Tuesday, December 26, 2006

ஒரு கவிதையின் பிறப்பு..



என் எதிரேயிருக்கும்
தேனீர்க் குவளையுள்
வீழ்ந்து ஓய்கிறது
மின் விசிறி.....

நான்
மூடப் படாத
கவிதைப் புத்தகத்தை
மறுபடியும் பிரிக்கிறேன்....

தாள்களிடையில்
தட்டுப் படுகின்ற
உன்
ஞாபக ஸ்பரிசங்கள்
என்
விரல்களில் வழிய

இந்தக் கவிதையை
எழுதத்
தொடங்கினேன் ....

Thursday, December 21, 2006

கிறிஸ்மஸ் - கொண்டாடப்படும் ஒரு அகதியின் பிறப்பு

"அன்பென்ற மழையிலே அகிலங்கள்
நனையவே அதிரூபன் தோன்றினானே"

இதைப் பாடியது அனுராதா சிறீராம் தான் என்று நான் கொஞ்காலம் நம்பவேயில்லை. அவர் "டேய் கையை வைச்சுகிட்டு சும்மாயிருடா" என்கிற மாதிரியான மார்க்கப்பாடல் களைத்தான் பாடுவார் என் நினைத்துக்கொண்டிருந்தேன். ம் இந்தப்பாடல் அனுராதாசிறீராமின் குரல்வளத்தின் ஒரு மைல்கல்.



கிறிஸ்மஸ் கொண்டாட உலகம் தயாராகிறது. ஊரில் கொண்டாடிய நினைவுகளை மீட்டிப்பார்க்கிறேன். நான் ஒரு சைவக்காரனாக இருந்தாலும் கிறிஸ்மஸ் எப்போதும் என் கூடவே வருகிறது. எங்கள் வீட்டின் பின்வேலியோடு ஒரு தேவாலயமிருந்தது அதன் திருவிழாக்கள் பூசைகள் வித்தியாசமாக இருந்தன அவர்கள் பூசையின் போது பாடல்களை பாடுவார்கள் அப்போது நாங்கள் வேலிக்குள்ளால தலையை ஓட்டி பார்த்துக்கொண்டிருந்திருக்கிறோம். அந்த கோயில் திருவிழாக்கள் வருகிறதென்றால் ஒரு மாதத்துக்கு முன்னாலேயே கொஞ்ச அக்காக்கள் சேர்ந்து பாடுறதுக்கு பயிற்சி எடுப்பினம் மறுபடியும் மறுபடியும் ஒரே பாடல்களைப்பாடி பாடிப்பாடி அவர்கள் பயிற்சி எடுப்பதை பார்த்துப்பார்த்தே எனக்கு பாடல்கள் பாடமாகிவிடும் அந்தப்பாடல்களைப்பாடிக்கொண்டு திரிவேன்.

பிறகு கிறிஸ்மஸ் என்றால் கொலுவைக்கிற மாதிரி மாட்டுத்தொழுவத்தில் பாலன் பிறந்த காட்சியை தேவாலயத்தின் ஒரு ஓரமாக ஒரு மேசையைப்போட்டு சவுக்கு மரத்தை வெட்டி ஒரு குடில் அமைத்து சின்னசின்ன உருவ பொம்மைகளை வைத்து புது வருடப்பிறப்பு வரை வைத்திருப்பார்கள். நாங்கள் அந்த பொம்மைகளையும் அது விபரிக்கிற காட்சிகளையும் அடிக்கடி போய் பார்த்து விட்டு வருவோம். இதற்காகவே அந்த நாட்களில் எங்கள் பின்வேலியில் முள்ளுக்கம்பிகளுக்கு இடையால் ஒரு சிறப்பு பாதையை ஏற்பாடு செய்திருப்போம் வீட்டுக்கு யாராவது எங்கள் வயதில் விருந்தாளிகள் வந்தால் நாங்கள் உடனே அவனை அல்லது அவளை எங்கள் பிரத்தியேக பாதை வழியாக அழைத்துச்சென்று அந்த கொலுவினைக்காட்டுவோம்

(யாரிட்டயும் சொல்ல மாட்டியள் என்றால் ஒரு விசயம் சொல்லுறன் ஒருக்கா இப்பிடி போய் பார்க்கும் போது கைகளைக்கட்டுப்படுத்த முடியாமல் ஒரு பொம்மையை நான் தூக்க தம்பி பறிக்க அது உடைஞ்சு போய்ச்சுது கோயிலைப்பார்க்கிற அம்மம்மா பிறகு அம்மாவைக்கூப்பிட்டு கேட்டா உவங்கள் வந்தவங்களோ எண்டு அம்மா கேக்கேக்க நாங்கள் உண்மையை சொல்லிப்போட்டம் நாங்கள் போகவே இல்லை எண்டு ஹிஹி)



