Thursday, May 24, 2007

சலிப்பு...


யாரும் புரிந்து கொள்ளவியலா?
ஜடமாகவே இருந்துவிடுகிறேன்
நான்……

காலம்
என் கைகளில்
திணித்துப்போன…
நிறமற்ற கனவுகள்…
எனக்குள்ளே மூழ்கிவிடட்டும்…

தேவதைகள்
யாருமற்ற எனது நிலத்தில்
சருகுற்று…
பேய்கள் வசிக்கட்டும்….

எப்போதேனும்…
கொலுசுகளோடு
வரும்
யாரோ ஒருத்தி
கண்டெடுக்கக் கூடும்…
சருகுகளினடியில்….
சிக்குண்டு போன…
யாரும்படிக்காத…
எனது புத்தகத்தின்…
இறுதிப் பக்கங்களை…..

Wednesday, May 23, 2007

மரணத்தின் வாசனை - 04

ஓர் ஊரில் ஒரு கிழவி..

அவளது ஒரு பேத்திக்கு லண்டனில் அவளால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாத பெயரைக் கொண்ட ஒரு ஊரின் மண்டபத்தில் கலியாணம் நடந்த 6ம் நாள். இன்னொரு பேத்தி சாமத்தியப்படுவதற்கு சரியாக 25 நாட்கள் முன்பாக அம்மம்மா செத்துப்போனா. அவ சாவுக்கு நான் தான் காரணம் என்றாகிப்போனேன். என்னை கொலைகாரனாக்கி விட்டு அம்மம்மா செத்துப்போனா.

சாகிற வயசுதான் சுமார் 60தைக் கடந்து விட்டிருந்தா. தீராத நோயாளியைப்போல மாத்திரைகளும் கையுமாய் வாழ்ந்து கொண்டிருந்தவள் தான் அவ. ஆனாலும் அவ அதிஸ்டக்காரி. மறுபடியும் தான் வாழ்ந்த ஊரிலேயே செத்துப்போகிற வாய்ப்பு அவ வயுசுக்காரிகளிலேயே அவவுக்குத்தான் கிடைத்திருக்கிறது. அந்த ஊர் அவவுக்கு மிக நெருக்கமானது. கணவன் பக்கத்து வீட்டுக்காரியோடு ஓடிப்போனபிறகு தனது 7 பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வந்து சேர்ந்தா இந்த ஊருக்கு. அப்போதெல்லாம் மனிதர்கள் குறைவாக இருந்தார்கள் ஊரில். தெருக்கள் முளைக்காத இடங்கள் அதிகம் இருந்தன. இந்த ஊரின் பலதெருக்கள் இவ பார்த்துக்கொண்டிருக்கத்தான் முளைத்தன என்கிற இறுமாப்பு இவவுக்கு சாகும் வரையிலும் இருந்தது.

1996ல் ஊரே இடம்பெயர்ந்து காடுகளுக்குள்ளும், இன்னுமின்னும் வெகுதொலைவில் தாங்கள் இது வரைக்கும் கேள்விப்பட்டிராத பெயர்களைக் கொண்ட ஊர்களுக்கு, வாழ்ந்த ஊரிலிருந்து நினைவுகளை மட்டும் சுமந்துகொண்டு பயணப்படுகையில், இவ எவ்வளவு மறுத்தும் கேட்காமல் மூத்தவன் இவவை ரைக்ரர் பெட்டியில் குண்டுக்கட்டாக கட்டி ஏத்திக்கொண்டு போய்விட்டான். அன்றைக்கு ஊரைவிட்டுப்போன இவ வயசுக்காரர்களில் பெரும்பாலானவர்கள் வெளியூர்களிலே எரிந்து சாம்பலாகிப்போனார்கள். அல்லது மறுபடியும் ஊருக்கு திரும்பும் முடிவில்லாது யுத்தம் தீண்டவே தீண்டாது என்று அவர்கள் நம்பும் நகரங்களிலோ நாடுகளிலோ குழந்தை குட்டிகளுடன் நிரந்தரமாக தங்கி விட்டார்கள்.


