Thursday, December 27, 2007

சித்தி

01.
வன்னிவிளாங்குளத்திற்கு கிட்டவாக சித்தி கேட்டாள் தம்பி நான் கொஞ்ச தூரம் ஓடுறன் தாங்கோவன். நான் வேண்டாம் சித்தி நான் ஓடுறன் எண்டு சொன்னன். எனக்கு சைக்கிள் ஓடுறதுக்கு கஸ்டாமாகத் தான் இருந்தது. ஆனாலும் சைக்கிள் ஓடுவதை முழுத்தூரமும் யாரிடமும் கொடுக்காமல் ஓடுவது கிட்டத்தட்ட வீரம் மாதிரி. நான் வீரன் என்று பெருமைப்பட்டுக்கொள்வது மாதிரி. அப்போதெல்லாம் சைக்கிள் தான் வாகனம். சைக்கிள்களால் கடக்கமுடியாத் தொலைவென்று ஒன்று இருப்பதாகவும் படவில்லை. சைக்கிளால் எல்லாவற்றையும் கடந்து விடலாம்.

நான் ஓடிக்கொண்டிருப்பது ஒரு அரைச்சைக்கிள். அது நான் ஸ்கொலசிப் பாஸ்பண்ணினதற்காக மாமா வாங்கித்தந்தது. நான் பத்தாமாண்டு படித்துக்கொண்டிருந்தபோதும் அதையேவைத்து ஓடிக்கொண்டிருந்தேன். அந்த சைக்கிள் பார்ப்பதற்கு வித்தியாசமாக ஒரு ஒட்டகச் சிவிங்கியைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். சைக்கில் சீற்றை உயர்த்து உயர்த்தென்று உயர்த்தி அப்பவும் கால் கான்டிலில் முட்ட, பிறகு நாதன் கராச்சில் சொல்லி ஒரு வட்ட இரும்புக்குழாய் வைச்சும் உயர்த்தியிருக்கும் சைக்கிள். என் உயரம் அவ்வளவு அசாதரணமானதொன்றும் அல்ல பதினைந்து வயதுக்கு கொஞ்சம் கூடத்தான். என்றாலும் கவலைப்படக்கூடிய ஒன்றல்ல. ஆனால் சைக்கிளின் உயரம் கவலைப்படவேண்டிய ஒன்று. நிச்சயமாக ஒரு பத்தாம் வகுப்பு படிக்கிற பெடியன் ஒடக்கூடிய சைக்கிள் அது அல்ல. ஆனால் நான் அந்தச்சைக்கிளில் தான் நாங்கள் கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்து வந்தபோது. தம்பியை முன்னுக்கிருந்து பெடல்போடச் சொல்லிவிட்டு கிளிநொச்சியில் இருந்து கனகராயன் குளத்துக்கு பின்னால் ஒரு மூட்டை சாமானுடன் வந்தேன். அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். கிளிநொச்சியிலிருந்து கனகராயன் குளத்துக்கு வருமட்டும் அந்தச் சைக்கிள் ஒருக்காக்கூட காத்துப்போகவில்லை. நான் மட்டுமல்ல எங்கட குடும்பத்தில ஏலாதாக்கள் தவிர மிச்சாக்கள் எல்லாரும் சைக்கிளில்தான் வந்தோம். கனகராயன் குளத்திலிருந்து இடம்பெயர்ந்து துணுக்காய்க்கு வந்தபோதும் நான் அதே சைக்கிளைத்தான் ஓடிக்கொண்டு வந்தேன். பிறகு திரும்ப கிளிநொச்சிக்கு நாங்கள் கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து திரும்பியபோதும் சைக்கிள்தான். இப்படி எல்லாமே சைக்கிள் தான். ஆனால் சைக்கிளைத்தான் நான் மாற்றிவிட்டிருந்தேன். கிளிநொச்சியிலிருந்து போகும் போது ஓடிக்கொண்டு போன அரைச்சைக்கிளை ஒரு மாதிரி லேடீஸ் சைக்கிளாக மாற்றிவிட்டிருந்தேன். அதைத் தவிர போகும் போதுஇருந்ததிற்கும் வரும்போது இருந்ததற்கும் பெரிய மண்ணாங்கட்டி மாறுதல்களெதுவும் இருந்ததில்லை.

கனகராயன்குளத்திலிருந்து வரும்போது நான்கு பெரிய ஏத்தங்களையும் இரண்டு சின்ன ஏத்தங்களையும் கடந்து கொஞ்ச தூரம் வந்தால் மாங்குளம் சந்திவரும். மாங்குளம் சந்தியில் நிண்டு இடது கைப்பக்கம் பாக்குமாப்போல திரும்பி உழக்கினால் மல்லாவிக்கும் துணுக்காய்க்கும் உயிலங்குளத்துக்கும் ஸ்கந்தபுரத்துக்கும் போகலாம். சித்தி ஏத்தங்கங்கள் வரும்போதெல்லாம் சைக்கிளில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் குதித்து இறங்கிவிடுவாள். அவளுக்கு நான் எழும்பி எழும்பிக் கஸ்டப்பட்டு உழக்குவது காணச்சகியாது. அப்படி ஒருக்கா கனகராயன் குளத்தில இருந்து மல்லாவிக்கு போகிற வழியிலதான் சித்தி கேட்டாள் தம்பி நான் ஓடுறன் எண்டு. ஆனால் சித்தி என்னைவிடவும் பயங்கரக்கட்டை என்னுடைய சைக்கிள் சீற்றோ ஓட்டகத்தின் திமில் மாதிரி கரியலுக்கும்,பாருக்கும் சம்பந்தமே இல்லை எனுமாப்போல தனித்து எழும்பியிருக்கிறது. ஆக அதைச்சித்தி ஓடமுடியாது. நான்தான் தொடர்ந்து ஓடினேன். தண்ணிப்பானைகளைக் கண்டஇடமெல்லாம் நிண்டு தண்ணிகுடிச்சோம். அப்போதெல்லாம் சித்தி எனக்கு வெளிநாட்டுக்குப்போய்விடுகிற பலன் இருக்கெண்டு சொல்லுவாள். வளர்ந்தாப்பிறகு நாதன் மாமா மாதிரி பெரிய மோட்டசைக்கிள் ஒண்டு எடுத்து ஓடவேண்டும். இப்படிச் சைக்கிள் ஓடித்திரியப்படாது என்கிற கனவு எனக்கு இருந்தது. சித்தி அதுக்கிடையில் நான் வெளிநாட்டுக்குப்போய்விடவேண்டும் என்று நினைத்தாள். சித்தியுடன் போகிற தூரச்சைக்கிள் பயணங்களிலெல்லாம் சித்தி கதைசொல்லுவாள் அநேகமாக படக்கதைகள் மூண்டு மணித்தியாலப்படத்தை கிட்டத்தட்ட 2 மணித்தியாலம் சொல்லுவாள். அப்படிச் சித்தி எனக்குச் சொன்ன கதைகள் எக்கச்சக்கம் நிறையக்கதைகள் சொல்லியிருக்கிறாள். அப்போதெல்லாம் சினிமாப்படங்கள் தடைசெய்யப்பட்டிருந்தன என்பதால் சித்தி வாயாலயே எனக்கு படம் காட்டிக்கொண்டிருந்தாள். அநேகமாக சித்தி சொல்கிற கதைகள் எல்லாம் பெண்கள் சம்பந்தப்பட்ட கதைகளாயிருக்கும் ஆண்கள் பெண்களை காதலித்து ஏமாற்றிவிட்டு போகிறகதைகள் பிறகு பெண்கள் அதைப்போராடி ஜெயிக்கிறமாதிரிக் கதைகள். எனக்கு நல்ல நினைவிருக்கிறது சித்தி எனக்கு நீயா படத்தின் கதையைச் சொன்னது. மாங்குளத்திலிருந்து திரும்பினாப்பிறகு சித்தி அந்தக்கதையை சொல்லத் தொடங்கினாள் வன்னிவிளாங்குளத்து அம்மன் கோயிலடியைக்கடந்ததும் சைக்கிளுக்குள் ஒரு பாம்பு முன்சில்லுக்க சிக்கித் சீறித் தப்பி ஓடியது. எனக்கு அதுக்கு மேல வேண்டாம் சித்தி வேறகதை சொல்லுங்க எண்டு சொல்லிவிட்டேன். பிறகு இப்போது யோசித்துப்பார்க்கிறேன் சித்தி அந்தக்கதைகளை சொல்லும்போதான உளவியலை. சித்தி ஏமாற்றப்பட்டிருந்தாள் ஒரு காதலால். அந்த ஏமாற்றம் அதை அடைவதற்கான வழிமுறைகள் உத்திகள் சித்தியைச் சாகும்வரைக்கும் வழிநடத்திக்கொண்டிருந்தன. அவளது வாழ்க்கை கடைசிவரைக்கும் போராட்டமாகவே கழிந்தது.

