Showing posts with label தனிமையின் நிழல் குடை. Show all posts
Showing posts with label தனிமையின் நிழல் குடை. Show all posts

Tuesday, April 22, 2008

துப்பாக்கிகளும் சில தேவதைக்கதைகளும்/01



துப்பாக்கியின் கண்கள்
வாசிக்கத் தொடங்கிய பிறகு
சொற்கள்
ஒழிக்கத் தொடங்கிவிட்டன/சபிக்கப்பட்டு விட்டன

பீரங்கியின் வாய்களால்
அச்சமூட்டப்பட்ட
சொற்கள் கொண்டு
செய்யப்படுகிறது
ஒரு நாள்….

முடமான சொற்கள் கொண்டு
கவிதைகள்
செய்வது எங்ஙனம்?

கால்களற்ற சொற்களைக்
காணச் சகியாதொருவன்
துப்பாக்கிகளறியாதொருகணத்தில்
மொழியைப் புணர்ந்து
புதிதாய்
கால்முளைத்த சொற்களைப்
பிரசவிக்கலானான்…

பின்
ஓர் இரவில்…

துப்பாக்கியின் கண்கள்
அவன் முதுகினில்
நிழலெனப் படிந்து
அவன் குரலுருவிப்
பின்
ஒரு பறவையைப்போல
விரைந்து மறைந்ததாய்..
அவன் குழந்தைகள் சொல்லின.

Wednesday, March 12, 2008

பிரியம் /01



அவள் அழைத்துப்போன
கனவின் பசிய நிலத்தில்
வானவில்லின்
வர்ணங்களைக்கொண்ட
பறவையின் பாடல்
வழிந்து கொண்டிருந்தது திசையெங்கும்.

பாடலின்
திசைகளில்
நான் கிறங்கிய கணத்தில்
சடுதியாய் நீங்கிப்போனாள்
கூடவே போயிற்று
அவளது நிலமும்
வானவில் பறவையும்

நான் அலைந்து
கொண்டிருக்கிறேன்.
அந்த கனவுக்குள்
மறுபடியும் நுழையும்
திசைகளைத் தேடி.