Friday, September 28, 2007

"எத்தினை பேர்ரா? ஒருத்தன்தாண்ணே" - மலைக்கோட்டை விமர்சனம்.

ஏய்!!!!!!!
சர்புர் என்று பறக்கும் டாடாசுமோக்கள்.. மற்றும் இதர கறுத்தக்கலர் புதியவாகனங்கள் எல்லாம் டயர் கிறீச்சிட நிற்க மூட்டை மூட்டையாய் குண்டர்களோடு வந்து இறங்குகிறார் வில்லன். சோவெனக் கொட்டுகின்ற மழை சட்டென்று ஒரு கொலை. முதல் 2 நிமிடத்திலேயே வெறுத்து விட்டது எனக்கு அடடா தெரியாம நுழைஞ்சுப்புட்டியேடா...

இயக்குனர் பூபதிபாண்டியனின் இதற்கு முந்தைய படமான திருவிளையாடல். பரவாயில்லை நிறைய காமெடி இருந்தது சலிக்காமல் ஒரு முக்கால்வாசிப்படமாவது பார்க்கக்கூடியமாதிரி இருக்கும். அதே நகைச்சுவையை எதிர்பார்த்து போனேன். கொஞ்சநேரமாவது சிரிச்சிக்கிட்டு இருக்கலாமேன்னுட்டு. கவுத்துப்புட்டார் பூபதிபாண்டியன்.

ஊரையே கலக்குகிற வழமையான வில்லன் அவருக்கு ஒரு பாசக்காரத் தம்பி. (இப்ப எல்லாம் ஹீரோக்களை விட வில்லன்களிற்குத்தான் தனது உடன்பிறப்புக்களிற்காக துடித்துப்போகிற சான்சைத்தருகிறார்கள் இயக்குனர்கள்.)

“எத்தினை பேர்றா? என்று அடிபட்டுக்கிடக்கும் தம்பியைப்பார்த்து பதறியபடி வில்லன் கேட்க. “ஒருத்தன்தாண்ணே”
என்று பதுங்கியபடி எல்லாப்படங்களிலும் அடியாட்கள் சொல்கிற மாதிரி ஒரு வீரமான கதாநாயகன்.

தனது சொந்த ஊரில் ஒரு சிமோல் வில்லனோடு தனது வீரத்தைகாட்டி அதனால் கைதுசெய்யப்பட்டு தினமும் கையெழுத்திடுவதற்கு திருச்சிக்கு போகிறார் ஹீரோ. அங்கே காக்காய்க்கு சோறு போடுகிற பரியாமணியைப்பார்த்ததும் கட்டினால் இவளைத்தான் கட்டுவேன் என்று உறுதி எடுத்துக்கொண்டு ஊரிலுள்ள காக்காய்களிற்கெல்லாம் சோறுவைத்துக்கொண்டு திரிகிறார். (காண்பர்களிடமெல்லாம் காக்காய்களிடம் இரக்கம்காட்டுமாறு கருணை மனு வேறு) ஆனால் அப்பாவின் ஆபரேசன் செலவுக்கு சேர்த்த பணத்தையெல்லாம் படிப்புச்செலவுக்காக கட்டி அப்பா இறந்தபிறகும் படித்துக்கொண்டிருக்கிற பிரியாமணிக்கோ இவரது காதலை ஏற்றுக்கொண்டால் எங்கே தன்படிப்பு பாழாகிவிடுமே என்கிற பயம். மறுக்கிறார் நம்ம ஹீரோ கேட்காமல் மறுபடியும் பிரியாமணியைக்காக்காய் பிடிக்க அவரோ இவரிடமிருந்து தப்பிக்க நான் வேறொருத்தரை காதலிக்கிறேன் என்கிறார். உடனே புரட்சித்தளபதி சோகமாகி (அதாங்க நம்ம விசால்) யாரது என்னை ஜெயித்து உங்க மனசில இடம்பிடிச்சவர் அவர் காலைத்தொட்டு கும்பிடணும் என்று தத்துவமெல்லாம் பேச. பிரியாமணி கைகாட்டியதோ வில்லனின் உயிருக்குயிரான தம்பி..!!! நம்ம ஹீரோ அப்பாவியாய் !! அவரிடம் போய் வாழ்த்துச்சொல்ல அவருக்கு பிரியாமணிமேல ஒரு இது வர.. வில்லன்தம்பி பிரியாமணியை விரட்டோ விரட்டென்று விரட்ட..... அவர் விசாலிடம் நான் சும்மாதான் சொன்னேன் நான் யாரையும் காதலிக்கவில்லை என்று அபயம் புக.. பிறகென்ன