அப்படி கிறிஸ்மஸ் என்றால் எங்களுக்கும் மகிழ்ச்சிதான். கிறிஸ்மசில் எனக்கு இன்னொரு மகிழ்ச்சியும் இருக்கும் என்னெண்டா அது நத்தார்பாப்பா

"யேசுபாப்பா ஓடிவாறாராம்
ஏழைகளைத் தேடிவாறாராம்"


எண்டு மேளதாளங்களொடு ஆடிக்கொண்டு ஒரு பெரிய வயித்தோடு ஆட்டமே ஒரு மாதிரி கிக்காக இருக்கும் நத்தார் பாப்பா வருவார். அப்பிடியே ஆடியபடி அவர் ரொபிகளை எடுத்து எங்களிடம் தருவார் நாங்கள் அதைவாங்கி தின்னுவம் சில துணிஞ்ச கட்டைகள் நத்தார் பாப்பாவோட சேர்ந்து ஆடுங்கள் நாங்கள் அம்மாட அகப்பைக்காம்பை நினைச்சுக்கொண்டு பேசாம இருப்பம். ம் ...

பிறகு பள்ளிக் கூடத்திலயும் கிறிஸ்மஸ் நடக்கும் இலங்கைப்பள்ளிக் கூடங்களில் மார்கழி மாதம் விடுமுறை என்பதால் நவம்பர் மாதத்திலேயே ஒரு நாளை ஒளிவிழா என்று கொண்டாடுவார்கள் பள்ளிக்கூடத்தில படிக்கிற வேதக்காரப்பெடியள் சந்தோசப்படவேண்டுமே அதற்குத்தான். சந்தோசம் அவங்களுக்கு மட்டுமே எங்களுக்கும்தான் கேக் உட்பட்ட இத்தியாதி தின்பண்டங்களை பாக்கில போட்டு தர திண்டுவிட்டு அப்பிடியே போடுற நாடகங்கள் பாடுற பாட்டுக்கள் எண்டு பாத்திட்டு வருவம் சந்தோசமா.

இது சின்னப்பொடியனா இருக்கேக்க வளர்ந்தாப்பிறகு ஒளிவிழாவை நடத்துறதே நாங்கதான் ஒரு குண்டான பெடியனை பிடிச்சு அவன் வயித்துல தலகாணியைக்கட்டி நத்தார்ப்பாப்பாவின் உடுப்பை போட்டு அவனை ஆடவிடுவம். ஒளிவிழா தொடங்கும் போதே அறிவிப்பாளர் சொல்லத்தொடங்கியிருப்பார் உங்களை மகிழச்சிப்படுத்துவதற்காக நத்தார்ப்பாப்பா வந்து கொண்டிருக்கிறார் என்று ஆனா மற்ற நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்து கடைசியாத்தான் நத்தார்ப்பாப்பாவை வரவிடுவாங்கள்

அப்போதெல்லாம் மேடைக்கு நத்தார் பாப்பா வந்தால் அவர் கூடுதலா ஒரு மொழிபெயர்ப்பாளரோட தான் வருவார். கசுபுசு என்று சும்மா நத்தார் பாப்பா அவர் மைக்கில சொல்ல மொழிபெயர்ப்பாளர் அதைமொழிபெயர்ப்பார்.

அந்த உரையாடல் இப்பிடி இருக்கும்

ந.பாப்பா - கசுபுசு
மொழி. பெ – அவர் அமெரிக்காவில் இருந்து வந்தவராம்
ந. பாப்பா - ஸ்சிக்மழகுபு
மொழி.பெ – அவ்வளவு தூரம் வந்ததால தனக்கு சரியா களைக்குதாம்
ந.பாப்பா – கினிகதடட

மொழி பெ – வரும்போது பயங்கர செக்கிங்காம்(அப்போது வன்னிக்குள் வருவதெண்டால் கடுமையான செக்கிங் இருக்கும் இப்போதும் தான்)
ந.பாப்பா – (வயித்தை தடவிக்கொண்டே) கிசபிசபா
மொழி.பெ - ஆமி வயித்துக்க குண்டு இருக்கோ எண்டு கேட்வனாம்.

இப்படி போகும் உரையாடல்.



