Wednesday, July 04, 2007

ரஜினிக்கு அறையவேண்டும்.......

01.
அறையில் பத்து மணிக்கு மின்சாரம் போய் மறுபடியும் தீடிரென்று முளைத்தது. அணைக்கப்படாதிருந்த தொலைக்காட்சி முழித்து ஓடத்தொடங்கியிருந்தது. திடுக்கிட்டு முழிக்கையில் ஏதோ ஒரு படத்தின் எழுத்தோட்டம் போய்க்கொண்டிருந்தது. (எழுத்தோட்டம் எண்டா படத்தில் நடித்தவர்களின் பெயர்ப்பட்டியல் வருகின்ற படத்துண்டைத்தான் எழுத்தோட்டம் என்போம். அதிலே நடிகை மீனாவின் பெயர் அறிமுகம் என்ற போட்டு எழுத்து சீர்திருத்தம் வருவதற்குமுன்பாக இருந்த “னா” போட்:டு இருந்தது. அட அந்தக்காலத்திலயே மீனா நடிச்சிருக்கிறாவா என்று தோன்றியது. திடீரென ஒரு நண்பர் கேட்டார் நாங்க எல்லாம் முந்தி சின்ன வயசில படம் பார்க்க எப்படி அலைந்திருக்கிறம். கொஞ்ச நேரம் எல்லோரும் சிரித்தோம் எதற்காக சிரிக்கிறோம் என்று தெரியாமல் சிரி சிரி என்று சிரித்தோம்.

எனக்கு ஞாபகம் இருக்கிறது. லியோனி தனது பட்டிமன்றம் ஒன்றில் சொல்லுவார் திரையில் என்னத்தை போட்டாலும் பார்க்கிறதுக்கு இண்டைக்கு மக்கள் தயாரா இருக்கிறாங்க அப்படியென்று…நாங்களும் ஒரு காலத்தில் அப்படித்தான் படம் பார்க்கிறதெண்டால் காணும் அதுவும் திரையில் கிடையாது தொலைக்காட்சிப்பெட்டியில். அது பிளைக்கன் வைற்றா கலறா எண்டதைப்பற்றியெல்லாம் பிரச்சினை இருக்கிறதில்லை படம் அவ்வளவுதான். சாப்பாட்டுச்சாமானுக்கு மூக்கு வேர்க்கிறமாதிரி ஊரில எந்த வீட்டில படம் இண்டைக்கு என்பது பற்றி தகவல்கள் கசிய ஆரம்பிக்கும் உடனே அந்த வீட்டை நோக்கி படையெடுப்போம். அதுவும் ரீவிக்கு கிட்ட இருந்துதான் படம் பார்க்கோணும் அப்பிடி பார்த்தாத்தான் வடிவாத்தெரியும் என்பதுமாதிரி. படம் எண்டா சும்மா கிடையாது அது ஒரு பெரிய நடவடிக்கை சுத்தி இருக்கிற ஒரு நாலுவீட்டுக்காரர் சேர்ந்து எல்லாரும் காசு போட்டு ஒரு வீட்டு முத்தத்தில இருந்து பார்க்கிறது. ஒரு நாளைக்கு சும்மா நாலு படம் 5படம் எண்டு போகும். விடிய விடிய படம் விடிஞ்சாப்பிறகு ரஜினி சிறீதேவிக்கு என்னமுறை எண்டு கேப்பாங்கள்…. அப்படி ஓரே அடியா மண்டை கலங்கிப்போய் 5 படத்தின்ர கதையும் குழம்பியிரும்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை படம் என்று தீர்மானம் போட்டுவிடுவார்கள். என்னெ;ன படம் பார்க்கலாம் அண்ணாக்கள் அக்காக்கள் மச்சாள்மார் எல்லோரும் சேர்ந்து என்ன என்ன படம் போடலாம் என்று மாமரத்தடி மாநாடு போட்டு கடைசியில் தீர்மானிப்பார்கள் எங்களிற்கென்ன கவலை எந்தப்படத்தைப் போட்டா என்ன படம் போட்டா சரி. ஒரு மாதிரி எல்லாருமாச்சேர்ந்து கலைச்சுக் கலைச்சு ஞாயிற்றுக்கிழமையும் வரும். அட ஞாயிற்றுக்கிழமை எதோ வேகமாக வந்தமாதிரியும் பின்னேரம் மெதுவா வாறமாதிரியும் இருக்கும். அண்டைக்ககெண்டு மணிக்கூடு அடம்பிடிச்சு மெதுவா ஓடற மாதிரி இருக்கும். பின்னேரம் ஒரு நாலுமணிக்கு பெரிய ஒரு பாண்பெட்டி மாதிரி ஒண்டைக்கட்டிக்கொண்டு ஒரு சைக்கிள் ஓழுங்கைக்குள்ள வரும் ஹோ எண்டு கத்திக்கொண்டு சிறுசுகள் எல்லாமா சேர்ந்து பூரண சினிமா மரியாதையை கொடுத்து ரீ.வி கொண்டு வருகிற அண்ணயை விழிவிரிய வரவேற்பம் அவர் எவ்வளவுதான் டேய் தள்ளுங்கோடா எண்டு பேசினாலும் அதைத் தொட்டுப்பார்ப்பதற்கான வீரம் எங்களிடம் இருக்கும். ஒரு மாதிரி சைக்கிள் நிண்டு அவர் ரீவியை எங்க வைக்கிற தெண்டு கேப்பார் அப்ப யாரே ஒரு பெரியாள் சொல்லும் இதில வையுங்கோ அப்ப தொடங்கும் பாருங்கோ இந்த படம்போடுறவங்களின்ர அழிச்சாட்டியம்.. உந்த மேசை சரியில்லை.. உந்த துணி டஸ்ற் எண்டு முத்தம் வரைக்கும் கொண்டு வந்த ரீவியை இற்க்கிவைப்பதற்கு ஆயிரம் நிபந்தனைகள் விதித்துக்கொண்டு நிற்பார் ரீவிக்காரர். மாமா அதுக்குள்ள முறுகுவார் என்ன சும்மாவோ வாறாங்கள் வாடகைதானே குடுக்கிறம் என்ன தடிப்பு நினைச்சா திருப்பி அனுப்பிவிட்டிருவன் படமும் மண்ணாங்கட்டியும் எண்டு. எங்களுக்கு கவலையா இருக்கும் என்னடா வந்த படம் திரும்ப போகுதே எண்டு…. ஒரு மாதிரி எல்லாத்தையும் எல்லாரையும் சமாளிச்சு (ஒரு முறை நான் என்ர புது பெட்சீட்டை கூட இதுக்காக தியாகம் செய்திருக்கிறன் எண்டா பாருங்கோவன்)ரீவியை மேசையில வைச்சா அதுக்கு பக்கத்தில நிக்கிறதுக்கு அதாவது அதுக்குப் பக்கத்தில யாரையும் அதான் என் தரவழிப்பெடியளை நெருங்க விடமால் பார்த்துக்கொள்ளுறதுக்கு ஒருத்தனை எங்களில் இருந்தே தேர்ந்தெடுப்பார் அப்போது அவருக்கு மனசுக்கு யாரைப்பிடிக்குதோ அவனைத்தான் ரீவிக்காரர் தேர்நதெடுப்பார் அவன் ரீவிக்கு பக்கத்தில நிண்டு கொண்டு எங்களை நெருங்க விடவே மாட்டான். நாங்களும் அவனை மனசுக்குள் கறுவிக்கொண்டு பொறுத்துக்கிடப்போம் படம் தொடங்கு மட்டும்.