“ஏய் உன்னை விடமாட்டன்ரா”
“அடிங்கடா அவனை”
தூக்கிட்டு வாங்கடா அவனை/ளை என்று”
திரை இரைச்சல்களால் நிரம்புகிறது. கடைசியில் என்னவாகிறது இதெல்லாம் நான் சொல்லியா தெரியணும் நம்ம ஹீரோதான் கெலிச்சார்னு.

முதல்பாதியில் காமெடி இருக்கிறது என்று சொல்லலாம். விசாலுக்கு கொஞ்சம் பொருந்தித்தான் இருக்கிறது காமெடி. விசால் இன்னொரு விஜய் ஆகிற முயற்சியில் இருக்கிறார் என்பது தெரிகிறது."புரட்சித்தளபதி" என்கிற அடைமொழி எரிமலைக்குழம்பாய் திரையில் வழிகிறது.(ரொம்ப மினக்கெடுகிறார்) அவரது ஸ்டைலும் கொஞ்சம் போக்கிரி விஜயை ஞாபகப்படுத்துகிறது.

அடடே முத்தழகுவா இவர். பருத்திவீரனில் பார்த்ததுக்கு மொட்டை அடிக்கலாம் போல. அப்படி ஒரு ஆளாக வருகிறார் பரியாமணி. அவரும் ஹீரோவும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகமலே இரண்டு பாட்டுக்களிற்கு ஆடிவிடுகிறார். பிறகு காக்காய்க்கு சோறு வைக்கிறார். இரண்டு மூன்று சீன்களில் அழுகிறார் அவ்ளோதான். (அமீர் பார்த்தா ரூம்போட்டு அழுவார்) பாடல்காட்சிக்களில் ஏகத்துக்கும் ஏறிக்கிடக்கிறது ஆடை அப்டியே மெயின்ரெயின் பண்ணவேண்டும் அம்மணி என்று இறைவனை வேண்டுவோம்.

போக்கிரிக்கு பிறகு மறுபடியும் தாளமிட வைத்திருக்கிறார் மணிசர்மா. “ஆத்தா ஆத்தோரமா வாறியா” இன்னும் கொஞ்சநாளைக்கு சேனல்களில் போட்டு கிழிக்கப்படும். “தேவதையே வா வா” நல்ல கவித்துவமான மெலடி. யுகபாரதியின் பேனா பூபதிபாண்டியனுக்கு கொஞ்சம் ஓவர்ரைம் வேலைதான் செய்கிறது போல.

ஆசிஸ் வித்தியர்த்தியை ஒரு கூச்சலுடன் பார்க்கையில் இருக்கிற வில்லன் போதாதுண்னு இவர் வேறயா என்று தோன்றுகிறது. பிறகு அட இவர் வில்லனில்லையா என்று மனசுக்குள் வருகிற நிம்மதியை காப்பாத்துகிறார் மனுசன். ஆசிசும் ஊர்வசியும் வருகிற சீன்கள் செமகாமெடி அதுதான் படத்தை கொஞ்சமேனும் நிமிர்த்துகிறது. இதில் ஏகத்துக்கு இரைச்சல் போட்டுக்கொண்டிருந்த வில்லன்களையெல்லாம் கொண்டு வந்து காமெடி பண்ணவைத்திருக்கிறார் இயக்குனர் அதிலே பொன்னம்பலமும் ஒருவர் அவருல்லாம் ஏன்வாறார் என்ன பண்றார் ஒண்ணுமே விளங்கலே படத்துல .. பூபதி பாண்டியன் காமெடியை கைவிட்டு கொஞ்சம் அடிதடிக்கு முயற்சிக்கிறார் போல சரியா வரல்ல அவருக்கு..வேற எதுனாச்சும் முயற்சிக்கலாம்.