இந்த உரையாடல் முடிஞ்சோண்ண அப்பிடியே நத்தார் பாப்பா இனிப்பு பொட்டலங்களை வீசிய படியே சின்னனுகளுக்குள்ளால நடந்து போய் அதிபர் உட்பட்ட முக்கிய பிரபலங்களுக்கு கைகொடுப்பார்.( யார் அவயளிட்ட படிக்கிற இந்த பாப்பா) இப்பிடி ஒரு முறை விஜந் எண்டொரு குண்டன் பாப்பாவா வேசம் போடேக்க கெமிஸ்ரி வாத்தி ஜெகதீஸ்வரனின் கையை பிடித்து நசிநசியெண்டு வேண்டிய மட்டும் நசித்து விட்டான். (வாத்தி அடுத்தநாள் அவனைக் கேள்விமேல் கேள்வி கேட்டு பின்னியெடுத்தது வேறு கதை)

இதெல்லாம் முடிந்தவுடன நத்தார் பாப்பா மேடையில ஏறி ஒரு குத்தாட்டமான பாட்டுக்கு ஆட்டம் போடுவார் இப்பிடி ஒரு முறை ஆடிக்கொண்டிருந்த பாப்பா தன்ர ஆட்டத்தை திடீரென்று நிறுத்தினார் அவசரமா நாங்கள் திரையை இழுத்து மூடினம் நடந்தது என்ன?

?
??
???
????...................

ஆடிக்கொண்டு இருந்த பாப்பா திடீரென்று தன் ஆட்டத்தை நிறுத்த சின்னனுகள் ஹோ எண்டு கத்த கிட்டப்போய் என்னடா எண்டால் தலையாணி அறுந்து போச்சு மச்சான் பிறகென்ன விவேக் பாணியில்
"கவலைதோய்ந்த உங்கள் முகங்கள் முன்னால் இருந்தாலும் கட்சிப்பணிகள் அழைப்பதால் என்று சீச்சி"

"நத்தார் பாப்பாவுக்கு அமெரிக்காவில் இருந்து அவசர அழைப்பு வந்ததால் உடனடியாக போகிறார்"
எண்டு சொல்லி திரையை இழுத்து மூடிவிட்டோம்.

இது ஒன்று.

நான் அப்பகவிதைகள் எல்லாம் எழுதுவன். ஒளிவிழாவுக்கு ஒரு கவியரங்கம் வைச்சோம் தலைவர் நான்தான் (நம்புங்கள்) பாலன் பிறந்தார் என்று தலைப்பு அப்ப எங்கட வகுப்பில அருள்நேசன் எண்டொரு நண்பன் இருந்தான் அவன் எங்களோடயே படிக்கிற உதயா எண்டொருத்திய காதல் அதுவும் ஒருதலைக்காதல் பண்ணினான்.
ம் நாங்கள் யார் காதலை வாழவைக்க வந்த தெய்வங்கள் அல்லவா
அதனால் அவனை கவிபாட மேடைக்கு அழைக்கும் கவிதையை நான் இப்படி எழுதினேன்

அடுத்து வருவது அருள்
அவர்
எடுத்து வருகிறார்
கவிதைகள் எழுதிய
பேப்பர் சுருள்

பௌர்ணமி நிலவின்
உதயம் பார்த்து இவர் சிலிர்த்ததுண்டு
சூரிய உதயம் பார்த்து
பனித்துளி போல் இவர் கரைந்ததுண்டு.
இறை அருளின் உதயம் பாடவரும்
கல்லூரிக்கவியுலகின் புது உதயம்
அருளே வருக
இறைஅருளின் உதயம் உன் கவியில் தருக(இயேசு மன்னிப்பாராக)

இப்படி நிறைய உதயத்தை கொஞ்சமாய் அழுத்திச் சேர்க்க வகுப்பு பெடியள் விசிலடிச்சு அரங்கத்தை நிறைக்க( எல்லாம் ஏற்கனவே செய்த ஏற்பாடுதான்)
எப்படிப்பட்ட புனிதமான பணி நான் செய்தது பார்தீர்களா?(மெய் சிலிர்த்திருக்குமே) பிறகு மேடைய விட்டு இறங்க உதயா பல்லைக்கடிச்சுக்கொண்டு பத்திரகாளியாய் மாறின விசயம் உங்கள் ஒருத்தருக்கும் தெரியாது எண்ட நம்பிக்கையில் ம் அதையெல்லாம் விடுவோம்.


இயேசு பிறக்கும் போது ஒரு அகதி. தனது நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட தாய்க்கும் தந்தைக்கும் இரவல் வீட்டு மாட்டுத்தொழுவத்தில் பிறந்த குழந்தை. இந்தக் கோணத்தில் இந்த விழாவை நாம் எத்தனை பேர் அணுகுகிறோம் அல்லது அணுகத் தயாராகிறொம். அகதியின் வேதனையையும் சோதனைகளையும் நான் நிச்சயமாக இப்போது தான் உணர்கிறென் என் கேள்வியெல்லாம் இயேசுவுக்காவது மாட்டுத்தொழுவம் கிடைத்தது. உலகமெங்கும் அதிகாரவர்க்கங்களால் அகதியாகிற எத்தனை பேருக்கு மாட்டுத் தொழுவங்களாவது கிடைக்கின்றன?