அடுத்ததா இன்ஜின் வரும் ஒரு வாட்டர் பம்மை ஜெனரேற்றராக்கிஅது ஒரு வித்தியாசமான கெற்றப்பா இருக்கும். கரியலை விட்டு இரண்டடி நீட்டடிக்கொண்டிருக்கும் அது. சைக்கிளில் அதையும் கொண்டு வந்து சாக்கெல்லாம் விரிச்சு ஏதோ வருத்தமாக்கிடக்கிற நாய்க்குட்டியை பராமரிக்கிறது மாதிரி வைப்பாங்கள் நாங்கள் அதையும் சத்திச்சுத்தி நிண்டு பாhப்பம். இதெல்லாம் படம்போடுறன அண்டு வெள்ளனவே வந்து சேர்ந்து விடும் ஆனா டெக்மட்டும் வராது எல்லாரும் நேரத்தைக் கலைச்சுக்கொண்டு நிப்பம் அம்மாக்கள் பெரியம்மாக்கள் எல்லாரும் சமையல் வேலைகளில் மும்முரமா இருப்பினம் என்னதான் படம்மெண்டாலும் நாங்கள் சாப்பாடு கேப்பம் தானே. அதனால நேரத்தோடய எங்களை வில்லகங்கப்படுத்தி சாப்பாடு தந்து முடிய ஓரு 7மணிக்கு ராஜா வாறார் பராக் பராக் எண்டுறமாதிரி இந்தா வருது அந்தா வருது எண்டுவாங்கள் டெக்காரர் வரவே மாட்டார். ஒழுங்கைக்குள்ளால சும்மா சைக்கிள் வந்தாலே வகுப்பில அதிபர் வாறார் அதிபர் வாறார் எண்டு தகவல்வர பெடியலௌ;ளாம் ஒருக்கா கலகலத்து அடங்குவாங்களே அது மாதிரி ஒரு நிலமை தோன்றும் வந்தவர் வேறு யாராகவோ இருப்பார். பிறகு கொஞ்சநேரத்தால ஒரு புதுசாப்பிறந்த பிள்ளையை கொண்டு வாறமாதிரி டெக்கை கொண்டு வருவார் அதோடு தான் கொப்பியளும் அப்ப உந்த திருட்டு விசிடி எல்லாம் கிடையாது திருட்டு வி.எச்.எஸ்.தான். அதைக் கொப்பி எண்டுவாங்கள் படக்கொப்பி. அதையும் அவர் கொண்டு வந்து மேசையில அடுக்கி வைச்சுப்போட்டு தொடங்கும் அடுத்தபடலம்……