நானும் எனது கருத்துக்களை படத்தின் பின்பாதி மாதிரி குழப்பாம இழுக்காம முடிச்சுக்கிறேன்.
மலைக்கோட்டை வழக்கமான தமிழ்சினிமா மல்லுக்கட்டு. நான்தான் கொஞ்சம் வாய்விட்டு சிரிக்கலாம்னு (காமெடி படமா இருக்கும் எண்டு) பூபதிபாண்டினை நம்பிப் போய் பாத்து ஏமாந்துட்டேன்... பாருங்க மக்களா ஆனா என்ன மலைக்கோட்டை படத்தை திரை அரங்க இருக்கைகளோடு கொஞ்சநேரம் மல்லுகட்டி பொறுமையா இருந்தாத்தான் முழுசா பார்க்கலாம்.....

இனி உங்க இஸ்டம்...

Thursday, September 13, 2007

சொற்களைத் திருடிய வண்ணத்திகள்....



நான்கு சுவர்களும்
மௌனித்திருந்த ஒருநாளில்
எதை எழுதுவது
எனத் தெரியாது விட்டு வைத்த
என் நாட்குறிப்பின்
இப்பக்கங்களில்
இப்போது நான்
உன் மௌனத்தை எழுதுகிறேன்.


உன்மௌனம்….
ஜன்னலின் விளிம்புகளிற்குள் சிக்கிய
குரலோய்ந்த கடலைப்போலிருக்கிறது….

உன்
கண்களிடமிருந்து
வண்ணத்துப்பூச்சிகளைச் சிறைமீட்ட
அந்த முத்தத்தின் முடிவில்..
நமக்கான சொற்களையும்
திருடிக்கொண்டு…
தம் சிறகுகளால்
காலத்தை கடந்தன வண்ணத்திகள்…

என்ன சொல்வது
உன்
மௌனங்களைப்பற்றி
எழுத நேர்கையில்
முத்தங்களைப் பற்றியும்
எழுதவேண்டியிருப்பதை….

Friday, September 07, 2007

சாத்தானுடன் போகும் இரவு



சாத்தான்கள்
ஊருக்குள்திரும்பின.
சாத்தான்கள் எப்போதும்
புன்னகைகளை
வெறுப்பவை..

பகலின் நிறம் மரணம்
இரவின் நிறம் பயம்
என்றாகியது
நாள்.

ஊர்
பகலில் இறந்தவனை
அடக்கம் பண்ணிவிட்டு
இரவில் அடுத்தசாவிற்கு
காத்திருக்கலாயிற்று.

பாதித்தூக்கத்தில்
அடித்து எழுப்பப்பட்ட
வெறியில்
அலைந்தன சாத்தான்கள்.

இரவுக்குக் கைகள்
முளைத்தது..,

கேள்விகளற்ற
வெறுங்கணத்தில்
இரவின் கரங்களில்
கோடரிகள் முளைத்தன..,

மனிதர்களைத்
தறித்து விழுத்தியபடி
தனது நிறத்தை
ஊரெங்கும் பூசிச்செல்கிறது
இரவு


விடியலில்
உருவங்களின் கரங்களில்
இருந்தது
இரவின் கோடரி.

சூரியனைப்போர்த்தபடி
கேள்விகளற்று
நடந்துபோகிறது
இரவு சாத்தானுடன்.

Thursday, September 06, 2007

மக்கள் தொலைக்காட்சி வன்னியில் இருந்து ஓர் பார்வை...