த.அகிலன்

Wednesday, December 13, 2006

காத்திருப்பொன்றின் முடிவு(ஒரு அஞ்சலி)

ஈழத்துக்கவிஞர் சு.வில்வரத்தினம் பற்றிய நினைவுப்பகிர்வு


நான் அவரை சுமார் நான்கு வருடங்களிற்கு முன்பாக ஒரு மழைக்கால காலைப் பொழுதில் சந்தித்தேன். இவர்தான் கவிஞர் வில்வரத்தினம் என நிலாந்தன் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் . இவர் அகிலன் கவிதைகள் எழுதுவார் என்று அவருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

எனக்கு ஞாபகமிருக்கிறது நான் உடனே யார் சுனா.வில்வரத்தினமா என்று கேட்டேன். சுனா கொஞ்சம் அழுத்தமாக இருந்தது கேள்வியில் சு.வி ரசித்துச்சிரித்தார். பெரிய சிரிப்பு ஓமப்பு நான் சுனா வில்வரத்தினம் தான் என்று கைகளைப்பற்றிக்கொண்டார். இன்றைக்கும் உறைந்து போன அந்தச்சிரிப்பு நான் இதை தட்டச்சிக்கொண்டிருக்கையிலும் நிழலெனப்படிகிறது நினைவுகளில்.

அதற்கு ஒரு இரண்டு வருடங்கள் முன்பாக நாங்கள் எமது இடப்பெயர்வு வாழ்க்கையின் இறுதிக்காலங்களில் இருந்தபோது கவிரும் புகைப்படகலைஞருமான அமரதாஸ் எனக்கு சு.வியின் நெற்றிமண் கவிதைத் தொகுதியைக்கொடுத்தார். அதுதான் எனக்கும் சு.விக்குமான முதல் பரிச்சயம் அவரது பெயரைiNயு நான் அப்பொழுதுதான் கேட்கிறேன். (நான் கவிதைகள் என்று எதையோ கிறுக்கி கொண்டிருந்த காலம் அது) நெற்றிமண் படித்து பிறகு அவரது கவிதைகள் எல்லாவற்றையும் படிக்கும் ஆர்வத்தில் அலைந்து அவரைப்பற்றி பிரமாண்டமான எண்ணங்களை எனக்குள் நிரப்பிக்கொண்டிருந்த காலத்தில் தான் நிலாந்தனின் வீட்டில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது கலகலப்பான மனிதர் அவர் மட்டு மல்ல அவர் இருக்கும் சூழலையும் கலகலப்பாக்க வேண்டு மென்பதில் குறியாயிருப்பார். அவரது துணைவியாரும் அவரும் அற்புதமான தம்பதிகள்; என்று தோன்றும். சு.வி தனது மனைவியை கிண்டலடிக்கும் விதமே தனிதான் எனக்கு ம் இந்த வயதிலும் இளமை தாண்டவமே ஆடகிறது இந்த மனிதரிடம் என்று நினைத்திருக்கிறேன்.

தொடாச்சியாக நான்கைந்து நாட்கள் அவரை நிலாந்தனின் வீட்டில் சந்தித்திருக்கிறேன். கூடவே தாயகத்தின் அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்களும் உடனிருப்பார் அவர்கள் எல்லோரும் இலக்கியம் பேசுவார்கள் அல்லது அரசியல் பெரும்பாலும் இப்போதெல்லாம் இலக்கியம் அரசியல் என்று தனித்தனியாக ஏதுமில்லை அங்கே அல்லது இல்லாமலாக்கப்பட்டிருக்கிறது. எல்லாமே அரசியல் தான் இருப்பே பிரச்சினையாகிய பிறகு இலக்கியம் என்ன வேண்டிக்கிடக்கிறது.அவர்கள் ஏதோ பேசுவார்கள் நான் கேட்டுக்கொண்டிருப்பேன் எப்போதாவது ஓரிரண்டு வார்த்தைகள் பேசியருப்பேன்.


சு.வியுடன் எனது பிறந்தநாளைக்கொண்டாடும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. சும்மா சின்னதாய் ஒரு றீட் அதில் சு.வி பாட்டுப்பாடினார் அற்புதமான பாடல் நான் நினைக்கிறேன் அது கிருஸ்ணணை நினைத்து உருகும் பாடல்

“யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே” இந்தப்பாடல் தான் சு.வி பாடினார் நன்றாக பாடினார். நிலாந்தன் அவர் முடித்தவுடன் சொன்னார் வில்வண்ணைக்கு மிகவும் பிடித்த பாடல் இது என்று. அது தவிரவும் சு.வி ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ளவராக இருந்தார். அதே நேரம் சடங்குகளிலே நம்பிக்கையற்றவராகவும் இருந்தார்.

பெரிய மூக்கு பளிச்சென்ற மனசின் அடியாளங்களைத் தேடுகிளன்ற பார்வை என்று அந்த நான்கைந்து நாட்கள் நான் சு.வியை ரசித்தபடி இருந்தேன். அவர் உள்ளுணர்வுகளை தான் நம்புகிறேன் என்றார் அவைதான் என்னை வழிநடத்துகின்றன.



