Tuesday, July 31, 2007

எழுதப்படாத சொற்களும் தாள்களும்...


நான்
வெற்றுத்தாள்களை
வாசிக்கிறேன்….

குருதியும்
ரணங்களும் வழியும்
துயரத்தின் மிகு சொற்கள்
அத்தாள்களின் மீது
உறைந்துள்ளன….

தாள்களின்
ரகசிய இடுக்குகளில்
ஒழிந்திருக்கிறது..
வேட்டைக்காரனின்
அம்புகள் தீட்டிய
அழுகையின் வரைபடம்..

எழுதப்படாதிருக்கிற
எந்தச்சேதியிடமும்
புன்னகையில்லை….

தன் பின்னலைத்தளர்த்திய
ஒரு கிழவியின்
சாபத்தின் சொற்கள்
ஊரை நிறைத்தது…

பின்பொருநாள்…
பூவரசம் வேலிகளைத்
தறித்தபடியெழும்
கோடரியின் கரங்கள்
ஒரு குழந்தையிடமிருக்கக்
கண்டேன்….

தடுக்கமுயலும்
கிழவியிடமிருந்து எழும்
இயலாமையின் சொற்கள்
தேய்ந்து போயிற்று
ஊடுபத்திய
கைவிளக்கைப்போல.....

3 comments:

Ayyanar Viswanath said...

/பூவரசம் வேலிகளைத்
தறித்தபடியெழும்
கோடரியின் கரங்கள்
ஒரு குழந்தையிடமிருக்கக்
கண்டேன்…./

எவ்வளவு குரூரமான சித்திரம் இது..உண்மைகள் எப்போதும் ரணமாகத்தான் இருக்கும் அகிலன்..

த.அகிலன் said...

யாரும் பார்க்காமல் நான்மட்டும் அடம்பிடித்து கவிதைகள் என்று நினைத்து எதையோ கிறுக்கி தள்ளுககிறேன் என நினைத்தேன். பார்வைக்கும் பகிர்தலுக்கும் நன்றி அய்யனார்.

Anonymous said...

பக்கமும் அழகாக உள்ளது
கவிதையும் அழகாக உள்ளது