தமிழிலான தொலைக்காட்சிகளுக்கான முன்னோடி
மக்கள் தொலைக்காட்சி.
ஈழம் வன்னியில் இருந்து - கருணாகரன்


தமிழ்ச்சினிமா இல்லாமலே தமிழில் ஒரு தொலைக்கட்சி வந்திருக்கு. தமிழிலேயே நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் அறிவிப்பாளர்களும். அத்துடன் தமிழ் நிகழ்ச்சிகள். தமிழ் நிலப்பரப்பின் காட்சிகள். தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகள். பிரந்தியப் பேச்சு மொழிகள். இப்படி தமிழ்க்காட்சியூடகங்களில் மாறுதலான ஒரு புதிய தொலைக்காட்சியாக இப்போது அறிமுகமாகியிருக்கிறது மக்கள் தொலைக்கட்சி.

சினிமா இல்லாமல், சினிமாக்காரரே இல்லாமல் இந்தத்தொலைக்காட்சி வெற்றிகரமாக இயங்கிவருகிறது. இது நம்பமுடியாத ஆச்சரியந்தான். தமிழகத்திலிருந்து சினிமாவையே மையமாகக்கொண்டு பெருந் தொலைக்காட்சிகள் இயங்கிவரும் சூழலில், அதிலிருந்தது மாறி தமிழ் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் விதத்தில், மக்கள் தொலைக்காட்சி சவாலாக இயங்குகிறது. இது தொலைக்காட்சிப் பார்வையாளர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவத்தைத்தரும் ஒரு வேறுபட்ட நிலை.

தமிழ் வாழ்வையும் தமிழ் மண்ணின் அடையாளத்தையும் மீள் உருவாக்கம் செய்யும் முனைப்போடு இயங்குகிறது இந்தத்தொலைக்காட்சி. கவனிக்கப்படாதிருக்கும் தமிழ் அடையாளத்தின்மீது ஒளிபாய்ச்சும் பெரு முயற்சி இது. இது மிகச்சவாலானது. ஒரு பாரம்பரியமாக சினிமாவை மையமாகவே வைத்து சனங்களை அதுக்கேற்றமாதிரி உருவாக்கியிருக்கும் தொலைக்காட்சிகளின் மத்தியில் இவ்வாறு சோதனை முயற்சியைத் தொடங்கி அதில் வெற்றி பெறுவது சிரமமானது. ஆனால் வெற்றி பெற்றிருக்கிறது மக்கள் தொலைக்காட்சி.

இப்படி ஒரு தொலைக்காட்சி தமிழில் ஒளிபரப்பாகிற செய்தியே பலருக்குத்தெரியாது. அதுவும் தமிழ்ச்சினிமா இல்லாமல் ஒரு தமிழ்த்தொலைக்காட்சியா என்று அவர்கள் ஆச்சரியப்படவும்கூடும். சினிமா இல்லாத தொலைக்காட்சியைப்பார்க்க முடியுமா என்று அவர்களால் கற்பனைகூடப்பண்ண முடியாது. ஆனால் மக்கள் தொலைக்காட்சி சினிமா இல்லாமலே தொய்ந்து போகாமல் விறுவிறுப்பாக இயஙகுகிறது. தமிழில் ஒரு நல்ல தொலைக்காட்சி வராதா என்று ஏங்கியவர்கள் மகிழக்கூடியமாதிரி இந்தத் தொலைக்காட்சி இருக்கிறது.

மூன்றாம் உலக நாடுகளில் அடையாளங்களைக் காப்பாற்றுவதற்கான எத்தனங்கள் தீவிர சவாலுக்குரியவை. உலகமயமாதல் என்ற பெரும் அலைக்குள் அடையாளங்களைக் காப்பாற்றுவதே ஒவ்வொரு மனிதனுக்குமுள்ள தீரா நெருக்கடி. இதுவே இன்று சமூகங்களின் இருப்புக்கும் விடுதலைக்குமான பெரும் சவால். இந்தப்போராட்டத்தில் ஈடுபடுகிறது மக்கள் தொலைக்காட்சி.