02.
அவளது சகோதரிகள் எல்லோருக்கும் அவள் பிடிவாதக்காரி,சகோதரர்கள் எல்லாருக்கும் அவள் அடங்காப்பிடாரி. ஆனால் அவளது அம்மாவிற்குமட்டும் தான் அவள் கடைக்குட்டி. சித்தியின் முகம் எப்போதும் எதையோ தீர்க்கமாக சிந்தித்த படியே இருக்கும். மனிதர்களின் உள்ளே என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை எல்லாரிடத்திலும் கண்டறியமுடியாது. சித்தியிடமும் கண்டறிவது சிரமம் தான். சிந்தனைகள் இவளது முகத்தில் பிரதிபலிப்பதில்லை. சலனமற்ற தண்ணீர்போல இருக்கும் முகம் அவளுடையது. அவளை ஒரு இறுகிக்கிடக்கிற பாறையைப்போல என்று நான் உணர்ந்திருக்கிறேன். அவளது புன்னகைகள் செத்துப்போய் விட்ட நந்தியாவட்டைப்பூப்போல இருக்கும். அவள் சில சம்பிரதாயங்களிற்காக வாழ்ந்து கொண்டிருந்தாள். கேள்விகள் அவளைத் துளைத்த காலம் என்றொன்றிருந்தது. கேள்விகள் அவளைச் சுற்றிலும் கேள்விகள். விடையளித்துத் தீராதகேள்விகள். அவளது விடைகளுக்குள்ளிருந்தும் முளைக்கிற கேள்விகள். கேள்விகள் ஆயிரம் கரங்கொண்டு இறுக்கத்தொடங்குகையில் அவள் ஆக்ரோசமாய் உதறுவாள். மொய்த்துக்கிடக்கும் பிள்ளையார் எறும்புகளை வழித்து எறிவது போல சித்தி கேள்விகளை உதறுவாள். எனக்கு யாரும்; தேவையில்லை என்பதுமாப்போல உதறுவாள். கொஞ்ச நாளில் கேள்விகள் சலித்துப்போயின. யாரும் அவளைக் கேள்விகளோடு நெருங்குவதேயில்லை அவர்களும் சலித்துப்போய்விட்டார்கள்.

ஆனால் அம்மம்மா எப்போதுமே அவளைக் கேள்விகளெதுவும் கேட்பதில்லை. ஆனால் எனக்குத் தெரியும் எனக்குள் நிறையக் கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தன. அந்தச் சலனமற்ற முகத்தின் தோலினடியில் உறைந்திருக்கும் கொழுப்பைப்போல அவளிடம் கேள்விகள் இருந்தன. சித்தி கடைசி வரைக்கும் அப்படியே இருந்தாள். அண்ணா தம்பி அக்கா எல்லாவற்றையும் கடந்து,வெறுத்து தனது கனவுகளை ஜெயித்துவிடவேண்டும் என்பதில் ஆக்ரோசமாய் இருந்தாள். எனக்கு சித்தியிடம் புரியாமலிருந்ததே இதுதான். யாரெல்லாம் தன்னை நேசிக்கிறார்களோ அவர்களை சித்தி ஓரங்கட்டினாள். ஆனால் யார் தன்னைப் புறக்கணித்தபடி விலகி ஓடினானோ அவனுக்குச் சித்தி இன்னமும் நித்திய காதலியாய் இருந்தாள். அவன் இனிமேல் கிடைக்கவே மாட்டான் என்பதை அறிந்திருந்தும் அறியாதவள் போல அவனைத் துரத்திக்கொண்டேயிருந்தாள்.

அவளது காதல் புரியவேயில்லை எனக்கு. அது அறிவு நிலைக்கு முற்றிலும் புறம்பானது என்கிற நினைப்பு எனக்குத் தோன்றியது. சொல்லப்போனால் அது காதலே அல்ல வெறும் காமம். அவளது பதின்மங்களில் நிகழ்ந்து போன முதல் தொடுகை அது. ஒரு தாமரைக்குளத்தில் குளித்துப்போன எருமைமாட்டுக்காக குளம் காத்துக்கொண்டேயிருக்கிறது என்றுதோன்றும். இந்தச் சிக்கலான காதல் எனக்கு ஆச்சரியமூட்டியது அவனைப்பொறுத்தவரையில் அது காதலோ அல்ல பசி உடம்புப்பசி அவளைக் கல்யாணம் கட்டுவதாகச் சொன்னால் தான் கிடைக்குமென்றால் சொல்லிவிட்டுப்போவோமே என்னவாகும் என்கிறமாதிரியான எண்ணம் அவனுடையது.அவனுக்கு மனசுக்கும் உடம்புக்குமான தூரங்கள் தெரியவேயில்லை. ஆனால் சித்திக்கு அது காதல். என்றைக்கும் தீராத காதல். அவ்வளவுதான் எருமைமாடு குளித்துப்பின் கடந்து போயிற்று. ஆனால் குளம்தான் காத்துக்கொண்டேயிருந்தது. நதியின் தடங்கள் தீர்ந்து நீர்வற்றிப்போன பின்பும் குளம் காத்துக்கொண்டிருந்தது.

அவளது பருவத்தின் கதவுகளைச் மயக்கும் சொற்கள் மூலாமாகத்திறந்து உள்நுழைந்தவனை, அவனது வருகையை அவள் இன்னமும் காதலென்று நம்பினாள். அது உண்மையான அன்பென்று நம்பினாள். இருபது வருடங்களிற்கும் மேலாய் அந்தப்பதின்மத்தின் நினைவுகள் அவளிடம் ஓடிக்கொண்டிருப்பது அதுவும் அதுதான் வாழ்க்கை என்று எந்தவித சங்கடங்களுமின்றி பின்தொடர்ந்து கொண்டிருப்பதுதான் ஆச்சரியம். அம்மம்மா அவளோடு கூடவேயிருந்தாள் எதையும் அம்மம்மா கேட்பதுமில்லை, அபிப்பிராயம் சொல்வதுமில்லை. அம்மம்மா கோயில் வைத்திருந்தாள் துர்க்கை அம்மன் கோயில். கொஞ்சம் கோபமான சாமிதான். ஆனால் சித்தி துர்க்கை அம்மனைக் கும்பிடுவதில்லை. எப்பவாவது கோயிலில் பொங்கல் பொங்கும்போது பூசைக்கு அம்மம்மாட கோயிலில் சித்தி தேவாரம் மட்டும் படிப்பாள். அது அவள் எல்லாநாட்களும் நான் அறிந்த வரையில் ஒரே தேவாரத்தைத்தான் படித்துக்கொண்டிருந்தாள். அவள் தேவாரம் படிக்கும் போதெல்லாம் ஒரு விருப்பின்மை அதில் ஒளிந்துகொண்டிருந்ததோ என்று தோன்றும் எனக்கு. ஆனால் அவளுக்கு நல்ல குரல் வளம் இருந்தது கணீரென்ற குரல். அவள் வளவுக்குள்ள இருந்த துர்க்கை அம்மனைக் கும்பிடவில்லை ஆனால் அவள் காளியைக் கும்பிட்டாள் சிவந்த கண்களும் தொங்கியநாக்கும் மண்டையோட்டு மாலையும் கொண்ட தெய்வம் காளி. துர்க்கை அம்மனைக் காட்டிலும் ஆக்ரோசமான தெய்வம். சித்தி ஏன் வீட்டிலிருக்கும் தெய்வத்தை விட்டு விட்டு காளியிடம் வேண்டுகிறாள் என்பது எனக்கு விளங்காமலிருந்தது. பிறகு என் பதினெட்டு வயசில் சித்தி என்னிடம் சொல்லுகிற வரை.