ஆனால் அம்மம்மா இங்கு மறுபடியும் வந்து விடவேண்டும் என்பதில் உறுதியாயிருந்தா. அல்லது அதற்காகவே தான் அவ தனது உயிரை வைத்துக்கொண்டிருந்தா என்று தோன்றுகிறது. எனக்குத் தெரியும் அவ வாழ்க்கையில் மொக்குத்தனமான இரண்டு விடயங்களை நேசித்தா. ஒன்று சித்தி மற்றது அவவின் திருநகரில் இருக்கும் கோயில். அம்மன் கோயில். அவ அம்மன் தான் தன் பிள்ளைகளை வளர்த்தது, கல்யாணம் பண்ணி வைச்சது, தன் வாழ்க்கையில் எல்லாம் இந்த அம்மனால்தான நடந்தது என்று அடிக்கடி சொல்லுவா.

தன்னையும் தன்ர பிள்ளைகளையும் புருசன் கைவிட்டுப்போக நல்லதங்காள் மாதிரி பிள்ளைகளையும் கொன்று தானும் சாகிற முடிவிலிருந்தவ, அதையெல்லாம் கடந்து இந்த திருநகருக்கு வந்து காடுவெட்டி ,வீடு கட்டி. கோயில் கட்டி, பிள்ளைகளைப் படிப்பிச்சு, கல்யாணம் கட்டிக்குடுத்து என்று தான் செய்கிற எல்லாச் செயல்களுக்கும் அம்மாளாச்சிதான் காரணம் என்று அதீதமாய் நம்புகிறவ அவ. ஆனால் அவ புருசன் தன்னை விட்டு ஓடிப்போன பிறகு எந்த கோயிலுக்கும் போனது கிடையாது. அதனால் தான் அவ தன்காணியிலேயே அவ அம்மனுக்கு சிறிதாக ஒரு கோயில் எழுப்பினா. தனக்கேயான கோயில், தான் கும்பிடுவதற்கான கோயில் அவதான் அங்கே எல்லாமே.

ஓவியம் மூனா நன்றி அப்பால்தமிழ்

செல்லையா அதான் அவ புருசன் பக்கத்து வீட்டுக்கார மிக்கர் கிழவியோட ஓடிப்போனபிறகு திருநகருக்கு வந்து, அப்பம் சுட்டு வித்து, இடியப்பம் அவிச்சு கடைகடையாய் கொடுத்துவிட்டு, மூத்தவனை அரிவு வெட்டுக்கு அனுப்பி இப்படி பூச்சியத்திலிருந்து தனது வாழ்க்கையின் இரண்டாவது பாகத்தை தொடக்கிவைத்த ஊரை அம்மம்மா அளவுக்கு அதிகமாவே நேசித்தா.

அவ தன்னை விடவும் கோயிலை அதிகமாக நேசிக்க இன்னொரு காரணமும் இருந்திருக்கலாம். இந்தக் கோயில் தான் அவவுக்கு ஊருக்குள் அப்பக்காராச்சி என்றிருந்த பெயரை மாற்றி கோயிலாச்சி என்று அவவை ஒரு மரியாதையுடன் ஊர்க்காரர்கள் அழைக்க காரணமாக இருந்தது. அம்மம்மா இதனால் தான் கோயிலை அதிகமாக நேசிக்கிறாவோ என்று தோன்றும். இதுவும் காரணமாக இருக்கலாம். ஆனால் அவவின் கோயில் மீதானதும் ஊரின் மீதானதுமான நேசம் அற்புதமானது. ஊர் அவவுக்கு தோழியைப்போல ஒரு மகளைப்போல. ஏனெனில் இவ தனது புதிய வாழ்க்கையை ஊர்பார்க்கத்தான் ஆரம்பித்தா, ஊரும் இவ பார்க்கத்தான் வளர்ந்தது.

அவ கணவனைப் பிரிந்த காலத்திலிருந்தே அவ மனசுக்குள் மூடிய ஒரு பாகத்தை வைத்துக்கொண்டிருந்தா. அவ அன்றிலிருந்து விதவையாக மாறிவிட்டா. கணவன் இரண்டாம் தாரமாக வேறொருத்தியை கட்டி உயிருடன் இருந்த போதும் அவ பொட்டுவைத்துக் கொள்ளாமல் பூவைத்துக் கொள்ளாமல் திரிந்தா. அவவைப் பொறுத்தவரையில் அவ தன் கணவனுக்குத் தலைமுழுகி விட்டா என்று எல்லோரும் நம்பும்படியாக நிறுவினா. உண்மையும் அதுவாகத்தான் இருந்தது.