02.

அதுதான் கொஞ்சம் முக்கியமான படலம். ஜெனரேற்றரை ஸ்டாhட் பண்ணுகிற படலம். நான் படம் பார்த்த தருணங்களில் எல்லாம் ஜெனரேற்றர் உடன ஸ்டார்ட் ஆனதே கிடையாது. ஜெனரேற்றரை எல்லாரும் கயித்தைச்சுத்தி இழுத்தோண்ண ஸ்டார்ட் ஆகிராது. அதுக்கு முன்பாக சில வேலைகள் செய்யவேணும் சைக்கில் பெல் இருக்கெல்லோ அதுன்ர ஒருபக்கத்தை தனிய எடுத்து ஒரு கம்பியை ஒட்டி வைச்சிருப்பாங்கள். அதை அவங்கள் ஸ்டார்ட பண்ணுறதை ஏதோ வித்தை காட்டுமாதிரி பார்த்துக்கொண்டிருக்கிற என்னைமாதிரி ஒரு சேவகனிடம் கொடுத்து வீட்டில தணல் வாங்கியாங்கோ எண்டு சொல்லுவினம். எங்களுக்கு ஏதோ அவையள் டாக்குத்தர் பட்டம் கொடுத்தது மாதிரி அதை வாங்கிக் கொண்டோடுவம் மிகவும் பெருமையாய் இருக்கும். அவங்கள் என்னிடம் வேலை சொல்லீற்றினம் எண்டு… தணலை வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தா ஏதோ வாழைப்பழம் பழுக்க வைக்கிறமாதிரி கயித்தை வாட்டர் பம்மில சுத்திப்போட்டு தணல்கரண்டிக்குள்ள கொஞ்ச எண்ணை ஊத்தி புகையை வரப்பண்ணி அதைக் காபரேற்றர் மூடியைக்கழற்றிப் பிடிச்சு புகையை அதுக்கு காட்டுவினம். அதெல்லாம் அந்த வயசில பார்க்கும்போது ஏதோ சாகசம் மாதிரி இருககும். இப்படி புகையடிச்சாலும் அது உடன ஸ்டார்ட் ஆகாது முக்கி முனகி ஒரு மாதிரி ஸ்டாhட் ஆகும். வாட்டர்பம்மை ஸ்டார்;ட் பண்ணினோன்ன விசயம் முடியாது. பிறகு டைனமோக்கு பெல்றைக் கொழுவவேணும் அது ஒரு சாகசம் எனக்கு மிகவும் வியப்பேற்படுத்துவது இதுதான். வாட்டர்பம் இயங்கும்போதே அதிலயிருந்து வெகு அநாசயமாக பெல்டை டைனமோவிற்கு கொழுவுவார்கள் பார்க்க ஆசையாயிருக்கும். இப்படி ஒரு மாதிரி கரண்டை வரவைச்சு ரீவியை எல்லாம் போட்டாப்பிறகு ஒரு சண்டைவரும் எந்தப்படத்தை முதலில் போடவேண்டும் என்று. அவரவர் தனக்கு பிடித்த படங்களை முதலில் போடவேண்டும் என்று நினைப்பார்கள் நாங்கள் ஒரு பக்கமாக இதிலெல்லாம் தலையிடாமல் அடிபாடு நிறைய வருகிறபடமாக அது இருக்கவேண்டும் என்று மட்டும் நினைத்துக்கொள்வோம்.