காதல் அறிவுபூர்மானதில்லை என்பதை நான் முதலில் சித்தியின் சொற்களில் இருந்துதான் கண்டடைந்து கொண்டேன். அது சில விசித்திரமான நம்பிக்கைகளும் சிந்தனைக்கோணங்களும் கொண்டது. சித்தி காளியிடம் அல்ல காளி கோயில் வைத்திருக்கும் செட்டிச்சியிடம் சரணடைந்திருந்தாள். சித்தியும் நானும் ஒருக்கா மல்லாவியில் இருந்து ஸ்கந்தபுரம்போகிற வழியில் சித்தி என்னிடம் மிக ரகசியமான குரலில் கேட்டாள். தம்பி நான் ஒரு இடத்திற்கு கூட்டிக்ககொண்டு போவன் ஆனா அம்மாக்களிற்கு இந்த விசயம் தெரியக்கூடாது. நான் சரியெண்டு சொன்னேன் சித்தி அதைச்சொல்லியிருக்கவே தேவையில்லை சும்மாவே நான் வீட்டில் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை. அன்றைக்குத்தான் நான் முதல் முதலில் செட்டிச்சியின் கோயிலுக்குப் போனேன். செட்டிச்சி தான் செய்வினை சூனியம் செய்வதிலெல்லாம் வல்லவள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். முகத்தில் மந்திரவாதிகளிற்கெல்லாம் இருக்கிற உக்கிரம். சிவந்த கண்கள், ஆளுயுரக் காளிபடம் என்று அந்த கோயிலின் சூழலே அச்சமூட்டுவதாயிருக்கும். சித்திக்கு அவளது காதலனை அடைவதற்கு கடந்த இருபது வருடங்களாக அவா செய்வினை செய்துகொண்டிருக்கிறாவாம். எனக்குச் சிரிப்பு வந்தது. ஆனால் மனசுக்குள் செய்விiனை சூனியத்தின் மீதான பயம் ஒரு ஓரத்தில் இருப்பதால் அடக்கிக்கொண்டேன். சரி இவ்வளவு காலமாக காளி ஏன் சித்திக்கு ஒண்டும் செய்யவில்லை என்று நான் செட்டிஆச்சியிடம் கேட்டேன். அதற்கு ஒரு பேச்சிரிப்பு சிரித்தா அவா. ஆத்தாக்கு விரும்பம்தான் தன்குழந்தைக்கு உதவவேண்டும் என்பது அவளுக்கு இஸ்டம்தான். ஆனா அவா களத்தில நிக்கிறா எண்டா? நான் எந்தக்களத்தில எண்டன்? செட்டிச்சி என்னை உத்துப்பாத்தா? போர்க்களத்திலயடா போர்க்களத்தில கொஞ்சம் உறுக்கிச்சொன்னா. போர்க்களத்தில நடக்கிறது மக்களோட பிரச்சினை. நாட்டுப்பிரச்சினை. இது ஆத்தாடமகளோட பிரச்சினை வீட்டுப்பிரச்சினை எதுமுக்கியம்? நாட்டுப்பிரச்சினைதானே அது முடிய அம்மா வந்து தன்ர மகளின்ர பிரச்சினையைத் தீர்த்து வைப்பா இதைச்சொல்லி முடிய செட்டிச்சி குரல் கம்மி மயங்கிவிழுந்துவிட்டார். நான் அப்பநாட்டுப்பிரச்சினை தீர்ந்ததத்தான் சித்தியின் பிரச்சினையும்தீருமோ எண்டு கேக்கநினைத்த கேள்வியை மனசுக்குள்ளேயே அடக்கிக்கொள்ள வேண்டியதாகிவிட்டது. அவாட உபதேச மொழிகளை பரவசத்தோடு கேட்டுக்கொண்டிருந்த சித்தி அவாவைத் தூக்கித் தண்ணிதெளித்து எழுப்பிவிட்டா. எனக்கு செட்டிச்சியின் தொழில் கனயோராக நடப்பதன் சூக்குமம் விளங்கிச்சுது. சித்தி கோயிலை விட்டு வெளியில வந்தோண்ண என்னிடம் கொஞ்சம் கோபமாகவே சொன்னாள் தம்பி தெய்வங்களோட விவாதிக்கக் கூடாது எண்டு. எனக்கு செட்டிச்சி குறைந்தபட்ச தொழில் நேர்மையுடன் இருப்பதாயும் பட்டது. சித்தியின் பிரச்சினை தீராது என்பதை சூசகமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறா அவா என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் அதை அப்போதே சித்தியிடம் சொல்லி அவள் கோபத்தை சம்பாதிக்க விரும்பவில்லை. நான் எதுவும் சொல்லவில்லை பேசாமல் வந்தேன்.

அதற்குப்பிறகு சித்தி அம்மாவோடு சண்டைபோட்டுக்கொண்டு போய்விட்டாள். சண்டைபிடிப்பதற்கு எளிய காரணங்கள். கறிக்கு உப்புக்கூடிவிட்டது என்பதுமாதிரியான காரணங்கள். உண்மையைச் சொன்னால் சித்திக்கு ஒரு இடத்தில் கனநாளைக்கு இருக்கமுடியாது அது அவளைச் சங்கடப்படுத்தும் தான் கல்யாணம் கட்டாமல் தனது அக்காக்களின் பிள்ளைகளிற்கு சமைத்துப் போடுவது என்பதை அவள் வெறுத்தாள். அது தனது இயலாமையைச் சொல்வதாக மற்றவர்களில் தான் தங்கி வாழ்வதாக அவள் நினைத்தாள். அது தவிரவும் மலர் இப்ப என்ன இங்கயோ? என்கிற மாதிரியான விருந்தினர்களின் இரக்கம் பொதிந்த கேள்விகளிற்கு பதில் சொல்வதற்கான சந்தர்ப்பங்களைத் தவிர்க்கவிரும்பினாள். அதனால் அவள் யார்வீட்டிலும் அதிகநாள் தங்குவதில்லை. இடம்பெயர்வுக்கு முதல் சித்தி அம்மம்மாவுடன் திருநகரில் இருந்ததால் பிரச்சினையில்லை இடப்பெயர்வுக்கு பிறகுதான் இந்தச்சிக்கல் எங்கேயிருப்பது என்கிற சிக்கல். சித்தி அம்மம்மாவையும் கூட்டிக்கொண்டு ஊர் ஊராக அலைந்தாள். ஒரு சில நாட்கள் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதே தெரியாது. பெரியமாமா அவர்களிற்கு செலவுக்கு காசுகொடுப்பதற்காக அவர்களைத் தேடித்தேடிக்கண்டு பிடித்துக்கொண்டிருந்தார். ஆனால் சித்தி இந்தப்பழக்கத்தை விடவேயில்லை. கொஞ்சநாள் எங்கேயும் சொல்லாமல்கொள்ளாமல் போய்விடுவாள் பிறகு திடீரென்று முளைத்து எதுவுமே நடக்காதது போல நாங்கள் பள்ளிக்கூடத்தால் வரும்போது பெரியம்மாவுக்கு வெங்காயம் உடைச்சுக்கொடுத்துக்கொண்டிருப்பாள். பெரியம்மா இவள் அலைகையில் எல்லாம் திட்டுவாள் ஆட்டக்காரி அம்மாவையும் கூட்டிக்கொண்டு திரியுறாள் ஒரு இடத்தில இருக்கிறாளா? அது இதெண்டு திட்டு திட்டென்று திட்டுவா. சித்தி அம்மம்மாவுக்கு செட்டிச்சியைக்கொண்டு செய்வினை செய்து மனிசியைத் தன்ர இஸ்டத்திற்கு ஆட்டுவிக்கிறாள் என்றெல்லாம் பேசுவா. ஆனா சித்தி திடிரென்று திரும்பி வந்ததும் எதுவுமே பேசாமல் இருந்து விடுவா. அதனால்தானோ என்னவோ சித்தியும் இந்தப்பழக்கத்தை விட்டுவிடாமல் இருந்தாள்.

03.
திடீரென்று ஒருநாள் நான் ரியூசன் விட்டு வரும்போது. அம்மம்மா வீட்டு முற்றத்தில் இருந்தாள். எனக்கு சித்தி இல்லாமல் அம்மம்மாவை காண்பது பெரிய விசயமாக இருந்தது. அம்மம்மாவின் சோடாபுட்டிக்கண்ணாடிக்குள்ளால் அவளது கண்களில் என்ன இருக்கிறது என்பது தெரியாமல் அவளது கண்கள் உலக உருண்டைபோல தோற்றம் காட்டியதால் நான் அம்மாவைக் கேட்கலாம் எண்டு நினைத்து போனேன். சித்தி ஆஸ்பத்திரீலயாம் அம்மம்மாவை ஆரோ கொண்டு வந்து விட்டுப்போகினம் எண்டு தங்கச்சி சொன்னாள். நான் சைக்கிள்ள ஆஸ்பத்திரிக்கு போனன். சித்தியைப் பாம்பு கடிச்சுட்டுதெண்டு சொன்னாங்கள். ஆனா உறுதியா என்ன கடிச்சதெண்டு சொல்ல முடியாம இருக்கிறதாய்ப் பட்டது. சித்தியை ஏதோ கடித்திருக்கிறது. இடப்பெயர்வுக்கு பிறகு எல்லாருடைய வாழ்க்கையும் காடுகளுக்குள் என்றுதான் ஆகிவிட்டது ஆனால் சித்தி இந்தமுறை போயிருந்ததோ பெருங்காடு ஒரு ஆயுர்வேத வைத்தியர் கூட இல்லாத காட்டுக்கிராமம். ஏதோ கடிக்க அவளை பார்வை பாக்கிற பரியாரியிட்ட கூட்டிக்கொண்டு போவதற்கே ஆட்களைத்தேடி அலைந்து கடைசியில் பரியாரியிடம் கொண்டு போயிருக்கிறார்கள். அவரது கைங்கரியங்கள் தோற்றபிறகு தான் அக்கராயன் ஆஸபத்திரிக்கு அயர் மோட்டசைக்கிளில் சித்தியைக்கொண்டு வந்திருக்கிறார்கள். நல்லவேளை சித்திக்கு விசகடி என்பதால் ஒரு கட்டில் கிடைத்தது. மற்றும்படி அங்கே கட்டில் கிடைப்பது அபூர்வம். இப்படி விசகடிக்கேசுக்கும் முதலைவாயில் ஆப்பட்டு தப்பிவந்த கேசுகளுக்கும், அல்லது செல்லடி கிபிரடியில காயப்பட்டு வாற கேசுகளிற்கம் கட்டில் நிச்சயம். விசகடிக்காரனெண்டாலும் தப்புறதுக்கான சான்ஸ் நிறையக்கிடக்கு. ஆனா முதலையிட்ட மாட்டினா கதி குளத்துச்சகதிதான்.