அல்லது அப்போதே இதெல்லாம் வெறும் சடங்குகள் என்னை கணவன் கட்டிப்போடப் பயன்படுத்தும் நாடகங்கள் என்ற புரிதலினால் களைந்தாவோ தெரியாது. ஆனால் அவற்றையெல்லாம் விரும்பாமல் திமிர் பிடிச்சவ என்ற பேரெடுத்துக்கொண்டும் கடைசி வரைக்கும் அப்படியே வாழ்ந்து விட்டவ அவ.


தனியொரு பெண்ணாக தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயங்களை எழுதத் தொங்கினா. அவ தானே தன் கதை எழுத ஆத்திரக்காரியாக இருக்கவேண்டியிருந்து. அடாவடிக்காரியாக வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில் பைத்தியக்காரியாகக் கூட ஆகவேண்டியிருந்து ஆனால் எல்லாவற்றையும் கடந்தா. அப்பக்காரியாகவும் ஆத்திரக்காரியாகவும் இருந்த அவ இந்த கோயில் மூலம் கோயிலாச்சி ஆகிப்போனா. கோயில் திருநகரில் எல்லோரையும் தன் பக்கதர்கள் ஆக்கியது. தனக்கு நேத்திவைக்க வைத்தது. அதற்கு பொங்கல் வைக்க வைத்தது. காலப்போக்கில் கோயிலும் கோயிலாச்சியும் புதுமையானவர்களாக மாறிப்போனார்கள்.
நான் என்ன சின்ன வயசுகளில் அம்மம்மா பூசை செய்யும் போது மணியடித்துக்கொண்டு பக்கத்தில் நின்று கொண்டிருப்பேன். அம்மம்மாவின் கோவிலில் மணியடிப்பதற்காக எனக்கும் தம்பிக்கும் நிறைய ரத்தக்களறிகளே ஏற்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் அவ அம்மனோடு பேசுபவவாக இருந்தா. அம்மனோடு கதைத்தா, சிரித்தா, கோபப்பட்டா. அவ ஒரு சினேகிதியைப்போல அந்த அம்மாளோடு நடந்து கொண்டா.

இப்போது அவவுக்கு எல்லாமும் என்றிருந்த கோயிலை விட்டு விட்டு போகும்படி சண்டை அவவை துரத்துகிறது. பின்வேலி வரைக்கும் செல்வந்து வீழ்ந்தாகிவிட்டது. யுத்தம் அகோர யுத்தம் அவவை அவவினது உயிருக்குயிரான மண்ணை விட்டும் கோயிலை விட்டும் துரத்துகிறது. அவவினது எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், திமிறல்கள் எல்லாவற்றையும் கடந்து ரைக்ரரில் முத்தவன் வற்புறுத்தி ஏற்றும் போதே அம்மம்மா பேசுவதை நிறுத்தியிருந்தா. அவவால் அந்த பிரிவை தாங்கமுடியவில்லை அம்மாளே தாயே என்று வழியெல்லாம் அரற்றியபடியே வந்தா. அவவினது அரற்றலையோ, ஏக்கங்களையோ, வலிகளையோ புரிந்து கொள்ள நேரமில்லாமல் வெடிச்சத்தம் ஊரை நெருங்கிக் கொண்டிருந்தது. தெருவெங்கும் செல் சத்தம் விரட்டியபடியே இருந்தது. அக்கராயனில் புதிதாக ஒரு இரவல் வீட்டின் தாழ்வாரத்தில் தூக்கமின்றி எல்லோரும் முழித்திருந்த அன்றைய இரவில் அம்மம்மா எதுவும் பேசவில்லை. அம்மா என்ன எல்லோரும் முழித்திருந்தும் யாரும் பேசவில்லை, பேச முடியவில்லை. தவளைகள் பூச்சிகள் எல்லாம் மௌனமாக இருந்தன. இருட்டு ஒரு ஊமையைப்போல எல்லார் மீதும் படர்ந்து இறுகியது. தொலைவில் வீழ்ந்து வெடித்தபடியே இருந்தன செல்கள். அதற்குப்பிறகு மறுபடியும் கிளிநொச்சிக்கு யாராலும் போகமுடியவில்லை. நாங்கள் ஒரு இரவல் வளவுக்குள் கொட்டிலைப் போட்டுக்கொண்டு ஒரு அகதி வாழ்க்கையின் முதல் நாட்களில் வாழப் பழகிவிட்டிருந்தோம்.

