Thursday, July 05, 2007

இன்று கரும்புலிகள் நாள்...

இன்று உயிராயுதங்கள் என்று வர்ணிக்கப்படுகின்ற கரும்புலிகளினுடைய நாள் அதை முன்னிட்டு கவிஞர் பஹீமாஜஹான் எழுதிய ஒரு கடல் நீருற்றி என்கிற கவிதை இங்கே மறுபடியும் இடப்படுகிறது.


படம் மூனா
ஒரு கடல் நீருற்றி
நட்சத்திரங்கள் பூத்த வானம் விரிந்திருந்தது!
எமக்குப் பின்னால்
பாதியாய் ஒளிர்ந்த நிலவு தொடர்ந்து வந்தது!
தூரத்து வயல் வெளியை மூடியிருந்தது
வெண்பனி
தென்னைகளில் மோதி குடியிருப்புகளை ஊடுருவி
எம் செவி வழி நுழைந்தது
வங்கக் கடலில் எழுகின்ற அலையோசை !
சந்தடி ஓய்ந்த தெரு வழியே
நீயும் நானும் விடுதிவரை நடந்தோம் !

இப்படியே
எத்தனையோ இரவுகளில்
விவாதிப்போம் நெடு நேரம்
முடிவில் ,எதிர்காலம் குறித்த அவநம்பிக்கைகளுடன்
பிரிந்து செல்வோம் !

பின் வந்த, பதற்றமான பொழுதொன்றில்
உன் விடுதலை வேட்கைக்குத் தடையாயிருந்த
அனைத்தையும் உதறி அடவி புகுந்தாய் !

பரணி...
உன் நினைவுகள் தேய்ந்து கொண்டிருந்த வேளை
மாரி கால அந்திப் பொழுதொன்றில்
நனைந்த சீருடைகளில் இருந்து நீர் சொட்டச் சொட்ட
மீளவும் நீ வந்தாய் !

அலையெழும்பும் கடல் பரப்பினில்
உனக்கான பணி முடிக்கவென விடைபெற்றுப் போனாய்:
வாழ்த்துச் சொல்ல வாயெழவுமில்லை!
ஆரத்தழுவிட நீ விரும்பவுமில்லை !
வெளியே பெய்த மழை என் கன்னங்களில் வழிந்தோட...
மழைப் புகாரினூடே மறைந்து போனாய் !

திரைகடல் சென்ற திரவியமானாய் !
ஆழிப்பரப்பெங்கும் ஊழித்தீ எழுந்து தணிந்தது-நீ
திரும்பி வரவே இல்லை !

இன்று வீரர்கள் துயிலும் சமாதிகள் மீது
காலத்துயரின் பெரு மௌனம் கவிழ்ந்துள்ளது !
சமுத்திரத்தையே சமாதியாகக் கொண்டவனே !
இங்கு ஏதுமற்ற உன் கல்லறையில்
ஒரு கடல் நீரூற்றி நிரப்பிடவோ?

- பஹீமாஜஹான்

6 comments:

முபாரக் said...

வீரவணக்கம்

மு. மயூரன் said...

கவிஞர் என்றே பயன்படுத்தலாமே?
"கவிதாயினி" என்றால் என்ன?

கவிஞன் த. அகிலன் என்று சொவதில்லை அல்லவா?

கவிஞர் த. அகிலன் என்றுதானே பயன்படுத்துகிறோம்?

த.அகிலன் said...

//மு.மயூரன் said...
கவிஞர் என்றே பயன்படுத்தலாமே?
"கவிதாயினி" என்றால் என்ன?//

அட உவங்கள் சினிமாக்கு பாட்டெழுதிற பெண்கவிஞர்களிற்கு பாவிக்கிறாங்கள் எண்டிற்ற நானும் சும்மா போட்டு விட்டிற்றன் அட நீங்க ஒரு பெரியஆள்சொல்றீங்கள் கேக்கத்தானே வேணும்.

ஆனாலும் சொல்வதில்லை என்பதற்காக அது தவறாகிவிடுமா என்ன?

ப்ரியன் said...

இவர்கள் காற்றோடு கரைந்திடவில்லை
எம்மோடு கலந்து கிடக்கின்றனர்

வீரவணக்கம்...

thiagu1973 said...

அகிலன் ஏன் தேதி போடலை இன்றுன்னா என்று ? ;)

த.அகிலன் said...

இந்த பதிவு போட்ட அன்று தியாகு அண்ணா அதாவது யூலை 05