிருந்த வைத்திய சாலையின் வேகமும் பயமும். தொற்றாமல் அவன் சிலைபோல் நின்றான். பதட்டமும் அவலமும். பாதிக்கவேயில்லை இந்த மனிதனை…..

நான் அவனருகே கீழே பார்த்தேன்.ஓ……… என்து வார்த்தைகள் தட்டையானது. குடல் வெளியில தள்ளியபடி ஒரு பிள்ளை அவனது தங்கச்சியாயிருக்கலாம். தலை புரண்டு கிடந்தது நான் அருகே போனேன். குருதி வழிந்த வெறும் தரையில் கிடத்தப்பட்டிருந்தாள். கடைசிக் கணங்களின் புன்னகை அவளது முகத்தில் உறைந்து போய்க்கிடந்தது. என்னை யாரோ நெரிப்பது போலிருந்தது…

நான் அவளுக்கு யாருமில்லை… அண்ணனா தம்பியா மாமனா மச்சானா யாருமில்லை…எனக்கே நெஞ்சடைத்தது. வைத்திசாலையில் மரணத்தின் வாசனை விரவியிருந்தது வார்த்தைகள் தொண்டைக்குள் இருந்தன. நான் அவனை அண்ணை அண்ணை... என்று கூப்பிட நினைத்தேன்.. வாயை பலம் கொண்டசைத்தேன் வெறும் காத்துதான் வந்தது. திடீரென்ற ஒரு முடிவற்ற கிணறொன்றுக்குள் விழுந்து கொண்டே இருப்பது போன்ற அவஸ்தை தரை தட்டாமல் கூகூகூகூகூகூகூகூகூகூகூ என்று விழுந்து கொண்டேயிருந்தேன் அந்தரமாய் இருந்தது. வைத்தியசாலையின் மனிதர்கள் உறைந்து போனார்கள். என்னால் நிற்க முடியவில்லை. அந்த இடத்தை விட்டு ஒட வேண்டும் போல இருந்தது ஒடினேன். கால்கள் தரையில் பாடவேயில்லை……


எங்கும் ஒரே கூக்குரலாய் இருந்தது. யாரையும் பொருட்படுத்தாது வாகனங்கள் வந்து கொண்டேயிருந்தன… முடிவில்லாமல் போனது.. குவியல் குவியலாக பிணங்கள் கிடத்தப்பட்டிருந்தன சில மணிநேரங்களுக்கு முன்னர் நிறைய நம்பிக்கைகளோடு இருந்தவர்கள் மரணத்தை நினைத்திருக்கவே மாட்டார்கள். ஏன் நினைக்கிறார்கள் யாராவது விடிய எழும்பினவுடன் மரணத்தையா நினைக்கிறார்கள். அவர்களில் யாருக்காவது அன்றைக்கு பிற்நதநாளாய் இருக்கலாம். துயர் நினைவுகளைத் தாங்கியபடி எழுந்திருக்கிற வயதா? எல்லாம் விடலைகள் கனவுகள் கொழுந்து விட்டெரியும் வயசுதானே அவர்களுக்கு...


அவர்கள் ஏன் மரணத்தை நினைக்கப்போகிறார்கள். இப்போது உயிரற்ற உடல்களின் குவியல்களுள் கனவுகளற்று கிடக்கிறார்கள். அவர்களது கனவுகளையும் உயிர்களையும் கிபிர்க்குண்டுகள் கொண்டு போயின…


யார்யாருடைய அம்மாவோ அப்பாவோ அண்ணனோ தம்பியோ இலக்கற்று அந்தப்பிணக்குவியல்களிற்குள் அலைந்தார்கள்.எல்லா உடல்களையும் புரட்டிப்புரட்டிப் பார்த்தார்கள் என்னுடைய பிள்ளையாய் இருக்ககூடாது என்ற நப்பாசையில் ஓடினார்கள் அழுகையும் கூக்குரலும் நிரம்பியிருந்தது அந்த ஆஸ்பத்திரியின் மைதானம்….

இதுவா அதுவா மற்றதாயிருக்குமோ என்று ஒவ்வொரு உடலும் புரட்டிப்பார்க்கப்பட்டது. சிதறிப்போன உடல்களை எங்கிருந்து கண்டு பிடிப்பது. உடல்களே இல்லாத மரணமும் நிகழ்ந்தது. அத்தனையும் பள்ளிக் கூடப்பிள்ளைகள் விடலைகள் எந்தவிதமான அரசியல் விருப்புவெறுப்பும் அற்வர்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்ந்தவர்கள் என்பதற்காக கொல்லப்பட்டார்கள். தமிழ் பேசினார்கள் என்பதற்காக கொல்லப்பட்டார்கள். வேறென்ன பாவம் செய்தார்கள் மரணம் சுவடுகளற்று நிகழ்த்திப்போயிருந்த கொடுரம் அது.