திருநகரை விட்டு வந்த 4ம் நாள் திடீரென அம்மம்மா தூக்கத்தில் எழுந்து அய்யோ என்ர அம்மாளே என்று வீரிட்டுக்கத்தினா. தூரத்தில் எங்கேயோ குண்டு விழுந்து வெடிக்கும் ஓசை கேட்டு அடங்கியது. அம்மம்மா சரி என்ர அம்மான்ர சன்னிதி உடைஞ்சு போச்சு என்று புலம்பினா. யாராலும் தேற்றமுடியாமல் அப்படியே அழுதழுது மயங்கிப்போனா. அன்றைக்கு பிறகு அம்மம்மா பேசுவதை குறைத்து விட்டா பேசினாலும் சித்தியொடு மட்டுமே பேசுவா. அவ அம்மனுக்கு அடுத்த படியாக நேசித்தது சித்தியைத்தான். சித்தி கல்யாணம் அமைந்து போகாமல் அல்லது காதல் தோல்வியால் திருமணமே வேண்டாம் என்று அம்மம்மாவோடயே இருந்து விட்டவ. அம்மம்மா அவவோடு மட்டும் தான் பேசுவா. எப்போதாவது அரிதாக எங்களோடு பேசினால் ஆச்சரியப்படுவோம் நாங்கள்.

பிறகு ஒரு நாள் சித்தியும் பாம்பு கடித்து அக்கராயன் ஆஸ்பத்திரியில் மருந்தில்லாமல் செத்துப்போக அம்மம்மா நடைப்பிணமாகிவிட்டா. ஆனால் அம்மம்மா ஊரை விட்டு வரும் போது அழுத அளவுக்கு சித்தியின் சாவுக்கு அளவில்லை. வெறித்தபடியிருந்தா. பெரும்பாலும் மௌனம். திடீரென்று ஒரு அழுகை என்று சித்தியின் சாவின் பின் அவ அவவுக்கான ஒரு உலகத்தில் வாழத் தொடங்கியிருந்தா என்று சொல்வேண்டும்.

ஆனால் அம்மம்மா இடைக்கிடை என்னோடு பேசுவா. வெத்திலை வாங்கினியா, இந்தப்பொய்லை சரியில்லை, சாப்பிட்டியா இப்படி உதிரியான சில வசனங்களை அவ சித்தியின் இறப்புக்கு பிறகு என்னோடு பேச ஆரம்பித்தா. எனக்கே ஆச்சரியமாப்போயிருந்தது. சித்திக்குப்பிறகு அம்மம்மா பேசுவதற்கு என்னை தேர்ந்தெடுத்திருக்கிறா என்றால் அம்மம்மா என்னை நேசிக்கிறா, சித்திக்கு அடுத்த படியாக என்று தானே அர்த்தம்.

மறுபடியும் யுத்தம் குண்டுகள், விமானங்கள், இரத்தம், காயங்கள், வீரச்சாவுகள், சாவுகள், என்று மறுபடியும் அகோர யுத்தம். இந்த முறை சத்தம் கொஞ்சம் தூரமாய்போனது. கொஞ்சநாளாகத் தொடர்ந்த சத்தம் ஒரேயடியாக தூரமாகப்போனது ஆனையிறவைப் பெடியள் பிடிச்சிட்டாங்களாம் என்று ஊரே கொண்டாட்டமாகத் திரிந்தது. ஆனையிறவின் வீழ்ச்சி மறுபடியும் ஊருக்குப் போவதற்கான அனுமதியாகியது.