தீவுப்பகுதியிலே இந்திய ராணுவம் குடியிருந்தபோது இவரும் அங்கேதான் இருந்தார்
ஒரு நாள் இரவு திடீரென்று தோன்றியிருக்கிறது.மனிசியை அழைத்து வா வெளிக்கிடு உங்கட அப்பாவீட்டை போவம் என்றிருக்கிறார். மனிசி என்னப்பா இந்த நேரத்தில போவம் எண்டுறியள் என்ன பிரச்சினை? இல்லையப்பா மனம் சரியில்லை போவம் என்றிருக்கிறார். இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு இரவிரவாக வீட்டை விட்டு கொஞ்ச தூரத்தில் இருந்த மாமனார் வீட்டிற்கு போய்விட்டார்கள் மொத்தக்குடும்பமும். அவர்கள் கையில் எடுத்துப்போனது தமது குழந்தைகளும் காலச்சுவடு சஞ்சிகை ஒன்றும் தான். அன்று இரவு பெரிய வெடிச்சத்தம் ஒன்று கேட்டதாம் அடுத்தநாள் வீடு திரும்பும்போது அவர்களது வீட்டுக்கு இந்தியராணுவம் குண்டுவைத்து தகர்த்து விட்டிருந்தது. தரைமட்டமா கிடந்ததாம் வீடு. தனது உள்ளுணர்வு தனக்கு உயிர்கொடுத்ததாக சொல்லுவார். சு.வி.

இது பற்றி எங்கேயோ எழுதிய சு.வி தான் கொண்டு போன காலச்சுவடு பற்றி சொல்லும்போது சொல்லுவார் சுந்தரராமசாமி ஆசிரியராக இருந்த போது வந்த இதழ் அது. இலக்கியம் குறித்து சர்ச்சைகளிலும் ஆரோக்கியமான விவாதங்களிலும் ஆர்வமாக கலந்து கொண்டார். சு.வி.

ஆத்மா ஒரு முறை ஒரு கட்டுரையில் குறிப்பிட்டார் சு.வியிடம் கவிதை கேட்டால் உடனேயே பேப்பரும் பேனாவும் எடுத்துக்கொண்டு ஒரமாகப்போய் எழுதிக்கொடுப்பாராம் என்று..

எல்லாம் முடிந்துவிட்டது ஒரு இலக்கிய ஆளுமையை தழிமர்கள் இழந்து விட்டார்கள். சு.வி ஒரு முன்னோடு பல இளைய தலைமுறை கவிஞர்களுக்கு அவர் வழிகாட்டிவிட்டிருக்கிறார் படைப்பிலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் ஆவர்வமோடு இயங்கினார்.ஈடு செய்ய முடியாத பேரிழப்பு இது.


என்;னிடம் கடைசியாக சந்தித்தபோது கேட்டார் உன்ர கவிதைகள் எல்லாத்தையும் ஒரேயடியா ஒருக்கா தாடாப்பா படிக்கோணும் பிறகொருக்கா கொண்டு வந்து காட்டு எண்டு.. பிறகு நான் அவரை சந்திக்கவில்லை எனது கவிதைகளை ஒட்டு மொத்தமாக அவரிடம் காட்வே முடியவில்லை பெரும்பாலும் நாட்டுப்பிரச்சினை சந்திப்பதற்கான முட்டுக்கட்டைகளை நீட்டிக்கொண்டே சென்றது. இப்போ இன்னும் தீராமல் நீண்டு கொண்டே போய் முடிந்தும் விட்டது.

ஏக்கங்களுடன்
த.அகிலன்

சு.வி சிறுகுறிப்பு(1950-2006

ஈழத்தின் புகழ்மிக்க கவிஞர்களில் ஒருவரான கவிஞர் சு.வில்வரத்தினம் தனது 56 வயதில்
(09.12.06)சனிக்கிழமை கொழும்பில் காலமானார்.
புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் சு.வில்வரத்தினம், இடம்பெயர்ந்து 1991 ஆம் ஆண்டு முதல் திருகோணமலையில் வாழ்ந்து வந்தார்.70களில் எழுதத்தொடங்கிய சு.வி இறுதிவரை எழுதிக்கொண்டே இருந்தார்.

இவரது கவிதைத்தொகுதிகளாவன, அகங்களும் முகங்களும் (1985),
காற்றுவெளிக்கிராமம் (1995), காலத்துயர். நெற்றிமண், 2000 இலே வெளியானது. இவரது மொத்தக் கவிதைகளும் "உயிர்த்தெழும் காலத்திற்காக" என்னும் ஒரே தொகுப்பாக இந்தியாவில் இரந்து வெளிவந்திருந்தது. ஈழத்தின் மிகு முக்கியமான கவிதைத்தொகுதியான மரணத்துள் வாழ்வோம் தொகுதியிலேயும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

இவரது "காற்றுவழிக் கிராமம்" என்னும் கவிதைத் தொகுதி விபவி சுதந்திர இலக்கிய அமைப்பின் 1995 ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிதை நூலுக்கான விருதினை பெற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.