தமிழ்நாட்டின் நிலக்காட்சிகளை மக்கள்தொலைக்காட்சி காண்பிப்பதிலிருந்தே இந்த மாறுதலைக்காணலாம். வெவ்வேறான நிலக்காட்சிகள் சங்க இலக்கியத்தில் திணைகளாக பதியப்பெற்றிருக்கின்றன. இந்தத்திணைகளை நவீன இலக்கியம் இன்றைய வாழ்வினூடாக காண்பிக்கின்றது. வட்டார வழக்கென்றும், பேச்சு மொழியென்றும் அது பலநிலைகளிலும் பல முகங்களோடும் அறிமுகமாகயிருக்கிறது.

குறிப்பாக நாவல்களில் இந்த அடையாளம் தெளிவாகியிருக்கிறது. ஆனால் இலக்கிய வாசகர்களுக்கப்பால் இந்தமாதிரி விசயமெல்லாம் பொதுப்பரப்பில் சனங்கள் அறிந்ததில்லை. இப்போது காட்சியூடகத்தின் வழியாக இது அறிமுகமாகும்போது இதன் ஆழமும் பெறுமதியும் அதிகமாகிவிடுகிறது. இதுவரையிலும் பார்வைப்பரப்பிலிருந்து பெருங்காட்சியூடகங்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்த கவனிக்கப்படாத வெளி அதன் மெய்த்தோற்றத்தோடு அறிய வாய்த்திருக்கிறது.

இந்தத்திணைகளின் மனிதர்களுடைய வாழ்க்கையும் அவர்களின் பண்பாடும் இன்னும் குலையாதிருக்கிறது என்பதை மக்கள் தொலைக்காட்சி சாட்சிபூர்வமாகச் சொல்கிறது. நகர்மயமாதல் என்பது இன்று உலகமயமாதலை எந்தக்கேள்வியும் எதிர்ப்புமின்றி முழுமையாக அங்கீகரித்தல் போலாகிவிட்டது. கல்வி தொடர்பாடல், வசதிவாய்ப்புகள் எனச்சகலதும் இருந்தும் சுய அடையாளத்தைக் காப்பாற்ற முடியாதிருக்கும் நகர்வாசிகளை விடவும் இந்த வாய்ப்புகள், கல்வியறிவு என்பன இல்லாத கிராமவாசிகள் சுய அடையாளத்தோடு இருக்கிறார்கள். இதை மக்கள் தொலைக்காட்சி தெளிவாக்கியிருக்கிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால் மக்கள் தொலைக்காட்சியின் பார்வையாளர்களும் பிரதானமாக கிராமவாசிகளாகவே இருக்கிறார்கள். நகர்வாசிகளின் பார்வைப்பரப்பும் ரசனையும் சன் ரி.வி, ஜெயா ரி.வி என்பவற்றால் இறுக்கமாகக் கட்டமைக்கப்பட்டுவிட்டன. அந்தத்தொலைக்காட்சிகளின் சினிமா சார்ந்த அம்சங்களுக்கப்பாலான தெரிவை அவற்றின் பார்வையாளர்களாகிய நகரவாசிகள் அறியமுடிவதில்லை. இங்கே கிராமம், நகரம் என்ற பிரிப்பை நாம் செய்யவில்லை. உள்ள யதார்த்த நிலைமையே சுட்டிக்காட்டப்படுகிறது.

மக்கள் தொலைக்காட்சி தமிழ் வாழ்க்கையை மையப்படுத்தும்போது அது தவிர்க்கமுடியாமல் கிராமியத்தன்மையைப்பெற்றுவிடுகிறது. அதற்காக அது முற்றுமுழுதாக கிராமத்துக்குள்தான் சரணடைந்திருப்பதாகவும் கொள்ளமுடியாது. தமிழ் அடையாளம் என்பது கிராமங்களில்தான் இன்னும் குலையாதுள்ளது. அதனால் அந்த வாழ்வைத்தேடிச் செல்லும்போது கிராமங்கள் முதன்மைபெறுகின்றன.

இதுவரையிலும் கிராமங்களைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதோடு மட்டும் நின்ற பெருங்காட்சியூடகங்களுக்கு இதுவொரு பெரும் சவாலே. பெருங்காட்சியூடகங்கள் கிராமங்களை வேடிக்கைப்பொருளாகவும் பயன்படுத்தல் என்ற நிலையிலுமே பயன்படுத்தி வந்தன. அல்லது அவ்வாறுதான் கொண்டு வந்தன.