கண்ணிவெடிகளை எடுத்த பிறகு தான் போகலாம் என்றார்கள். அவாப்பட்டு அல்லது தன்பிள்ளைகளைத் தேடிப்போவது போல உடனடியாகப்போனவர்கள் காலைஇழந்தார்கள் சிலபேர் உயிரையும். அதற்குப்பிறகு ஊரில் காணவில்லை என்று தேடப்பட்டவர்களுக்கு எல்லாம் விடைகிடைத்தது 250 க்கு மேல் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. நிறையப் பெண்கள் மறுபடியும் தன் கணவன் வருவான் என்ற நம்பிக்கையில் தாம் வைத்திருந்த குங்குமத்தை இழந்தார்கள். 5 அல்லது ஆறுவருடங்களுக்கு பிறகு செத்தவீடுகள் நடந்தன. குழந்தைகள் அப்பாவை இழந்தன அல்லது அப்பா இருக்கிறார் என்ற நம்பிக்கையை இழந்தன். தாய்மார் மகன்களை இழந்தார்கள். அடிக்கடி காவல்துறையில் எலும்புக்கூடுகள் அடையாளம் காண்பதற்காய் வைக்கப்பட்டன.

"இது அவற்ற சேட்டு"
"இது அவற்ற வெள்ளிமோதிரம்"
"இது அவன்ர சங்கிலி"

உயிரோடு இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கை சிதறிப்போக, கண்ணீரும் நம்பிக்கையும் உடைந்து விழ புதிய துயரங்கள் பிறக்க ஆரம்பித்தன. யுத்தம் தீர்ந்து போன பின்பும் துயரங்களை முழுவதுமாக எடுத்து செல்லவில்லை எனப் புரிய நீண்டகாலமானது.

இன்னும் சில எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படாமலே கிடந்தன. அந்த எலும்புக்கூடுகள் சட்டையின் ஒரு பகுதியையோ மோதிரத்தையோ கொண்டிராமல் தம்மிடமிருந்த எல்லாவற்றையுமே இழந்து விட்டவையாயிருந்தன. இன்னும் சிலபேர் காணமல் போனோர் பட்டியலில் இருந்து தமது உறவுகளை செத்துப்போனவர்கள் பட்டியலுக்கு மாற்ற மனமில்லாதவர்களாய் இந்த அடையாளம் காட்டுதலுக்கெல்லாம் வரமறுத்தவர்களாய் அவர்கள் உயிரோடிருக்கிறார்கள் எனும் நம்பிக்கையைக் கட்டியபடி குறுகிக்கிடந்தார்கள்.

மரணமும் துயரமும் மட்டுமே நிரம்பிக்கிடந்த ஒரு நாளில் திடீரென்று அம்மம்மா காணாமல் போனா. வாசலில் வெத்திலை துப்பிக்கொண்டிருந்தவவை காணவில்லை. சைக்கிளை எடுத்துகொண்டு ஒழுங்கை ஒழுங்கையாய் தேடினேன். கடைசியில் கிளிநொச்சிக்கு போகிற றோட்டில் அம்மம்மா ஒரு வேகத்தோடு போய்க்கொண்டிருந்தா. எணேய் எணெய் எங்கபோறியள் நான் வார்த்தைகளை காற்றிலனுப்பி மறிக்க முயற்சி செய்தேன் அவ காதில் வாங்காமல் முன்னேறிக் கொண்டிருந்தா. சைக்கிளை குறுக்கவிட்டு கையைப் பிடித்தேன்.

என்னை விடுமோனை நான் வீட்டை போப்போறேன். என்ர அம்மாளிட்ட போப்போறன் அம்மம்மா பீறிட்டுக்கத்தினா. நான் அதுக்கேன் நடந்து போறியள் என்னைக்கேட்டா நான் கூட்டிக்கொண்டு போயிருப்பன் தானே என்று சமாதானப்படுத்தினேன். நீ பொய் சொல்லுறாய் அம்மம்மா ஒரு குழந்தைமாதிரி கேவிக்கொண்டே கேட்டா. இல்லை வெள்ளிக்கிழமை கட்டாயம் போகலாம் குமார் அண்ணையின்ர மோட்டசைக்கிள்ள ஏத்திக்கொண்டு போறன் எண்டு சமாளிச்சு மறுபடியும் வீட்டை கூட்டிக்கொண்ட வந்தேன்.

