Tuesday, October 16, 2007

காணிமுழுவதும் கண்ணிவெடியல்லவா...?

"வாணி உன் வீடும் வளவும் நானறிவேன்
அக்காணி முழுவதும் கலகலப்பல்லவோ”

இப்படிப்பெரியவர்கள் கவிதைகளை எடுத்துவிட்டுக்கொண்டு இருக்க வாயைப்பிளந்து கொண்டிருந்திருக்கிறேன்.கானாபிரபாவின் பாசையில் சொன்னால் சின்னனுகளாய் இருந்த அனுபவங்கள் இவை. நவராத்திரி என்கிற வார்த்தையை விட அதை அந்த பத்து நாட்களையுமே சரஸ்வதிபூசை என்று சொல்லித்தான் நான் திரிந்திருக்கிறேன். நவராத்திரி என்பது கொஞ்சம் பெரியவர்கள் சொல்லும் சொல்லு. எங்களுக்கென்ன அதைப்பற்றி கவலை மொத்தமாய் சரஸ்வதி பூசை. எங்களுக்கு சரஸ்வதியெல்லாம் அவ்வளவு முக்கியமாக படவில்லை புக்கை அவல் கடலை கௌப்பி போன்றவை சகலகலாவல்லி மாலை படிக்கப்படும்போதே கண்ணுக்குள்ளால் வாயுக்குள் போய்கொண்டிருக்கும். எப்படா முடியும் இந்த தேவாரம் என்னு தவமிருப்போம்.ம்.. அதெல்லாம் ஒரு காலம்.

அந்தக்காலத்தில நான் திடீரென்று பெரிய பேச்சாளரா மாறிப்போனேன்.

சிவனுக்கொரு ராத்திரியாம் சிவராத்திரி சக்திக்கு நவராத்திரி

போன்ற பத்து வசனங்களைப்பாடமாக்கி வெற்றிகரமாக ஒப்பித்தல் அதுதான் என்னைப்பேச்சாளர் ஆக்கியது.

அப்பிடியே பத்து வசனங்களையும் தலைகரணமாகப்பாடமாக்கி தலையை இடமிருந்து வலமாகவும் பிறகு வலமிருந்து இடமாகவும் ஒரோ சீராக ஆட்டுவதற்கும் பழகி(எல்லா பார்வையாளர்களுடைய முகத்தையும் பார்க்க) அப்பாவின் சால்வையை வேட்டியாகச் சுற்றியபடி கடைசியாக விஜயதசமி அன்று மேடையில் ஏறினால்

பிறகென்ன, பெருமதிப்பிற்குரிய அதிபர் அவர்களே,ஆசிரியர்களே,என்சக மாணவ மாணவிகளே அனைவருக்கும் என் இந்நேர வந்தனங்கள் என்று தொடங்கவே குரல் தழுதழுக்கும் மெல்லாமாய் கண் இருட்டி மண்டைக்கள் பட்டாம் பூச்சி பறக்கும். ஒரு மாதிரி சமாளித்து முதலாவது வசனத்தை பேசி முடித்து

நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாட்களும் வீரம் வேண்டி துர்க்கை தேவியையும் அடுத்த மூன்று நாட்களும்…. அடுத்த மூன்று நாட்களும் தலைகரணமாப் பாடமாயிருந்தது திடீரென்று மறந்து போகும்… அடுத்த மூன்று நாட்களும் அடுத்த மூன்று நாட்களும் என்று டைப்படிக்க .. ஒரு ஓரமாக மூலையில் இருக்கும் ஒரு வாத்தியார் எடுத்துக்கொடுப்பார் செல்வத்தை செல்வத்தை என்று ரகசியமாக சத்தம் வரும் மூலையில் இருந்து.. உடன பிக்கப்பாகி அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி சரஸ்வதியையும் வேண்டி விரதமிருப்பர் என்று ஒரு வழியாக செல்வத்துக்கு துர்க்கையையும் கல்விக்கு லக்சுமியையும் வீரத்துக்கு சரஸ்வதியையும் அதிபதிகளாக அறிவித்து விட்டு மேடையை விட்டு இறங்க வேர்த்து விறுவிறுத்துப்போகும்.

பிறகு பிறகு நடுக்கமில்லாமல் பத்து வசனத்தையும் அடுத்த வருசம் சொல்லிப்பழகி பள்ளிக் கூடத்தில் புகழ் பெற்ற பேச்சாளராகவிட்டேன்.

ஒரு வழியாக எல்லாரும் தங்கள் கூத்துக்களை நிகழ்த்தி முடிக்க வாணிவிழா முடிவுக்கு வரும். அன்றைக்கு பள்ளிக்கூடத்தில் ஆசைஆசையாப் பொங்கும் வீட்டை போக மனமில்லாமல் அப்பிடியே ஒவ்வொரு வகுப்பறையாக ஏறி இறங்கி பார்த்துக்கொண்டே வருவோம் கொஞ்சம் பெரியவகுப்பு மாணவர்களின் (கானாபிரபாவின்) வகுப்பறைகளில் வாணிவிழாவை ஒட்டிய ஒரு மார்க்கமான கவிதைகள் எழுதப்பட்டிருக்கும்.

உதாரணத்துக்கு வகுப்பில் வாணி எண்டொரு பிள்ளையிருந்தால்..

“அடி வாணி உன்வீடும் வளவும்
நானறிவேன்
உன் காணியை கொப்பரை எனக்கெழுதச்சொல்லு..”