ஆக பெருங்காட்சியூடகங்களில் அடையாளங்களைப் பேணவேண்டும் என்ற பிரக்ஞை கிடையாது. அவை முற்று முழுதாக வணிக நலனை மட்டுமே நோக்காகக் கொண்டவை. வணிகத்துக்கு எது அதிக சிரமமில்லாது கூடுதலான ஆதாயத்தைத்தருகிறதோ அதையே அவை பின்பற்றும். அடையாளங்களைப் பேணுவதென்பது இன்றைய நிலையில் பெருஞ்சவாலுக்குரியவை. அதேவேளையில் அது அதிகக் கவர்ச்சியும் இல்லாதது.

எனவே பெருங்காட்சியூடகங்களின்; வழங்கல் வணிகத்துக்கிசைவான கவர்ச்சித்தன்னையைக் கொண்டிருப்பதால் அந்த ஊடகங்கள் இலேசாக பார்வையாளர்களைத் தொற்றிக்கொள்கின்றன. தமிழ்ச்சூழலில் சினிமா என்ற பெருங்கவர்ச்சிப்பண்டம் ஏற்கனவே நன்றாக வேரோடியிருப்பதால் அதை மையமாக வைத்து இந்தப் பெருங்காட்சியூடகங்கள் தம்மை வடிவமைப்பதால் இன்னும் அதிக பலத்தை இவை பெற்றுவிடுக்ன்றன. இநத ஊடகங்கள் எவ்வளவுக்கு கூடுதலாக பலம் பெறுகின்றனவோ அந்தளவுக்கு இவற்றின் பார்வையாளர்களின் பலம் குறைவடைகின்றது.

ஒரு சரியான ஊடகப்பாரம்பரியத்தில் ஊடகமும் அதன் நுகர்ச்சியாளரும் சமநிலையிலும் சம பலத்தோடும் இருப்பது அவசியம். நுகர்ச்சியாளரின் அறிவுத்தரத்தை அந்த ஊடகம் உயர்த்தும்போது இந்தச் சமநிலை உருவாகிறது. ஆனால் தமிழ்க்காட்சியூடகம் என்பது அது சினிமாவாக இருந்தாலும் தொலைக்காட்சியாக இருந்தாலும் அவற்றின் பார்வையாளர்கள் அறிவாலும் பொருளாதாரத்தாலும் சமூகநிலையிலும் சுரண்டப்படுகிறார்கள். ஒரு மாஜ உலகிற்கு மக்கள் அழைத்துச்செல்லப்பட்டு இந்தச்சுரண்டல் நடக்கிறது.

மக்கள் தொலைக்காட்சி இந்தப்பாரம்பரியத்திலிருந்து முற்றாகி விலகி மக்களை அறிவூட்டி, அவர்களைப்பலம் பெற வைக்கும் ஊடகப்பாரம்பரியத்தில் இயங்குகிறது. இதனால் அது பலவற்றிலும் சில அடிப்படைகளை உருவாக்குகிறது. முதலில் அது தமிழ்ச்சினிமாவை, அதன் உழுத்துப்போன தனத்தை நிராகரித்து விட்டது. ஆனால் நல்ல சினிமா பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. தவிர, தமிழ் வாழ்வு என்று அடையாளம் காணும் விசயங்களை அது நிகழ்ச்சிகளாக்கி தன்னுடைய பார்வையாளருக்குக்கொடுக்கிறது.

தமிழ்ச்சினிமாவில் பொரும்பாலானவை ஏதொவொரு வகையில் கிராமக்காட்சிகளையும் அந்த மக்களின் பேச்சுமொழியையும் தவிர்க்கமுடியாமல் எடுத்தேயாள்கின்றன. பாடல்காட்சிகள், அவற்றுக்கான உடைகள், நகைச்சுவைக்காட்சிகள், அந்த நடிகர்களின் பேச்சு மற்றும் அங்க அசைவுகள் எல்லாமே கிராமத்தை ஆதாரமாகக்கொண்டவை. ஆனால் அந்த வெளிப்பாடு வணிகரீதியானது. அது ஒரு போதும் அடையாளங்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற பிரக்ஞையோடு அணுகப்படவில்லை.