ஒட்டுமொத்தமா கிளிநொச்சியில இருந்த சனம்முழுக்க இடம்பெயர்ந்து வந்து அக்காராயனையும்,ஸ்கந்தபுரத்தையும் தீடீர் நகரமாக்கினார்கள். அதுகளோ தாங்களுண்டு தங்கடவிவசாயம் உண்டு எண்டிருந்த விவசாயக்கிராமம். பக்கத்திலயே யானைகள் வசிக்கும் காடு. ஆடுமாடுகள் பின்னேரம் நாலுமணியில் இருந்து றோட்டில படுக்கலாம் யாரும் கேட்பாருமில்லை றோட்டால போவாருமில்லை. கிளிநொச்சிக்கு ஆமி எப்படி திமுதிமுவெண்டு வந்தானோ? அதே மாதிரி இந்தச் சுற்றுவட்டாரக் கிராமங்களிற்கு சனங்கள் திமுதிமுவெண்டு வந்தார்கள். அந்த கிராமத்து வாசிகளின் மனங்கள் அநேகமாக அவர்களுடைய காணிகளைப்போலவே பெரிசாக இருந்தன. அவர்கள் தங்கள் காணிகளில் இவர்கள் தங்க இடம்கொடுத்தார்கள். ஆனால் ஆடுமாடுகளும் பக்கத்து காடுகளில் வசித்த யானைகளும்தான் பாவம். இந்த சமநிலை மாற்றத்தை அவைகளால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இந்தப்புதிய மண்பட்டினத்தின் ஆரம்ப நாட்களில் யானைஅடித்து நாள்தோறும் ஆட்கள் செத்தார்கள். ஆடுமாடுகள் வயல்களில் தூங்கின. ஊர்க்கிணறுகளில் நீண்ட வரிசைக்கு சனம் நிண்டது. கிணறுகள் போதவில்லை தண்ணீர் இல்லை. அக்கராயன் குளத்து முதலைகளுக்கு வரலாறுகாணாத வேட்டை. அங்கங்கே ஓரமாக குளித்துக்கொண்டிருக்கிறவரை இழுத்துப்போய்விடும். அப்போதெல்லாம் முதலை மனிதர்களைச் சாப்பிடுகிற விதம்குறித்து வாய்மொழி மூலமான ஆராய்ச்சிக்கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருந்தன. அதைப்போலவே முதலையிடமிருந்து தப்பும் வழிகளும் சொல்லப்பட்டு வந்தன. முதலை பிடிச்சிழுக்கும் போது அய்யோ என்று கத்தவே வராது வெறும் காத்துத்தான் வரும். இதுக்குள்ள முதலையின்ர வயித்தை தடவவருமே? குளத்திலும் அவ்வளவு காலமும் இல்லாமல் நிறைய விருந்தினர்கள் வந்தார்கள். குளத்தில குளிக்கேக்க முதலை வருதோ இல்லையோ வட்டக்கடி,சொறி, சிரங்கு இவைகள் கட்டாயம் வரும். சனமெண்டால் அவ்வளவு சனம். அநேகமாக எல்லாரும் அந்தக்குளத்தைத்தான் எல்லாரும் நம்பியிருப்பதால் அநேகமாக ஒரு நோய் வந்தால் எல்லாருக்கும் வருவது நிச்சயமம் அதனால் ஆஸ்பத்திரி நிரம்பி வழியும். ஆனால் மருந்துகள் தான் இருக்காது. சனங்கள் விடியப்புறம் இரண்டு மூன்று மணிக்கே ஆஸ்பத்திரிக்கு வந்துலைனில் நிக்கத்தொடங்குவார்கள் சரியாக விடிவதற்கிடையில் அப்படியே ஆஸ்பத்திரி நிரம்பி நோயாளிகளில் தீனக்குரல் அந்தப்பிராந்தியத்தையே நிரப்பும். அநேகமாக எல்லா வருத்தங்களிற்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி மருந்தையே கொடுத்துக்கொண்டிருந்தார்கள். நோயாளிகளை மருந்துகளை விட நாங்களும் மருந்தெடுத்தோம் என்கிற நம்பிக்கைதான் காப்பாற்றிக்கொண்டிருந்தது. மலேரியா வராத ஆள் ஒருத்தன் அந்தக்காலத்தில் வன்னிக்குள்ள இருந்ததாய் எவராவது சொன்னால் நான் அரைமொட்டை அடிக்கத் தயார். மூளைக்காய்ச்சல் நெருப்புக்காய்ச்சல் இப்படி டிசைன் டிசைனான காய்ச்சல்கள் வந்தன. நெருப்புக்காய்ச்சல் வந்து அங்க ஒருத்தன் செத்தானாம். மூளைக்காய்ச்சல் வந்து இங்க ஒரு பள்ளிக்கூடப்பிள்ளை செத்துட்டுதாம். இன்னொருத்தருக்கு விசராக்கினதாம் எண்டதையெல்லாம் நீங்கள் கேட்டு திகைச்சுப்போய் நிக்கத்தேவையில்லை அதுஅங்க சர்வசாதாரணம். வயித்தாலடி ஒரு ஊரில இருக்கிற கந்தசாமி அண்ணையிட கடைசிப்பெட்டைக்கு வந்தாக்காணும் அந்த ஊரில இருக்கிற வயசுபோன கிழவர் வரைக்கும் ஒரு தர்மஅடி அடிச்சுத்தான் நிப்பாட்டும். அந்த அடியோட சேத்து கிழவரின் உயிர்போகாம இருக்கிறது அவற்ற அதிஸ்டத்தைப்பொறுத்து.

சித்தி இப்ப பேசமுடியாமல் கிடந்தாள். அவளை என்ன கடித்தது என்பது அவளுக்கே தெரியவில்லை என்பதைவிட அவளுக்கு தெரியுமா என்பது யாருக்கும் தெரியாது அவளுக்கு நினைவு திரும்பவில்லை. பாம்பாக இருக்கலாம் என்று தீர்மானித்து சிகிச்சை அளித்தார்கள். திடீரென்று விசகடிக்கு குடுக்கிற மருந்து ஆஸ்பத்திரியில் முடிஞ்சு விட்டது எண்டு சொன்னார்கள். அம்மா பெரியம்மா எல்லாரும் அழத்தொடங்கிவிட்டார்கள். எல்லாம் கடந்து சித்தி மருந்தில்லாமச் சாகப்போறாளோ என்று எல்லாருக்கும் பயம். ஆஸ்பத்திரியில அந்த மருந்து ஜெயபுரம் ஆஸ்பத்திரியில இருக்குது எண்டு சொல்லிச்சினம். ஆஸ்பத்திரிக்காரரிட்ட ஒரு கடிதத்தை வாங்கிக்கொண்டு ஜெயபுரத்திற்கு அயர் மோட்டசைக்கிளில இரவு எட்டுமணிக்கு ஆனைவிழுந்தான் யானைகளுக்கெல்லாம் பயந்து கொண்டிருக்காமல் போனேன். ஆனையடிக்காமல் திரும்பிவந்தால் ஆஸ்பத்திரி வாசலில் இருக்கிற பிள்ளையார் கோவிலுக்கு ஊதுபத்தி கொழுத்துறதா வேண்டிக்கொண்டேன். கற்பூரம் அப்ப தடைசெய்யப்பட்டிருந்தது. ஆனால் ஜெயபுரத்தில் அந்த மருந்து இருக்கவில்லை. நாங்கள் திரும்பி வரும்போது மோட்டார் சைக்கிள்ள ஆஸ்பத்திரிக்கு கிட்ட இருக்கிற அம்பலப்பெருமாள் சந்தி வரும்வரைக்கும் மோட்டசைக்கிள் சில்லு தரையில் முட்டிக்கொண்டிருந்ததா என்பதை என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. பெரிய நீட்டுப்பலகை வைத்துக்கட்டப்பட்டு பின்இருக்கையில் கிட்டத்தட்ட சீற்றில் குண்டியை முட்டியும் முட்டாமலும் வைத்துக்கொண்டிருந்தேன். நாங்கள் திரும்பி வந்து அங்க இல்லை என்று சொன்னோம் மல்லாவியில் இருந்தாலும் இருக்கும் என்றார்கள். எவ்வளவு வேகமாக் கொண்டுவரமுடியமோ அவ்வளவு வேகமாக்கொண்டு வாங்கோ எண்டு சொன்னார்கள். நாங்கள் மல்லாவிக்கு வெளிக்கிடும் போது அம்மாவும் மாமான்ர மகளும் செஞ்சிலுவைச் சங்கத்துக்கு போனார்கள் அவர்கள் ஏதாவது அம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தருவார்களா? வவுனியாவுக்கு கொண்டுபோவதற்கு என்று கேட்பதற்கு . அவர்கள் வழக்கம்போலவே கொஞ்சம் இரக்கப்பட்டுவிட்டு முடியாதென்று சொல்லிவிட்டார்கள்.