வேணியெண்டிருந்தால்…

“வாணி விழாவிற்கு வீணி
வடிய வடிய வந்திருந்த
வேணியர்க்கும் வந்தனங்கள்”

கசிந்தா எண்டொருத்தி இருந்தாள்
அவளுக்கு எழுதியிருந்தது…

“கைகசியக் கசிய கற்கண்டு
கொண்டு வந்த கசிந்தாவுக்கு வந்தனங்கள்”

பிறகு இப்பிடியெல்லாம் சந்தோசமா கொண்டாடின வாணிவிழாக்கள் முடிஞ்சு போய் பள்ளிக்கூடக்கட்டிடம் உடைஞ்சுபோய் அல்லது அதைவிட்டிட்டு இடம்பெயர்ந்து போய் வாணிவழாக்கள் கொண்டாடப்பட முடியாமல் போயின அல்லது அடக்கமாக கொண்டாடப்பட்டன….

பிறகு எங்கள் வாணிவிழாக்களில் கவிதைகள் இப்படியிருந்தன
“வாணி உன் வீடும் வளவும் நானறிவேன்
அக்காணி முழுவதும் கண்ணிவெடியல்லவா”


கானாபிரபாவின் பதிவைப்பார்த்தவுடன் எனக்கும் ஏதோ நவராத்திரி ஞாபகங்கள் தலைகாட்டத்தொடங்கிவிட்டது அதற்காக முதலில் அவருக்கு நன்றி

த.அகிலன்
சரஸ்வதி பூசை மீள்பதிவு....

10 comments:

கானா பிரபா said...

வணக்கம் அகிலன்

அந்த இனிய காலங்களைத் தொலைத்துக் கனவுகளோடு வாழபவர்கள் நாங்கள், ஒவ்வொருவர் பின்னாலும் இப்படி எத்தனையோ நினைவுத் தடங்கள். இதுபோல் இன்னும் உங்கள் நினைவுகள் பதிவுகளாக வரவேண்டும்.

வசந்தன்(Vasanthan) said...

பெரிய பெரிய விளையாட்டெல்லாம் காட்டியிருக்கிறயள்.
நாங்கள்தான் நசுக்கிடாமல் இருந்திட்டம் போல கிடக்கு.

கானா பிரபா said...

ஆரைசொல்லுறியள் வசந்தன்:-)))

த.அகிலன் said...

நன்றி கானா பிரபா மற்றும் வசந்தன் இருவருக்கும்.கானாபிரபா என்ன உங்கள் இனிய காலங்களைத் தொலைத்தாலும் நினைவுகளோடு வாழ்தல் சுகம் தானே ம்... வசந்தன் சார் நான் ஒன்றும் பெரிய வியைளாட்டில்ல இது சும்மா சின்னது...

அன்புடன்
த.அகிலன்

Anonymous said...

கானா பிரபா வலைபதிய லேட்டாக வந்தாலும் பலர் வலைபதிய அவர் முன்னோடியாக இருந்திருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சி. உங்கள் வலைப்பதிவுக்குள் இன்றுதான் நுழைந்தேன். வலைப்பதிவின் தலைப்புத் தான் என்னை உங்கள் பதிவுக்குள் நுழைக்கக் காரணமாக இருந்திருக்கலாம். உங்கள் பழைய பதிவுகளை வாசித்தேன். அனைத்தும் முத்தான கவிதைகள். வாழ்த்துக்கள்!

த.அகிலன் said...

நன்றி கங்ஸ் உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நீங்கள் சொன்னது போல கானா பிரபாவின் வலையும் நான் வலைப்பதிவனாக ஒரு காரணமாக இருந்திருக்கிறது தொடர்ந்து வாருங்கள் பாருங்கள் பகிருங்கள்
அன்புடன்
த.அகிலன்

வசந்தன்(Vasanthan) said...

//வசந்தன் சார் //
கிழிஞ்சுது போ கிளிநொச்சி.

வசந்தன்(Vasanthan) said...

கானா பிரபா,
நான் சொன்னது அகிலனைத்தான்.
இருபதுகளின் தொடக்கமாகவும் இருக்கிறாராம்.
;-)

த.அகிலன் said...

//கிழிஞ்சுது போ கிளிநொச்சி//
ம்.. ஏற்கனவே கிபிர்க்காரன் கிளிக்கிறான் கிளிக்கப்போறான் இதில நீங்க வேற கிழிக்கிறீங்க...

//இருபதுகளின் தொடக்கமாகவும் இருக்கிறாராம்//

பொறாமைத்தீபற்றி எரிந்தால் என்ன செய்வது வசந்தண்ணை உண்மையைத்தான் நான் சொல்லுறன்.

அன்புடன்.
த.அகிலன்

Anonymous said...

//இருபதுகளின் தொடக்கமாகவும் இருக்கிறாராம்//

(பொறாமைத்தீபற்றி எரிந்தால் என்ன செய்வது வசந்தண்ணை உண்மையைத்தான் நான் சொல்லுறன்)
******************************
வசந்தன்,
இருபதுகளின் தொடக்கம் "அது" எப்பவோ தொடங்கியாச்சு....
அகிலனின் எல்லாக் கவிதைகளையும் பாருங்கள்
பாடாய்ப் படுத்திய கதைகளை எல்லாம்
எழுதியிருக்கிறார்