
எல்லாவற்றையும்
உன்னுள்ளே குமைத்து
ஏன்
நீ
மௌனம் சமைக்கிறாய்.
எல்லாவினாவுதல்களின் போதும்
உன்
புன்னகைக்குள்
எதனை நீ
சொல்லநினைக்கிறாய்
ஒலிகள்
எதுவுமற்ற
உனது மொழி
இரைச்சலை ஜெயிக்குமா?
அடுத்தவனையே
பேசுபொருளாக்கி
எப்போதும்
அலைகிறது உலகம்.
அதனாலும்
மௌனம் நிறைவுதான்
ஆனால்
சலசலப்பே
சங்கீதம் என்றாயிற்று.
ஏது சொல்ல
மௌனம்
ஒரு மின்சாரத்தைப்போல
பாதைகளைப்பற்றிய
அக்கறைகளற்றுப் பயணிக்கும்
வேகமாய்.
எப்போதும்
மொட்டுக்களின்
மௌனம் உடைகையில்
தான் அழகு
நீ
பேசு
கண்ணிவெடிகளின்
நிலத்தில் நடப்பதைப்போல்
சற்றே அசந்தாலும்
காத்துக்கிடக்கிறது இரைச்சல்
உனக்கான வார்த்தைகளை
ஓலமிட..
த.அகிலன்