எங்கட ஆசைப் பெரியம்மாடை மகன் ராஜன்அண்ணா கடும் வெடியன். அவர் எங்களைவிட வயது கூட எண்டதால் எல்லாரையும் இருத்தி வைச்சு ரீவிக்குள்ள ஆக்கள் இருக்கிறாங்கள் அவங்கள் தான் தெரியுறாங்கள் அடிபடுறாங்கள் எண்டெல்லாம் சும்மா கதைவிட்டுக்கொண்டிருந்தார். உவர் உப்பிடித்தான் முந்தி ஒருக்கா றேடியோக்குள்ள ஆக்கள் இருந்துதான் பாட்டுப்படிக்கிறாங்கள் எண்டு சொல்லப்போய் நானும் தம்பியும் வீட்டை கிடந்த றேடியோவை கத்தியைவைச்சுக்கழற்றி உள்ளுக்குள்ள ஆக்கள் இருக்கினமோ எண்டு தேடினதில அம்மாட்டை அகப்பைக்காம்பு ப+சை வாங்கிளதூன் மிச்சம். இப்ப உவர் ரீவிக்குள்ள ஆக்கள் இருக்கினம் எண்டு சும்மா வெடிக்கிறார் அப்ப நான் டக்கெண்டு கேட்டன் ஆக்கள் இருந்தா நாய் பூனை யானை எல்லாம் இருக்குதோ அதெல்லாம் படத்தில வருகுதே எண்டு. உடன அவர் உன்னோட கோவம் நாளைக்கு கள்ளன் பொலிஸ் விளையாட்டுக்கு உன்னைச் சேக்கமாட்டன் எண்டு சொல்லீற்றார் நான் உடன ஆக்கள் இரந்தா என்னா இல்லாட்டி என்ன நாளையான் விளையாட்டுத்தான் முக்கியம் என்கிற தூரநோக்குப்பார்வையுள்ள முடிவை எடுத்தேன் என்பதை உங்களிற்கு சொல்லவா வேணும்.

என்தான் படம்போடுறதுக்கு படம்போடுற ஆக்களுக்கு சதுரஉதவி சில்லறை உதவி எண்டு செய்தாலும். அது என்னவோ தெரியாது முதல் படத்தில முக்காவாசி போறதுக்கிடையில நித்திரை வந்துவிடும். அப்பிடி ஒருக்கா “பதினாறு வயதினிலே” படம் பார்க்கும் போது கமலை சப்பாணி சப்பாணி எண்டு ரஜினி கூப்பிடும் போது எல்லாம் சப்பாணியை விட எனக்குத்தான் ரஜினிக்கு அறையவேண்டும் போல இருக்கும் அந்தப்படத்தை நாங்கள் பார்க்கிற காலத்தில் ரஜினி கதாநாயகனாகிவிட்டிருந்தார். அப்ப எல்லாருக்கும் அவரது பேர் தெரிந்திருந்தது. நான் அந்தப்படத்தின் அரைவாசி பார்க்கக் கிடையில படுத்து விட்டேன் படுக்கும்போது எங்கள் வாயிலிருந்து கடைசி டயலாக் வரும் அக்காக்களை நோக்கி. அடிபாட்டுக்கட்டம் வரும் போது எழுப்பிவிடுங்கோ என்னதான் இருந்தாலும் சண்டைக்காட்சிகளை தவறவிடக்கூடாது என்கிற கொள்கை வைத்திருந்தோம் அப்படி ஒரு வெறி அடிபாட்டுக்கட்டங்களின். உண்மையா இருக்காதே பின்ன சும்மா வெடிக்கிற காருக்குள்ள இருந்து உயிரோட மியூசிக் கடுமையா இருக்க எழும்பி வாற கதாநாயகனை பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்ன. நான் அதெல்லாம் உண்மையெண்டுதான் நம்பினான் அந்தவயதில. (சில பேர் மாடுமாதிரி வளந்தாப்பிறகே நம்புதுகள் நான் நம்பினது பிழையோ என்ன) என்னதான் எழுப்பச்சொன்னாலும் அக்காக்கள் எழுப்புவது குறைவு அப்படியே அவர்கள் எழுப்பினாலும் நாங்கள் சிணுங்கிக்கொண்டே திரும்பவும் படுத்து விடுவோம். அப்படி பதினாறு வயதினிலேபடத்தில் பெரியக்கா என்னை எழுப்பும் போது நான் ரஜினிக்கு அடிக்கோணும் எண்டு புசத்தினானாம் எண்டு அவையள் பிறகு என்னை நக்கல் அடிக்கிறவை. என்னதான் நித்திரை கொண்டாலும் அடுத்தநாள் பள்ளிக்கூடத்திலை பார்க்காத அடிபாட்டுக்கட்டங்களையெல்லாம் அட நாங்கள் இதையெல்லாம் கட்டாயம் பார்க்கோணும் எண்டு நினைக்கிற அளவிற்கு நண்பர்களின் விழிவிரியச் சொல்வதில் நான் விண்ணன். இதெல்லாம் ஒரு பன்னிரண்டு வயதுக்கு முதல் நடந்தவை பிறகு வயதேற வயதேற வந்த அனுபவங்கள் வித்தியாசமானவை. அவையெல்லாத்தையம் அடுத்தமுறை சொல்லுறன்….