பெரியமாமாவும் வவுனியாவுக்கு போனவர் வரமுடியாமல் அங்கேயே மாட்டுப்பட்டு விட்டார். சண்டை பாதைகள் பூட்டப்பட்டு விட்டன. பொருளாதாரத்தடை, மருந்துக்கு தடை, மனிதர்கள் போவரத் தடை தடையற்ற விசயங்கள் குறைவு. நாங்கள் இப்போதுதான் மருந்து பாதுகாக்கிற ஐஸ் பெட்டியைக் காவிக்கொண்டு ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாக சுத்தவில்லை. இடம்பெயர முதலும் இதே கதிதான் வீட்ட நிக்கிற நாய்க்கு விசர் பிடித்து வீட்டில எல்லாருக்கும் பாவம் புண்ணியம் பாக்காம கடிச்சப்போட்டு மாமி தண்ணிய ஊத்த செத்துப்போச்சு. மருந்தெடுக்கபோகேக்க எங்கள விட நாயில தான் கூட அக்கறையோட கேள்விகள் கேட்டினம் நாய் செத்துப்போச்செண்டோண்ண தொப்புளைச் சுத்தி ஊசி தொடர்ந்து 14 நாளைக்கு. 3வது நாளே மருந்து முடிஞ்சுது ஆஸ்பத்திரியில. அப்பயும் பெரியமாமா இப்படித்தான் அயர் மோட்டசைக்கிள்ள ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா அலைஞ்சு மருந்து கொண்டு வந்தவர்.அண்டைக்கு மட்டும் மருந்து இருந்திருந்திருக்காட்டி செல்லையற்ற பரம்பரையில் மூண்டிலொண்டு இல்லை. இப்ப மாமா வவுனியாவுக்குள்ள மாட்டுப்பட்டதால நான். சித்திக்கு மருந்து தேடி அலையுறன். ஆனா ஒண்டு மட்டும் நிச்சயம் இங்க பாம்புகடிச்சாலும் மருந்தில்ல நாய்கடிச்சாலும் மருந்தில்லை. மல்லாவியில் மருந்து இருக்கிறதெண்டு சொல்லிச்சினம் நாங்கள் வாங்கிக்கொண்டு கோட்டைகட்டின குளத்திலயும், தென்னியங்குளத்திலயும் இருக்கிற யானைகளின் மீதான நம்பிக்கையில் மறுபடியும் பறந்து வந்தோம். மோட்டசைக்கில் எத்தனை பள்ளத்தில் விழுந்ததெண்டு கணக்கேயில்லை ஏனெண்டா றோட்டே பள்ளம் தானே. நாங்கள் மல்லாவியில் இருந்து இளைக்க இளைக்க ஓடிவந்தபோது. சித்தியின் கட்டிலை காம்பிறாவை நோக்கி உருட்டிக்கொண்டு போய்கொண்டிருந்தார்கள். கடைசியில் சித்தி மருந்தில்லாமல் செத்துவிட்டாள். எனக்கு எங்களை யானை அடித்திருக்கக் கூடாதா எண்டிருந்தது.


நான் அப்பா செத்தாப்பிறகு இரண்டாவது தடவையாக வீட்டிலேயே ஒரு மரணத்தை பார்த்தேன். அப்பா சாகும் போது எனக்கு 6 வயசு மறுபடியும் பதினெட்டு வயசில் ஒரு சாவு. இந்த இரண்டு சாவுகளுக்குமே யுத்தம் ஒருவகையில் காரணம். மரணத்தின் துயரநெடி ஊர்முழுதும் விரவிக்கிடக்கிறபோது எங்களது வீட்டில் என்ன சுகந்தமா வீசும். காலம் அநியாயமாகக் ஒருத்தியைக் கொன்றுவிட்டது. எனக்கு சித்தி சாகும்போது என்ன நினைத்திருப்பாள் என்று ஓடியது. அம்மம்மாவின் துர்க்கை அம்மனைத்தான் விடு அவளது காளியாவது காப்பாற்றியிருக்கவேண்டாமா அவளை. எனக்கு அப்பாவின் மரணம் உடனடியான துக்கங்களெதையும் தரவில்லை துக்கம் நுழைகிற வயதில் நான் அன்றைக்கில்லை. ஆனால் சித்தியின் மரணம் என்னை ஏதோ செய்தது யார் மீதென்றில்லாத கோபம் மனசுக்குள் உருண்டது. காம்பிறாவுக்குள் சித்தியைப் பெட்டிக்குள் வைத்து நானும் பெரியண்ணாவும் தூக்கியபோது ஒரு பிளாஸ்டிக் பொம்மையைத் தூக்குவது போலத்தான் இருந்தாள் சித்தி அத்தனை எடைகுறைவாய். நான் முதல் முதலாய் பெட்டியைத் தூக்கினேன். அப்பாவைப் பெட்டிக்குள் பார்த்தபோது எனக்கு பிணத்திற்கு கையைக்காட்டினால் கைஅழுகிவிடும் என்கிற பயம் இருந்தது. இப்போது அழுகினால் அழுகட்டும் இருந்தென்ன எத்தனை பிணங்களைப் பாhத்துவிட்டோம் மரணத்தை தவிரவும் வேறென்ன இருக்கிறது இந்த ஊரில். செஞ்சிலுவைச் சங்கத்தில் சொல்லி சித்தியின் மரணம் கொள்ளிவைக்கவேண்டிய பெரியமாமாக்கு சொல்லப்பட்டது. கொள்ளி வைக்கவேண்டிய மாமா வரமுடியாமல் பாதைபூட்டப்பட்டிருக்கிறது யாழ்ப்பாணத்துக்கான தரைவழிப்பாதையை திறக்கிறேனென்று ராணுவம் உண்மையில் பாதையைப் பூட்டிவைத்திருக்கிறது. செஞ்சிலுவைச் சங்கத்துக்கும், இன்னும் என்னென்ன வெளிநாட்டு சங்கங்கள் இருக்கிறதோ அதுக்கெல்லாம் நாங்கள் செத்துப்போனது வவுனியாவிற்குப் போய் வரமுடியாமப்போயிருக்கிற சபாவின்ர சொந்தத்தங்கச்சி எண்டதையும் அவர் கடைசியா முகத்தை பார்க்கவேணும் எண்டதையும் அவர்தான் கொள்விவைக்கவேணும் எண்டதையும் உருக்கமா எழுதி மனுக்களாய் குடுத்தம். ஆனா ஒருத்தராலயும் அவருக்கு சித்தியின் முகத்தை கடைசியாகாணுறது என்கிற விசயத்தை செய்யமுடியாமப் போச்சுது. நாங்கள் மூண்டாவது நாளா என்னதான் போஸ்மோட்டம் பண்ணினதெண்டாலும் சித்தியின்ர பொடியை வைச்சிருக்கேலாதெண்டு ஆச்சுது.

மாமாவை எந்தச்சங்கங்களும் அவரது கடைசித்தங்கச்சிக்கு கொள்ளிவைக்கவோ? அவளது முகத்தை கடைசியாக்காணவோ உதவிசெய்யமாட்டார்கள் என்று நாங்கள் முடிவெடுத்தபோது. ஏற்கனவே அப்பாக்கு கொள்ளிவைத்து அனுபவமிருக்கிற நான்தான் சித்திக்கும் கொள்ளிவைக்கிறதென்றாயிற்று. யாரோ சித்திக்கு இப்போது பெரிய சைசில் குங்குமப்பொட்டு வைத்திருச்சினம். எனக்கு அதைப்பார்க்கிறபோது அவளது நெத்தியில் சிவப்பாய் தீ இருக்குமாப்போல இருந்தது. இதற்காகத்தானே அவள் இவ்வளவு காலமும் அலைந்தாள் இந்த அங்கீகாரத்திற்குத்தானே….. அந்தத்தீ அவளை உடலை விழுங்கித்திளைத்தது.

சுடலையால வந்து குளிச்சிட்டு எனக்கு சாப்பாடு போடும்போது பெரியம்மா சொன்னா… "இதெல்லாம் ஒரு பாக்கியம் அய்யா அவள் உன்னில பாசம்" … எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சித்திக்கு என்னில ஒரு நம்பிக்கை இருந்தது உண்மைதான். இல்லாவிட்டால் செட்டிச்சியின்ர கோயிலுக்கு என்னைக் கூட்டிக்கொண்டு போயிருக்கமாட்டாள். தான் ஏமாற்றப்பட்ட கதையை எனக்கு சொல்லியிருக்கமாட்டாள். நான் அவளுக்குச் சொல்லவேண்டும் என்று ஆசைப்பட்டேன் சித்தி நான் கடைசிவரைக்கும் அதை யாரிடமும் சொல்லவில்லை என்று. பெரியம்மா சொன்னது போல கொள்ளிவைக்கிறது பாக்கியமாவெண்டும், சித்தி என்னில பாசமாவெண்டும் எனக்கு தெரியாது… எனக்குத் தெரிஞ்சதெல்லாம் சித்தி ஆஸ்பத்திரியில் மருந்தில்லாமலுக்கு அநியாயமாச்செத்துப்போனாள் என்பதுதான்…

Wednesday, December 12, 2007

இராஜாங்கத்தின் முடிவு (சுயவாழ்வின் நிலைக்கண்ணாடி.)