மக்கள் தொலைக்காட்சியின் ஆதாரம் தமிழ் வாழ்வின் அடையாளங்களையும் யதார்த்தத்தையும் மையமாகக் கொண்டிருப்பதால்; இதன் தயாரிப்புத்தளம் அந்த அடையாளங்களோடு வாழும் மக்களும், அவர்களின் வாழிடமும் எனவாகிறது. எனவே இதன் பார்வைப்பரப்பும் கிராமம் சார்ந்த மக்கள்தான். ஏனெனில் இந்த மக்கள் தங்கள் வாழ்வையும் தங்களின் நிலத்தையும் அதன் யதார்த்தத்துடன பார்க்க விரும்புகிறார்கள. அவர்கள் தங்களின் வாழ்க்கையையும் நிலப்பரப்பையும் முதற்தடவையாகப் பார்க்கிறார்கள். ஆங்கிலம் கலக்காத தமிழ் நிகழ்ச்சித்தொகுப்பாளர்கள்வேறு இதில் இருப்பதால் மேலும் அவர்களால் நெருக்கம் கொள்ள முடிகிறது. அத்துடன் தாங்களே நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களாவும் நிகழ்ச்சிப்பங்கேற்பாளர்களாகவும் இருக்கிறார்கள்.

அறிவுபூர்வமாக பார்வையாளர்களை அணுகவேண்டும் என்ற அடிப்படை இங்கே பேணப்படுகிறது. நிகழ்ச்சித்தயாரிப்பாளர்களும் சமூகப்பொறுபபுடன் இருக்கவேண்டும். பார்வையாளர்களும் அறிவுபூர்வமாக மாறவேண்டும் என்ற சமநிலைப்பயணம் இங்கே நிகழ்கிறது. மக்களின் வாழ்க்கையை படைப்பாக்கம் செய்வதன்மூலம் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் பெறுமானத்தையும் சமூகவியல் பெறுமானத்தையும் இதன்மூலம் வழங்கமுடிகிறது. இங்கே புனைவுக்கு அதிகம் இடம் குறைவு. கிராமிய, நாட்டாரியல் கலை அம்சங்கள்தான் இவற்றின் புனைவுவெளியாகின்றன. அப்படியென்றால் இதில் நவீன புனைவு வெளிக்கு இடமில்லையா? இருக்கு. அறிவுமயமாதலிலான அணுகுமுறையில் அது அதற்குரிய யதார்த்தத்தில் உருவாகும்.

மக்கள் தொலைக்காட்சியில் சாதாரண கிராம மக்களில் இருந்து படித்தவர்களும் துறைசார்ந்தோரும் சமூக அக்கறையுடையோரும் பங்கேற்கிறார்கள். இந்தக் கூட்டுப்பங்கேற்பு தொலைக்காட்சியையும் அதன்பார்வையாளர்களையும் இயல்பாகத் தரமுயர்த்துகிறது.