அதன் பிறகு முல்லைத்தீவில் சில பள்ளிக்கூடங்களில் உயர்தர வகுப்பில் படிக்க ஆட்களே இல்லாமல் போனது. அவர்களது வகுப்பறைச்சுவர்களில் அவர்களது சிரிப்புகள் இன்றைக்கும் எதிரொலிப்பதாய் ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.


மரணத்தின் வாசனை நுகர்ந்த காயப்பட்ட பெண்பிள்ளைகள் விறைத்துப்போயிருந்தார்கள். ஒரு அப்பா கத்தி அழுகிறார் நான் என்ன செய்யப்போறேன் என்ர பிள்ளைக்கு கையில்லாமப்போச்சே.. இன்னொருத்திக்கு இரண்டு கால்களும் இல்லை வயது பதினேழு செத்துப்போயிருக்கலாம்.. என்கிறாள்.... உலகமே இவள் செத்துப்போகத்தான் வேண்டுமா?...........

கீறீச்ச்ச்ச்;…… என்று ஸ்ரெச்சர் தள்ளும் ஒலி வைத்தியசாலையின் சுவர்களில் தெறிக்க. ஐயோ கிபிர் கிபிர் கட்டிலில் இருந்து குதித்து விட முனைகிறாள் ஒருத்தி. வீரிட்லறியபடி கட்டிலில் இருந்து தவறி விழுகிற ஒருத்தியின் காயம் மறுபடியும் இரத்தமாய்ப்போனது. மறுபடியும் சத்திரசிகிச்சை கூடத்துக்கு அழைத்துப்போகிறார்கள்.

மறுபடியும் வேதனை மறுபடியும் அவலம்.. அவர்கள் எப்போது அந்த நினைவுகளைக்கடப்பார்கள். அவர்களது அழுகை இன்றை வரைக்கும் நிற்கவேயில்லை என்றைக்கு நிற்கும்.

த.அகிலன்

Thursday, October 05, 2006

பிரிவின் சித்திரம்


எனக்கும்
உனக்குமான இடைவெளி
பிரிவின் சொற்களால்
நிரம்புகிறது…

உதிர்ந்து விழும்
நட்சத்திரத்தின் பேரோசை
பிரிவின் காலடியில்
மௌனித்து வீழ்கிறது.

தாகித்தலையும்
நதியின் தடங்களில்
நான் வரைந்து கொண்டிருக்கிறேன்…
நம் பிரிவின் சித்திரத்தை..

த.அகிலன்

Wednesday, October 04, 2006

இது கவிதையில்லை...

ஒரு கடிதம்


அக்கா!
பிளாஸ்ரிக் பின்னணியில்
நீ முகம் காட்டும்
புகைப்படங்களில்
உன்
புன்னகை இயல்பற்று
தொங்கிக் கொண்டிருப்பதாய்
படுகிறது எனக்கு.

எனக்குத் தெரியும்
உன்
எல்லாப் பிரார்த்தனைகளையும் மீறி
எம்-
எல்லோருடைய
புன்னகைகளையும்
அவர்கள்
சிலுவையில் அறைந்து விட்டார்கள்
என்பது

அவர்களை
மன்னித்து விடு
அவர்கள் அறியாதவர்கள்.

அந்த அதிகாரிக்கு
உனது பிரார்த்தனைகளின்
பின்னணியில்
ஒரு தாயின்
இருமல் சத்தம்
நிச்சயமாய் கேட்டிருக்காது

உன்தங்கையின்
கல்யாணம் பற்றி

தம்பியின் வேலைபற்றி

உறவுகளின் தேவைபற்றி

எல்லாவற்றையும் விட
உறவுகளற்று தனிக்கும்
மகளின் முகவரி பற்றி ஏக்கம்
அதுவும்கூட
அவரிற்குத் தெரிந்திருக்காது….

அவர் மறுப்பது
உனது இருப்பை மட்டுமல்ல
அவர்களின் கண்களிற்கு
தெரியாத இச்சிறுதீவில்
உன் மனிதர்களின்
இருப்பையும் மறுக்கிறார்
என்பது
அவருக்கு
தெரியாதிருக்கலாம்….

அக்கா! - இப்போது
நீ- மேல்முறையீட்டாரிடம்
எம் புன்னகைக்காய்
பிரேரிக்கலாம்…..

நான்!
ஏது சொல்ல- அந்த
மனிதர்களிற்கு
புரிய வேண்டுமே!
வேறென்ன
ஓ!
சுஹானா அந்த
சின்ன தேவதைக்கும்
அத்தானுக்கும்- என்
வாழ்த்துக்களைச் சொல்
இப்படிக்குத்
தம்பி.

த.அகிலன்.

ஐரோப்பிய நாடொன்றில் அகதியாகிப்போன ஒரு அக்காவுக்கு எழுதியது இது