01.

எதைப்பற்றியும் கவலைப்படாத ஒருவன். உலகின் எந்த நியதிகளிற்குள்ளும் சிக்கிக்கொள்ள விரும்பாதவன் இது வரையும் சிக்கிக்கொள்ளாதவன் ரவி. அவனது உலகம் பரந்துவிரிந்தது. எந்த எல்லைகளும் அதற்குக்கிடையா, கால்கள் தீர்மானிக்கும் வரை நடக்கிறவன் வயிறு இவன் சொன்னால்தான் பசிக்கும். பசிக்கும் பணத்துக்கும் இடையில் எவ்வளவு இடைவெளியிருக்கிறது என்பதை இவனைக்கேட்டால் சரியாகச் சொல்வான். அவனது இந்த திகைப்பூட்டும் இந்த உலகம் அவனது நண்பர்களாலும், அவர்களின் உதவியாலும்,கொஞ்சம் புத்தகங்களாலும் நிரம்பியிருக்கிறது. சென்னையின் நடைபாதை வாசி. வானத்தைக் கூரையாகக் கொண்டு நட்சத்திரங்களின் வண்ணங்களை ரசித்தபடி இரவுகளைக் கரைப்பவன். உலகின் அழகான விசயங்களை ஆராதிக்கவேண்டும் எல்லாவற்றையும் தன் கமராக்கண்களால் புகைப்படத்தின் சட்டகங்களிற்கள் இறுக்கிவிடவேண்டும் என்று நினைப்பவன். ஆனால் அவனுக்கு இதுவரை வாய்த்தேயிராதது காதல். காதல் மட்டுமே. பெண்களை அறியாத அழகின் ஆராதகன். இது வரைக்கும் அவன் யாரையும் காதலிக்கவும் இல்லை காதலிக்கப்பட்டதும் இல்லை. ஆனால் உள்ளுக்குள்ளே யாராலாவது தான் காதலிக்கப்பட மாட்டோமா என்று ஏங்கிக்கொண்டும் இருக்கிறான்.

வெளியூர் போகிற நண்பனின் அலுவலக அறையைப் பார்த்துக்கொள்கிற வேலை இந்த வேலைகளை வெறுப்பவனுக்கு வருகிறது. இந்த நடைபாதை வாசிக்கு கொஞ்சநாளைக்கு மின்விசிறியின் கீழ் தூங்க ஒரும் இடம் கிடைக்கிறது. தலைக்கு மேல் ஓயாமல் சுழன்று கொண்டிருக்கும் மின்விசிறியின் கீழ் அவன் மறுபடி மறுபடி கடைசி நான்கு பக்கங்களும் இல்லாத ஓரே புத்தகத்தை வாசித்துக்கிடக்கிறான். அவனையும் அவன் படுத்துக்கொண்டிருக்கும் மேசையையும் கதிரையையும் தவிர ஒரு தொலைபேசி கிடக்கிறது வெறுமனே. படம் தொடங்குகையில் அது ஒரு ஆர்ப்பாட்டமில்லாத குழந்தையைப்போல் தூங்கிக்கிடக்கும்.


இப்போது தொலைபேசியினால் அந்த ஊமை அறையின் அமைதி குலைகிறது. ஒரு அழைப்பு அது அங்கே வந்திருக்க வேண்டிய அழைப்பே அல்ல. பிறகு கொஞ்ச நேர மௌனத்துக்குப்பிறகு மறுபடியும் அழைக்கிறது. இப்போது எதிர்முனையில் ஒருத்தி. எதிர்க்குரல் யாராயிருக்கிறது என்பது குறித்த கவலைகளற்று உரையாடும் ஒருத்தி. ஆக அவள் இப்போது அழைத்திருப்பது வெறுமனே எதிர்முனையில் ஒரு குரலுக்காகத்தான். இப்படித்தான் நகரத்தின் அநேக அநாமதேய அழைப்புக்கள் நிகழ்கின்றன. யாரெனத் தெரியாத ஒருமுகத்துடன் ரகசியங்கள் திறக்கவே நாங்கள் விரும்புகிறோம். எங்களை நன்கறிந்தவர்களிடத்தில் மாய்ந்து மாய்ந்து எங்கள் வழமையான இயல்புகளை ஒழித்துக்கொண்டே அலைகிற நாங்கள் யாரேனும் நமக்கு அறிமுகமில்லா மனிதர்களெதிரில் எம் சுயம் திறக்க தயங்குவதேயில்லை. அது தான் இங்கேயும் நடக்கிறது எதிர்முனையில் குரல்தவிர்த்து வேறதுவும் அறியா அவளும் இவனும் பேசத்தொடங்குகின்றனர் விதவிதமான தொலைபேசி உரையாடல்கள் அவர்களை பிணைத்துக்கொண்டேயிருக்கிறது. அவள் அழகாககச் சிரிப்பதாக அவன் ஒரு நாள் அவளிடம் சொல்கிறாள். அவளோ அப்படி என்னிடம் சொல்லாதே என்கிறாள். இவன் அப்படி மனசில் பட்டதை சொல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்கிறான். அவள் தனக்கு நீ இப்படி எனக்கு விருப்பமில்லாததை பேசுகிற போது மனசுக்கு வருத்தமாயிருக்கிறது என்கிறாள். அவனோ யாருடைய மனசும் வருந்துவதைப்பற்றிய கவலைகள் எதுவும் எனக்கு கிடையாது என்னால் மனசில் பட்டதைச்சொல்லாமல் இருக்கமுடியாது என்கிறான் தீர்மானமாக. இப்போது அவள் அவனது இந்த முரண்நிலையை ரசிக்கதொடங்குகிறாள். எதிர்முனை பெண்ணாயிருத்தலே போதுமென்றிருக்கிற ஆண்களிடத்தில் இவன் வித்தியாசமானவன்தான் என்று சொல்கிறாள் அவள். அவன் தனக்கு புகைப்படங்கள் எடுப்பது பிடிக்குமென்றும் தன்னிடம் ஒரு கமரா இல்லையென்றும் இவளிடம் சொல்கிறான். தன்னிடம் பணம் வருகிறபோது தான் ஒரு மினோல்ட்டா கமரா வாங்க வேண்டும் என்கிற ஆசையையும் சொல்கிறான்.

அவனும் மின்விசிறியும் இதர பொருட்களாலும் ஆன அந்த அறை. இப்போது அவளது தொலைபேசி அழைப்புகளால் நிரம்புகிறது. எப்போதாவது இவன் வெளியே அலைந்துவிட்டு திரும்புகையில் தொலைபேசி குழந்தையைப்போல் வீரிட்டுக்கொண்டேயிருக்கிறது. இவன் நமட்டுச்சிரிப்புடன் மேலும் மேலும் அதனை அழவிட்டு பிறகு தூக்குவான். அந்த அழைப்பு அவளுடையதுதான் என்பதை அவன் அறிவான். அது ஒரு வகையான ஊடல். அவளது குரலில் கொஞ்சம் கோபிக்கமுடியாத பதட்டம் இருக்கும். இப்போது அவன் ஏதாவது சாட்டுச்சொல்லுவான், அவளது அழைப்புகளுக்காக தான் காத்திருக்கவில்லை என்பது போன்ற பாவனையில் பேசுவான். அதற்கு அடுத்த நாள் தொலைபேசி அழைக்காது. அந்த அறை வெறுமையால் நிரம்பும். அவன் தாங்க முடியாமல் பொறுமையின்றி இருக்கையில் நெளிவான். அவளது அழைப்புகளிற்குப்பதிலாக சிகரட் புகையினால் அந்த அறையை நிரப்புவான். கடைசி சிகரட்டின் நுனி புகைந்து கொண்டிருக்கையில் தனது மௌனத்தை கலைக்கிறது தொலைபேசி இவன் வேட்டையைத்தாக்கும் மிருகம்போலப் பாய்ந்து எடுக்கிறான் தொலைபேசியை.அவள்தான் காத்திருப்பின் வெறுமையும், தான் ஒருத்தியின் அழைப்புக்காக ஏங்குகிறோமே என்கிற அவனது வெட்கமும் கோபமாக மாற அவளிடம் சீறுவான். “என்னால் உனக்காக காத்திருக்க முடியாது. அது மிகவும் தொந்தரவாகவும் என்னைச் சிதைப்பதாகவும் இருக்கிறது” என்கிறான் அவன். அவள் தான் இனிமேல் தினமும் அழைப்பதாகச் சமாதானம் சொல்லுவாள்.