படங்களுக்காக நன்றி வசந்தன் மற்றும் பெயரிலி

Tuesday, December 12, 2006

கடந்து விடமுடியா நினைவுகள்


நான்
நம்பிக் கொண்டிருந்தேன்
இது நாள் வரையும்

மரணத்தின்
வாசனை மிகும்
ஊரின் தெருக்களைக்
கடந்தாகி விட்டதென்றும்......

நகரத்தின்
இடுக்குகளில்
எனக்கான பூஞ்செடிகள்
காத்துக் கிடக்குமெனவும்.....


தடைகளும் எல்லைகளுமற்று
விரியும்
புதிய வானத்தில்
என்சிறகுகள் கொண்டே
எனக்கான வானவில்லை
வரைந்து விட முடியுமென்றும்.....

நான்
நம்பிக் கொண்டிருந்தேன்
இது நாள் வரையும்.....

மரணத்தின்
வாசனைமிகும்
அத்தெருக்கள் தான்
என்
உள்ளங்கையின் ரேகைகள்
என அறியாது...

த.அகிலன்

Thursday, December 07, 2006

வற்றிக்கொண்டிருக்கும் பிரியம்..


பிரியத்தின்
சொற்கள் வற்றிக்கொண்டிருந்தன.

தாகித்தலையும்
நம்
இறுதிப்பார்வைகள்
நதியைப்போல்
ஓடிக்கொண்டிருக்கிறது
நமக்கிடையே

பற்றியிருந்த
விரல்கள்
இளகத்தொடங்குகையில்

வானம்
குமுறத்தொடங்கியிருந்தது

இருவரும்
கண்கள்
ஏன் முதுகுகளிடம்
இல்லை என்பதாய்
நடக்கத்தொடங்கினோம்

சுவடுகளைக்
கரைத்தபடி
பெய்து கொண்டிருந்தது
மழை.

த.அகிலன்

Sunday, December 03, 2006

கார்த்திகை தீபமும் கணேசலிங்கம் வாத்தியும்..


"பெண்கிளியே பெண்கிளியே பாடுகிறேன் ஒருபாட்டு"

இந்த பாடல்காட்சிதான் எனக்கு நான் இதுவரை பார்த்த தமிழ்சினிமாவில் தீபங்களை வைத்து எடுக்கப்பட்டவற்றில் மிகவும் பிடிக்கும். இன்றைக்கு விளக்கீடு என்றதும் எனக்கு உடனே ஞாபகம் வந்தது இதுதான். விளக்கீடு என்றால் கார்த்திகை தீபம் ஏற்றுவது. அதான் அதை தமிழ் நாட்டில் எப்படி சொல்வார்கள் என்று தெரியவில்லை ஆனால் ஈழத்தில் இதுதான் அதன்பெயர்.

எங்கள் சின்னவயதில் விளக்கீடு என்றால் ஒரே கொண்டாடடம் தான் .தீப்பந்தங்களை கொழுத்தி வளவுக்குள் ஆங்காங்கே குத்திவைத்து திரையயைப்போல விரிந்திருக்கும் இருளுக்குள் அது அணையும் வரை பார்த்துக்கொண்டே நிற்போம். சின்னக்கா அண்டைக்கு ஒரு மூண்டு மணிபோல சொல்லுவா தம்பி ஒரே அளவான தடி வெட்டிக்கொண்டுவாங்கோ என்று. எனக்கு ஒரே புழுகமாக இருக்கும். ஒரு பெரிய மனுசனைப்போல கத்தியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவேன். எல்லாவீடுகளிலும் அப்பான்ர கத்தி என்று ஒர கத்தி இருக்கும். அது தான் வீட்டிலேயே பெரிசு அநேகமாக அப்பாவைத்தவிர அதை எடுப்பதற்கு யாருக்கும் அனுமதிகிடையாது. அதற்கு ஒரு வரலாறு கூட இருக்கும்(கத்திக்கு வரலாறா எண்டு நினைக்கிறியளோ) அப்பா அதை எங்கேயாவது வெளியூர் போய் வரும் போது வாங்கியிருப்பார். அல்லது ரொம்பபிரபலமான கத்தி அடிக்கும் கொல்லரிடம் இருந்து சொல்லி அடித்திருப்பார். அல்லது அப்பப்பா அதை அப்பாவுக்கு கொடுத்திருப்பார். இப்படி கத்தியின் முக்கியத்துவம் வீட்டிலுள்ளவர்களால் சொல்லப்பட்டுக்கொண்டிருக்கும்.