மக்கள் தொலைக்காட்சி சித்திரைப்புத்தாண்டுக்கு ஒளிபரப்பிய நிகழ்ச்சிகள் இதற்கு ஆதாரம். தமிழ் வாழ்வை அதன் உயிர்ப்போடும் அழகோடும் அது அன்று வழங்கியது. பெருங்காட்சியூடகங்கள் சினிமாவிலும் சினிமாக்காரர்களிலும் மையம் கொண்டிருக்க மக்கள் தொலைக்காட்சிமட்டும் அதிலிருந்து வேறுபட்டிருந்தது. தமிழ் வாழ்வில் நிகழ்ந்த பல கலாபூர்வமான நிகழ்ச்சிகளை அன்றைக்கு அது தொகுத்திருந்தது. இந்தத்தொகுப்புக்கு அது செய்திருக்கவேண்டிய கள ஆயவு மிகப்பெரியதாகவே இருக்கும். அதற்கேற்றமாதிரியே அவை ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கின்றது. இதில் கள ஆய்வு முக்கியமானது. பி.பி.ஸி போன்ற தொலைக்காட்சிகள் இதில் மிகத்தேர்ச்சி பெற்றிருக்கின்றன. அந்தளவுக்கு அவற்றின் நிகழ்ச்சிகளும் தரமாகவே இருக்கின்றன. தமிழில் இந்தமாதிரி ஒரு தொலைக்காட்சி இதுவரையில் இல்லை. அதற்கான சிந்தனையும் உழைப்பும் இல்லையென்பதே இதற்குக்காரணம். சகல நிகழ்ச்சிகளுக்குமான தயாரிப்பு ஒரு பொருளில் சார்ந்திருந்தால் அது எத்தனை இனிமையாக இருந்தாலும் தெவிட்டிவிடும்.

மக்கள் தொலைக்காடசிக்கும் இந்தப்பிரச்சினை உண்டு. தொடர்ந்து விவரணங்களில் தங்கியிருப்பதும் தனியே கிராமங்களுக்குள் மட்டும் சுழன்று வருவதும் அதைச்சுருக்கிவிடும். ஆனால் இதுதொடர்பான மதிப்பீட்டையும் அவதானிப்பையும் மக்கள் தொலைக்காட்சி கவனத்தில் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. குறிப்பாக இந்தத்தொலைக்காட்சியில் தமிழகத்தின் பெரும்பாலான புத்திஜீவிகளும் சமூகவியலாளர்களும் இணைந்திருக்கிறார்கள். அதற்காக தனியே அறிவுஜீவித்தனத்துடன் அது தனிமைப்பட்டுப்போகவும் இல்லை என்பது இதுவரையான ஆறுதல். ஆனால் இனிவரும் நாட்களில் தமிழ்ச்சனங்களிடம் அவர்களின் ரசனைப்பாரம்பரியத்துக்கூடாக எவ்வாறு மக்கள் தொலைக்காட்சி தன்னைத்தக்கவைக்கப்போகிறது என்பதைப்பொறுத்தே எல்லாமிருக்கிறது.

தமிழ்மக்களைப்பொறுத்தவரை அவர்கள் எதற்கும் மறுப்புச்சொல்லும் பாரம்பரியமுடையவர்களில்லை. நல்லதையும் ஏற்பார்கள், கெட்டதையும் ஏற்பார்கள். அதோடு எந்த நேரத்தில் எதை ஏற்பார்கள், எதைவிடுவார்கள் எனவும் சொல்லமுடியாது.

தமிழகத்தைத் தளமாகக்கொண்டு மககள் தொலைக்காட்சி ஒளிபரப்பாகினாலும் அது தமிழ்வாழ்வின் சுவடுகளையும் அது தொடர்பான கம்பீரத்தையும் தருவதையிட்டு நாம் மகிழலாம். அத்துடன், தமிழிலான தொலைக்காட்சிகளுக்கான முன்னோடியாகவும் அது இருக்கிறது. தமிழகத் தொலைக்காட்சிகளின் பார்வையாளர்களாக ஈழத்தமிழரும் இருக்கிறார்கள் என்பதால் நாம் இவற்றையெல்லாம் கவனங்கொண்டேயாக வேண்டியுள்ளது. ஏனெனில் இவற்றின் நன்மை தீமைகள் எங்களையும் நேரடியாகப் பாதிக்கிறதல்லவா.

நம்பிக்கை/காத்திருப்பு


பெருமரத்தை
பூதமெனப் படியவிட்டு
உறுமிக்கடக்கிறது
வெளிச்சம்....

தனித்து நடக்கும்
இரண்டு பாதங்களைக்
கவனியாத
சகபயணியாய்
நீள நடக்கிறது தெரு
மெளனியாய்....

நான்
ஒரு நேரந்தப்பிய
பயணியைப்போல்
காத்திருக்கிறேன்
தூரத்தெரியும்
ஒளிப்புள்ளிகளை நம்பியபடி...