14 comments:

Anonymous said...

தலைப்பை வன்மையாகக் கண்டிக்கிறேன்

த.அகிலன் said...

அனானி கண்டனங்கள் ஏற்கப்படுவதில்லை

வெங்கட்ராமன் said...

நீங்க எண்ண சொல்ல வற்றிங்கன்னே புரியலயே. . . .
தலைப்பு சம்பந்தமா பதிவுல என்ன இருக்குன்னு தெரியலயே. . . .

கொஞ்சம் சுருங்கக் கூறி விளங்க வைக்க முடியுமா. . . .

த.அகிலன் said...

மன்னிக்கவும் வெங்கட்ராமன் சார் தலைப்புக்கும் பதிவுக்கும் கட்டாயம் சம்மந்தம் இருக்கோணுமா என்ன? ஆனா இதில இருக்கு கஸ்டப்பட்டு கடைசி வரைக்கும் வாசிச்சா தெரியும்...:)):))

படிக்கிற உங்களிற்கே இவ்வளவு கடுப்பா இருக்கே எழுதின எங்களுக்கு:))

வெங்கட்ராமன் said...

*******************************
ஆனா இதில இருக்கு கஸ்டப்பட்டு கடைசி வரைக்கும் வாசிச்சா தெரியும்...:)):))
*******************************

நான் இந்த விளையாட்டுக்கு வரல என்ன விட்ருங்க சாமி. . . . .

இளங்கோ-டிசே said...

அகிலன், நீங்கள் இதில் எழுதியவற்றை வாசிக்க வாசிக்க எனது அனுபவங்களைப் பார்ப்பதுபோலத் தோன்றியது. ஊரின் நினைவுகளை எழுதும்போது இவற்றை மறக்காமல் குறிப்பிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
தொடர்ந்து எழுதுங்கள்.

மாயன் said...

அகிலன்

என்னுடைய இளமைக்கால நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன...

நல்ல பதிவு... வாழ்த்துக்கள்

G.Ragavan said...

:) இந்த வீடியோப் பைத்தியம் இருக்குதே..அப்பப்பா...ஒங்களுக்கு வீடியோன்னா எனக்கு சிடி. அப்பத்தான் சீடியெல்லாம் வந்த புதுசு. ஒரு கடையில சிடி ரெக்கார்டிங் (சிடில இருந்து காசெட்ல பதிவு பண்றது) குடுக்கப் போயிருந்தேன். அங்க இருந்தவர...அண்ணே சிடியக் காட்டுங்களே பாக்கனும்னு சொன்னேன். அவரும் காட்டுனாரு. எத...ஒரு சிடியை கயித்துல கெட்டித் தொங்க விட்டிருந்தாங்க....எனக்கு வந்த கடுப்பு இருக்கே......

ஆனா நீங்க சொல்ற மாதிரி வீடியோ கேசட் திருவிழாக்கள் எங்களுக்கும் நெறைய நடந்திருக்கு. பேயாப் படம் பாப்போம்ல. என்ன படமா இருந்தா என்ன...எல்லா படமும் நம்படம்.

ப்ரியன் said...

அகிலன் வரிக்கு வரி என்னை என் சிறு வயதிற்கு கட்டி அழைத்துச் செல்கிறது ....


அந்த ஜெனரேட்டர் தவிர அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்தவை...

எவ்வளவு வசதிகள் இன்று இருந்தாலும் அன்றைய வாழ்க்கை இனிமையானது...

வவ்வால் said...

நல்ல நகைச்சுவை உணர்வுடன் எழுதப்பட்டுள்ளது!

துளசி கோபால் said...

சூப்பர் பதிவப்பா.

உங்க பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கேன்.

http://www.desipundit.com/category/tamil/

Anonymous said...

அகிலன் உங்கள் பதிவில் இறந்த காலம் உணர்வுத்துடிப்புடன் மீளவும் கொண்டுவரப்பட்டுள்ளது.

Anonymous said...

Nalla pathivu...

த.அகிலன் said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி பின்னூட்டங்களை தாமதமாக வெளியிட்டமைக்கு மன்னிக்கவும்...