அதனால் சிறப்பு அனுமதிகளோடு மட்டும் அதை எடுக்கலாம்.யாராவது எதையாவது வெட்டிக்கொண்டு வா எண்டு என்னிடம் சொன்னால் நான் உடனே அப்பாவின் கத்தியைக்கொண்டு போகட்டா என்றுதான் கேட்பேன். டேய் சும்மா இரு சின்னக் கத்தியை கொண்டுபோ அப்பா அடிப்பார் என்று சின்னக்கா வெருட்டுவா? நானா மசிவன் அப்ப நீங்களே போய் வெட்டுங்கோ என்று சொல்லுவன். கடைசயில் செயம் எனக்குத்தான்.

என்ன ஒன்று அப்பாவின் கத்தியை தூக்கி வெட்டும் போதெல்லாம் ஒரு பெரியமனுசத்தனம் வந்து ஒட்டிக்கொள்வது போல இருக்கும். ம் உள்ளே ஒரு குரல் கர்ஜிக்கும். ஆனா அப்பிடி பட்ட சந்தர்ப்பங்கள் வருவது குறைவு. வீட்டில நண்டுக்கறிகாய்ச்சும் போது முருக்கம்பட்டை வெட்டுதல். அதை விட்டா இப்பிடி கார்த்திகை விளக்கீடு இப்படித்தான் சந்தர்ப்பங்கள் அமையும். நான் அதை மிஸ் பண்ணாம உள்ளே கர்ஜிக்கிற பெரிய மனுசனை யாருக்கும் தெரியாம கூட்டிக்கொண்டு வெட்டுவதற்கு போனேன். (ம் அப்பிடி ஒரு நாள் முருக்கம் பட்டை வெட்ட போகும் போது தான் என்னை பேய் வெருட்டினது அதை பிறகு ஒரு பதிவா போடுறன்)


அப்பாவின் கத்தியை எடுத்துக்கொண்டு ஒரே அளவா தடியை வெட்டி சின்னக்காவிடம் கொடுத்தால் அதில அவா வெள்ளைத்துணியை வடிவாசுத்தி எண்ணைநிரப்பப்பட்ட கிண்ணத்துக்குள் வைப்பா ஒரு ஆறுமணிவரைக்கும் அது எண்ணைக்குள்ள ஊறும். எப்படா ஆறு மணியாகும் எண்டிருக்கும் எங்களுக்கு. அண்டைக்கெண்டு சூரியன் மெதுவாப்போகும். ஒரு மாதிரி ஆறுமணி ஆகினோன்ன அம்மா படவிளக்கை கொழுத்திப்போட்டு வந்து பந்தங்களை கொழுத்துவா. ஆ நான் ஒண்டு சொல்ல மறந்து போட்டன் இந்த பந்தம் கொழுத்துறது வளவுக்குள்ள தான் கேற்றடிக்கு ஸ்பெசலாக வாழைத்தண்டை வடிவாக வெட்டி அதை கிடங்கு வெட்டி கேற்றுக்கு சரியா நடுவில நட்டிருக்கும் அதுக்கு மேல ஒரு சிட்டியை வைச்சு அதைத்தான் கொழுத்துறது. அம்மா எல்லா பந்தங்களையும் கொழுத்துவா கிணத்தடிக்கு ஒண்டு வீட்டு வாசலுக்கு ஒண்டு வீட்டுகோடிக்கை ஒண்டு கழிவறைக்கு ஒண்டு. பிறகு தோட்டத்துக்க ஒண்டு என்று எல்லா இடத்துக்கும் எண்ணி பந்தங்களைக்கொழுத்துவா நாங்கள் பந்தங்களை யார் கொண்டு போய் நடுகிறது என்று சண்டை பிடிப்பம் தங்கச்சி ரொம்ப சின்னப்பிள்ளை அதால அவளுக்கு இதில போட்டியிடும் தகுதியே கிடையாது. இதில மட்டும் தான் சாப்பாட்டு சாமானுகள் எண்டால் எல்லாரும் அவளுக்குத்தான் கூட குடுப்பினம். நாங்கள் அந்த ஆத்திரத்தை தீர்க்கிற மாதிரி அம்மா அவளிட்ட குடுக்காம இருக்கேக்க நக்கலா சிரிப்பம். சின்னக்கா போட்டியே போடமாட்டா. போட்டி நானும் தம்பியும்தான் கடைசியா அம்மா இரண்டு பேருக்கும் சரியா பிரிச்சு தருவா? நாங்கள் ஒவ்வொரு இடமா ஓடி ஓடி குத்துவம் ஆனா தோட்டத்துக்க குத்தேக்க மட்டும் சின்னக்காவை கூப்பிடுவம் தோட்டத்தக்க ஏதாவது இருந்தா எண்ட பயம்தான். சின்னக்காவோட போய் குத்தினாப்பிறகு யார் குத்தின பந்தம் கனநேரம் எரியது எண்டு பார்ப்பம்.சிலவேளை என்ரை எரியும் சிலவேளை தம்பியின்ர எரியும்(அதெல்லாம் சகஜமப்பா) அப்பிடியே அணையும் வரைக்கும் பார்த்தக்கொண்டு நிப்பம்.