பிறிதொரு அழைப்பில் அவள் தான் ஒரு பாடல் பாடட்டுமா என்று இவனிடம் கேட்கிறாள். சம்மதிக்க பாடுகிறாள்… இவன் அந்தப்பாடலில் கரைந்து போகிறான். இவனுக்குள் உறங்கிக்கிடந்த ஏக்கங்கள் இவனைப்பிசையத்தொடங்குகின்றன. இவன் தாளமாட்டாமல் அழைப்பைத் துண்டித்து விடுகிறான். பிறகொரு அழைப்பில் இவனே மறுபடியும் அந்தப்பாடலைப்பாடச்சொல்லி கரைந்து அழுவான். ஒரு குழந்தையைப்போலவும், அவனது துயரங்களையெல்லாம் கண்ணீராய் அந்தப்பாடல் கரைப்பதைப்போலவும் அவன் அழுவான் அவளிடம் பேசமுடியாமல் தான் பிறகு பேசுவதாக இணைப்பைத்துண்டிப்பான்.

இவன் இப்போது ஒரு புதிய உலகத்துக்குள் தன்னை இழந்து விட்டவன். விட்டேத்தியாய் பற்றுகள் எதுவும் அற்று அலைந்து கொண்டிருக்கிற ஒருவன் இப்போது அவளது அழைப்புகளைப் பற்றிக்கொண்டுவிட்டான். அவற்றை நேசிக்கவும் செய்கிறான். அவளது அழைப்புகள் இல்லாத நாட்கள் இருக்கும் என்பதை அவன் இப்போது ஏற்கவும் சகித்துக்கொள்ளவும் மாட்டான். அந்த நண்பனின் இரவல் அறையில் அவனது கனவுலகம் மின்விசிறியோடு சேர்ந்து சுழன்றுகொண்டிருக்கிறது. வெளியூருக்கு போன நண்பன் மறுபடியும் நான்கு நாட்களில் வந்து விடுவதாக இவனிடம் சொல்கிறான். இவனுக்குள் இருக்கிற கனவுலகம் விரிசல் காண்பதை இவன் உணர்கிறான். அந்த உலகம் இரவல், அதன் நிரந்தரமின்மை இப்போது அவனுக்கு உறுத்துகிறது. அவனது இந்த ராஜாங்கத்தில் குரலால் மட்டுமே அவளைக்கொண்டுள்ளான் அவன். அவளது குரல் தவிர்ந்த வேறெதையும் அவன் அறியான். அவள் "ஏன் என் பெயரைக் கேட்க மாட்டீர்களா" என்றதற்கு "உனது குரல்தான் உன் பெயர்" என்கிறான். இப்போது அந்த குரல் ராஜாங்கம் மூழ்கப்போவதை அவன் அறிகிறான். இந்த இரவல் ராஜாங்கத்தின் காலம் முடிவடைந்து கொண்டிருப்பதை அவன் அவளிடம் சொல்கிறான். அவளோ உங்களின் இந்த ராஜாங்கம் முடிகிற அன்றைக்கு எனது தொலைபேசி இலக்கத்தை தருவேன் என்கிறாள். இவனோ இன்னும் ஒரு படிமேலே போய் நான் உன்னை நேரில் பார்க்கவேண்டும் என்கிறான். அவள் சம்மதிக்கிறாள். அவன் தன்னைப்பார்க்கிறபோது தான் அவனுக்கு ஒரு மினோல்டா கமராவைப்பரிசளிப்பதாக கூறுகிறாள். அவனுக்குள் அவனது ராஜாங்கம் காப்பாற்றப்படும் என்பதான நம்பிக்கைகள் வருகிறது. அப்போது அவள் தான் இரண்டு நாட்கள் அழைக்கமாட்டேன் குடும்பத்தோடு வெளியூர் போகிறேன் என்கிறாள். அவன் மௌனிக்கிறான், அந்த அறையும் மௌனிக்கிறது. அவளது அழைப்புகளில்லாத இரண்டு நாட்களின் மௌனத்தை அவனால் ஒருபோதும் தாங்கிக்கொள்ளமுடியாது. அவன் அறையின் சூன்யம் முகத்திலறைய அவளது குரலுக்கும் அழைப்புக்கும் ஏங்கி உழல்கிறான்.தொலைபேசி அழைக்கவேயில்லை ஒரு சவத்தைப்போல, கொடும்பிராணியைப்போல அவனது துயரங்களை விழுங்கிக்கொண்டு ஆனந்தித்துக்கிடக்கிறது.

அவன் மனசு அவளது அழைப்புகளைப் பிரார்த்தித்துக் கிடக்கிறது. மனசு முழுவதையும் அவளது அழைப்புக்களின் சங்கீதம் நிறைக்கிறது. அவன் அந்த அழைப்புக்களின் போதையில் மூழ்கிவிடவிரும்புகிறான். அவளது அழைப்புகளற்ற இந்த சூன்யத்தில் இருந்து தப்பிஓடிவிட முயற்சித்து முயற்சித்து இறுதியில் இயலாதவனாய் இயக்கமற்று அவளது அழைப்புகளைத் தவிர வேறnதையும் அறியாதவனாய் ஏங்கிக்கிடந்தான். மனசுக்குள் அவளது அழைப்புக்களின் மணி இப்போது கர்ணகடுரமாய் கொடும்இம்சையயாய் காலத்தின் கெக்கட்டமாய் ஒலிக்கத்தொடங்குகிறது. அவன் அந்த நினைவுகளைப் புறந்தள்ளப்பார்க்கிறான். மனம் அந்தப்புள்ளியில் அவனை அறைந்து இம்சிக்கிறது. தொலைபேசியின் அழைப்பின் ஒலி அவனது மனசை உலுக்கி இம்சித்து இம்சித்து உடலெங்கும் வியாபித்து உடலெங்கும் துயரத்தை நிரப்புகிறது. மனசே உடலாக அவன் தாங்கவொண்ணாமல் புரள்கிறான். அந்த அழைப்புகளின் இம்சை ஒலியினின்றும் தப்பிக்கும் முயற்சிகளில் தோற்று உருக்குலைந்து போகிறான். அந்த அறையின் தொலைபேசி எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருந்தது. எதையும் அவனுக்குச்சொல்லும் வழிகளெதுவும் அதனிடம் இருக்கவில்லை. அவன் தளர்ந்தான். இயலாமல் எழுந்து தீர்ந்து போய்விட்டிருக்கும் நீர்க்குவளையில் இருந்து துளிநீரைப்பருகுகிறான். இப்போது அவன் போரில் தோற்றுப்போன ஒரு ராஜாவைப் போலாகிவிட்டான்.

இப்போது மேஜைத்தொலைபேசி தன் மௌனத்தை உடைக்கிறது. அது அவள்தான். ஆனால் ஏற்கனவே குற்றுயிராய்க் கிடக்கும் அந்த அறையை உயிர்ப்பிக்க அவளது அந்த அழைப்பால் முடியவில்லை. எங்கோ குரல்களற்றவெளியில் பதுங்கிக்கொண்டு விட்ட பாடலைப்போல ஆகிவிட்டன அந்த அறையின் ஓசைகள். அவளது அழைப்பால் எதனையும் உயிர்ப்பூட்டமுடியவில்லை. அவன் அழைப்பை எடுக்கிறான் அவள் பதட்டமாய் ஏன் குரல் ஒரு மாதிரியாய் இருக்கிறது என்கிறாள் அவன் துயரச்சிரிப்பொன்றை உதிர்க்கிறான் ஏனெனில் குரல்தான் அவன் அதுதான்; அவனது உயிர். அவன் தனது ராஜாங்கம் முடிவடைந்து விட்டதாக அவளிடம் சொல்கிறான் தேய்ந்து உடைகிறது குரல். அவள் தனது தொலைபேசி இலக்கத்தை குறித்துக்கொள்சசொல்கிறாள். அவனது குரல் செத்துவிட்டது. அவளது குரல் தொலைபேசி இலக்கங்களை வெறுமனே காற்றில் இறைத்தது. அவன் தொலைபேசியை வைக்கிறான் உடல் மேசையில் சரிகிறது… அவனது குரல்ராஜாங்கம் முடிகிறது. அறை அவளது தொலைபேசி அழைப்புகளால் நிரம்புகிறது. வெளியேறிவிட்ட எதையோ நிரப்பும் முயற்சியாய்…….