ஒழுங்கையில் எல்லாருமே கேற்றடிக்கு வாழைத்தண்டில தான் விளக்கு கொழுத்தியிருப்பினம் அது பார்க்க வடிவாஇருக்கும். நாங்கள் கேற்றடிக்கு வந்து பார்த்துக்கொண்டு நிப்பம். இப்ப நான் சொன்னது ஒரு பத்து பன்னிரண்டு வயது அனுபவங்கள்.

நான் அப்பிடியே வளர்ந்து ஒரு 18வயதான உடனே வீட்ட கேப்பா அம்மா எங்கடா போறய்? வெளியில போறன் எண்டு மட்டும் சொல்லுவன். அவ்வளவுதான் எங்கே? ஏது? ஏன்? என்ற கேள்விகள் வராது வந்தாலும் பதில் சொல்ல நான் அங்க நிற்கமாட்டன். பிறகு பந்தத்துக்கு தடி வெட்ட எங்களுக்கு எங்க நேரம் பந்தா பண்ணவே நேரம் பத்தாம கிடக்கு அதுக்குள்ள பந்தமாம் பந்தம் விளக்கீடும் மண்ணாங்கட்டியும் எண்டு மனம் மாறியிருந்தது. அப்பிடியே சைக்கிளை எடுத்துக்கொண்டு விளக்கீடு அண்டைக்கு வீதிகளால் வலம் வருவோம். அப்பிடியே வகுப்பு பெட்டையளின்ர வீட்டு ஒழுங்கையளுக்குள்ளால சும்மா தெயியாதே ஆ ம் பெல்லை அடித்தபடி போவோம் அவளுகளும் கேற்றடியில் வந்து நிப்பாளவை. அப்பிடி யாரும் கேற்றடியில் நிண்டா காணுமே அப்பிடியே சைக்கிளை ஒரு பஜீரோவா நினைச்சு சும்மா ஸ்ரைலா ஆ அப்பிடியே ஒரு மன்மதகுஞ்செண்ட நினைப்பில ஆ(வெக்கமாக்கிடக்கு) அப்பிடி அவளுகளின்ற கேற்டியில் யாரும் கிடையாது எண்டு தெரிஞ்சா பிறகென்ன அப்பிடியே சைக்கிளை ஓடீயபடியே காலால வாழைமரத்தீபத்தை ஒரு தட்டு.பொத்தெண்டு விழும் கொல் என்று சிரிப்பு. பெரும்பாலும் எதிர்ப்புக்கள் வராது சிலவேளை டேய் யார்ரா எண்டு சவுண்டு கிவுண்டு வரும். அப்ப உழக்குவம் பாருங்க ஒரு உழக்கு அதான் உழக்கு.சைக்கிள் சும்மா பறக்கும்.

எல்லாவற்றையும் விட விளக்கீடு அன்று மிகமுக்கியமான ஒரு பணியிருக்கும் எங்களுக்கு அது கணக்குவாத்தி கணேசலிங்கத்தின் கேற்றடி வாழையைத்தட்டுறது. எங்களை வகுப்பில படுத்துற பாட்டுக்கு நேரடியாக காட்ட முடியாத கோபத்தை அவர் வீட்டு வாழையில் காட்ட கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிடுவமா என்ன? அப்பியே அவற்றவீட்டு பக்கமாப்போய் வாழையைத்தட்டி விட்டு அதோட நிக்காம குரலை மாத்தி டேய் மொட்டை கணேசலிங்கம் எண்டு ஹோ எண்டு கத்திவிட்டு ஓடிவருவம். அதெல்லாம் ஒரு சூப்பர் அனுபவங்கள் இப்படி வயது ஏற ஏற கார்த்திகை விளக்கீட்டில் கலந்துகொள்கிற அனுபவங்கள கலகலப்பாய் மாறினாலும் மனம் நெகிழ கலந்து கொள்கிற இன்னனொரு விளக்கீடு ஈழத்தழிழர்களுக்கு உண்டு அது கார்த்திகை இருபத்தியேழு அதில் எல்லா குறும்புகளையும் விட்டு விட்டு வீரச்சாவடைந்த கணேசலிங்கம் வாத்தியின் மூத்த பெடியனின் கல்லறையில் எரிகிற தீபம் அணையாமல் காவல்நிற்போம் நாங்கள்.

த.அகிலன்