02.
இது வெறுமனே தொலைபேசிக்கலாச்சாரத்தைப்பற்றிய படம் கிடையாது. இங்கே தொலைபேசி ஒருபாத்திரம். அது ஒரு நாகரீக நகர்சார்ந்த வளர்ச்சியின் அடையாளம். நகரம் எப்படி தனியன்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. உறவுகளின் பிணைப்புகளினின்றும் உதிர்ந்த ஒருவனை விழுங்கிக்கொண்டு நகரம் அவனிடம் எவற்றை நிரப்புகிறது. நகரில் அலைந்து கொண்டிருக்கும் நபர்களிடத்தில். ஏழ்மையின் துயர்விழுங்க அலையும் இளைஞர்களைப் பற்றி நிச்சயமாய் இந்தப்படம் பேசுகிறது. இதன் கதாநாயகன் நிச்சயமாய் ஒரு விதிவிலக்கல்ல என்று எனக்கு தோன்றியது. வெறுமை அறையும் தனியறையில் கடத்திய எனது நாட்களை நான் அவனது நாட்களோடு பிரதியீடு செய்து கொள்ள முடிகிறது. அவன் வேலைகளெதையும் செய்யவிரும்பவில்லை என்பதும் சமூகத்தின் மீதான கோபமே. வாழ்வின் இல்லாமைகள் அழுத்தும் வாழக்கையை நகரத்தில் எதிர்கொள்கிற ஒருவன். எல்லாவற்றையும் புறக்கணிக்கிறான். காதல், கோபம் ,வேலை இப்படி தனது இயல்பின் கைகளை முறித்து அதனைவீசியெறிந்து நடக்கிறான். அவனது எதிர்பார்ப்புக்கள் எல்லாவற்றையும் புறக்கணிக்கிற நகரத்தின் அல்லது சமூகத்திடமிருந்து இவன் எதிர்பார்ப்பதையே புறக்கணிக்கிறான். அவனது உலகமும் கனவுகளால் ஆனது அவை தூங்கிக்கிடக்கும் கனவுகள் ஒரு வறட்டுத்தனத்தில் நேசத்துக்காககவும் கவனிப்பிற்காகவும் ஏங்குகிற ஒரு தனியனின் கனவுகள். அப்படி அலைகிற ஒரு தனியனின் சிறுகனவின் வலிசொல்கிறது இராஜாங்கத்தின் முடிவு என்கிற இந்தக்குறும்படம்.

எப்போதும் மனித மனம் அன்புசெய்யப்படுவதற்காக காத்திருக்கிறது. யாரையும் நேசிக்காத அல்லது அவ்வாறு காட்டிக்கொள்கிற மனிதனின் ஆழ்மனசில் யாரலாவது தான் நேசிக்கப்படமாட்டோமா! என்கிற நினைப்பு சதா உருண்டுகொண்டேயிருக்கிறது. ரவியும் அப்படிப்பட்ட ஒருவன்தான். இந்த நகரங்களில் அலைந்து கொண்டிருக்கும் இளைஞர்களின் ஒருபிம்பம் ரவி. தனிமை ஒருவனை செதுக்குகிறது. யாரோடும் பகிர்ந்துகொள்ளமுடியாத துயரங்களை மனசுக்கள் இறுக்கியபடியே இருக்கிறது. துயரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் நேரமில்லாததாய் ஆகிவிட்டிருக்கிறது வாழ்க்கை.

ரவிக்குத்தெரியும் இந்த உலகம் துயரங்களால் நிரம்பியதென்று. அது ஏதிலிகளிற்கு எதையும் தருவதுமில்லை அவர்களை ஏற்றுக்கொள்வதமில்லை. அவன் போட்டுக்கொண்டிருப்பது வேசம். எதனையும் புறக்கணிக்கிறவேசம். சாதிக்கவேண்டும் என்று எல்லாவற்றின் மீதும் இருக்கிற ஆசையை புறக்கணிப்பு என்கிற போர்வையால் போர்த்திக்கொண்டிருக்கிற வேசம். எதனைப்பற்றியும் எனக்கு கவலைகள் கிடையாதெனச்சொல்வது தப்பிக்கும் அவனது வழிகளில் ஒன்று. உண்மையில் ரவி பற்றிக்கொள்ள எதையாவது தேடுகிறான் அவன் மனம்விரும்பியபடி ஆனால் கிடைப்பதென்னவோ வெறுமைதான். எதிர்பார்ப்புகளும் கனவுகளும் நிறைந்ததுதான் அவனது வாழ்க்கையும் எல்லாரையும் போலவே நமக்குள்ளும் நிறையரவிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நகரச்சூழலில் தனித்துவசிக்கிற மனங்களின் கண்ணாடி அருள்எழிலன் இயக்கிஇருக்கிற இந்தப்படம். இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முந்தைய இந்தியாவில் பிறந்தமிகச்சிறந்த உருது மொழி கலைஞன் சதத் ஹசன் மண்டோவின் சிறுகதையை தழுவிஎடுக்கப்பட்டிருக்கிறது.

தனது கனவுகளை அடையும் வழிகள் ஏற்கனவே இந்த நியாயமற்ற மனசற்ற சமூகத்தின் கரங்களால் அறைந்து சாத்தப்பட்டிருபதை தாங்கமுடியாமல் உங்ளுக்குள் புழுங்கிக்கிடக்கிற ஒருவனது வலிமிகஅற்புதமாக வெளிப்படுகிறது. அந்த புழுக்கம்தான் அவனது புறக்கணிப்பு. அவன் தனக்கு ஒரு காதலிகிடைத்தால் தனதுவாழ்க்கையே மாறிவிடும் என்கிறான்.இந்த சமூகத்தின் எல்லாவற்றையும் ஜீரணித்துக்கொண்டு ஐக்கியமாகிவிட அவன் தயாராகத்தான் இருக்கிறான். ஆனால் காதலைக்கூட அவளிடம் தான் சொல்ல மாட்டேன் அவளாகவே வந்து சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறான். அவனுக்கு பயம் தொடர்ச்சியான புறக்கணிப்புகளால் ஏற்பட்ட பயம். மேலும் மேலும் தொடர்ச்சியாக புறக்கணிப்புகளை சம்பாதித்து விட அவனுக்கு விருப்பம் கிடையாது அதனால் அவன் எதையும் நெருங்குவதுமில்லை. எல்லாவற்றினின்றும் ஒதுங்கியிருக்கிறாள். இப்படித்தான் நிறையப்பேர் துவண்டு போயிருக்கிறார்கள். நகரத்தின் அன்பற்ற பெரும்சிக்கி தூக்கிஎறியப்பட்டவனின் மனோநிலை இது. புறவாழ்வு சுயங்களைச்சாப்பிட்டுவிட வெறும் கூடாகிய நிலை. அப்படிப்பட்ட பாத்திரம் தான் ரவி அவனுக்கு பற்றிக்கொள்ள கிடைக்கிற ஒரு வாய்ப்பில் அவன் உடைந்து போய்விடுகிறான் அவன் ஏங்கியது அவனுக்கு கிடைக்கிறபோது அவன் அதை இறுகப்பற்றிக்கொள்கிற மனோநிலைக்கு வருகிறான். சிறு பரிவும் அவனை உருக்குலைத்து சிதைத்து அவனைத் தின்றுவிடுகிறது. இது ரவிக்கு மட்டுமல்ல நிறையப்பேருக்கு நிகழ்கிறது. அன்றாடம் புறவிழிகளுக்கு புலப்படாத நிறைய ரவிகளின் ராஜாங்கம் முடிவடைந்துகொண்டேயிருக்கிறது.


குறைந்த வசனங்களாலும். அளவான நடிப்பாலும் (ஒருசில இடங்களைத்தவிர) இந்த குறும்படத்தை நடித்து இயக்கி செதுக்கியிருக்கிறார் இயக்குனர் டி.அருள்எழிலன். ஒரு பத்ததிரிகையாளரான அருள்எழிலன் ஒரு தேர்ந்த இயக்குனராகவும் நடிகராகவும் நிச்சயமாக ஒரு அற்புதமான படைப்பை கொடுத்திருக்கிறார். சுயவாழ்வின் கண்ணாடியாய் நம்பிம்பங்கள் தெரியும் தமிழின் சிறந்த குறும்படங்களில் ஒன்று, அருள்எழிலன் இயக்கிய இராஜாங்கத்தின் முடிவு.
இயக்குனர் பற்றி
அடிப்படையில் ஒரு பத்திரிகைக்காரரான இக்குறும்படத்தின் இயக்குனர் அருள்எழிலன். ஆனந்தவிகடன் வார இதழில் பணியாற்றுகிறார். அவர் தனது படைப்பு குறித்து இப்படிச்சொல்கிறார்.
"ம‌னித‌னின் பிற‌ப்பிற்கு எவ்வித‌ கார‌ண‌ங்க‌ளும் எப்ப‌டி இல்லையோ அப்ப‌டித்தான் ம‌ர‌ண‌மும் அதுவும் கார‌ண‌ங்க‌ள‌ற்ற‌து. நக‌ர‌ம் எப்போதும் இசைக்கும் மாய‌ப்புல்லாங்குழ‌லின் இசையில் க‌ன‌வுக்கும் வாழ்வுக்கும் இடையில் ந‌ட‌க்கும் போராட்ட‌ம‌ல்ல‌ அனுப‌வ‌மே இந்த‌ ப‌டைப்பு.."


குறும்படத்தின் இயக்குனர் டி.அருள்எழிலன்

குறும்படத்தை இணையத்தில் பார்க்க