அம்மம்மா அதன்பிறகு சூரியனை விரட்டுகிறவமாதிரி பகல் முழுதும் வெளியில் உட்கார்ந்திருப்பா. வெள்ளிக்கிழமை நானும் அம்மம்மாவும் வெளிக்கிட்டோம். எனக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டக்கிடைத்ததே என்று ஒரே புழுகமாயிருந்தது. அம்மம்மா அன்றைக்கு வழமையைவிட பிரகாசமாக இருந்தா. திருநகரில் இருந்த கோயிலாச்சியாக மிகமிகச் சந்தேசாசமாக இருந்தா என்று தோன்றகிறது.

போற வழியில் மூலைப் பெட்டிக்கடையில் கற்பூரமும் நெருப்புப் பெட்டியும் வாங்கிவரச்சொன்னா. பிறகு வழிமுழுதும் சொல்லியபடியே வந்தா. நீதான் கோயிலுக்கு பூசைசெய்யோணும் உனக்குத்தான் அந்தக்காணியை எழுதிவைப்பன். அப்படி இப்படி என்று நிறைய பேசினா. நான் இம் கொட்டிக் கொண்டேயிருந்தேன். வார்த்தைகள் என்னிடம் குறைவாகவும் அவவிடம் அதிகமாகவும் சிக்கிக் கொண்டிருக்கின்றதோ என்று தோன்றியது.

மறபடியும் நான் சின்னப்பையனாக ஓடித்திரிந்த ஊருக்கு வந்தேன். ஊர் அந்நியமாகத் தெரிந்தது என் ஞாபக அடுக்குகளில் இருந்த அடையாளங்கள் எல்லாம் அழிந்து போய் இருந்தது. காணாமல் போன பொருள் மறுபடியும் கிடைத்தும் அடையாளம் தெரியாதவனாய் நான் என் பிள்ளைப் பருவத் தெருக்களில் திணறினேன்; ஒரு புதிய வருகையாளனைப்போல. பாதைகள் அணைகளாகியிருந்தன அல்லது பதுங்கு குழிகளாயிருந்தன. புதர்மண்டிக்கிடந்த தெருக்களின் வழி திருநகருக்கு வந்தேன். அம்மம்மா இப்போது அதிகமான மௌனத்தோடு இருந்தா. மோட்டார்சைக்கிள் கிடங்குகளில் திணறியது. நான் அம்மம்மா வீட்டு ஒழங்கைக்குள்ளால திரும்பி போய்க் கொண்டேயிருந்தேன். என்னால் இலகுவில் காணியை கோயிலை அடையாளம் காணமுடியவில்லை எதுவுமேயில்லை எல்லா வீடுகளும் இடிந்திருந்தன. அம்மம்மா திடீரென மோட்டசைக்கிளில் இருந்து குதித்தவ அழுதபடி கத்தினா. என்ர ஆச்சி தாயே உன்னை இந்தக் கோலத்திலயோ பாக்கோணும் வாயெல்லாம் குழற வார்த்தைகள் புரியமல் அம்மம்மா எதையோ சொல்லிச்சொல்லி அழுதா. குமுறிக்குமுறி இது வரை தேக்கிய தன் நேசத்தையெல்லாம் பரிவையெல்லாம் தீர்த்து விடுகிற மாதிரி கேவிக்கேவி அழுதா. அழுததழுதே தான் கொண்டு போன கற்பூரத்தை எங்கே கொழுத்துவதெனத் தெரியாமல் வீதியில் வைத்து கொழுத்தினா.

திடீரென ஆவேசம் வந்தவவைப்போல “வேசை உன்னை இந்தக்கோலத்திலயோடி நான் பார்க்கோணும் தோறை தோறை அறுந்தவேசை உன்னை இப்பிடி நான் பாக்கோணும் எண்டுதானே என்னை உயிரோட வைச்சிருந்தனி” எண்டு அழுகையும் கோபமுமாக கத்தினா. நான் பேசாமல் மௌனியாய் ஒரு சாட்சியைப்போல நின்று கொண்டிருந்தேன். இத்தனை அழுகையையும் பேச்சையும் ஆராவாரத்தையும் கேட்டு கூடுவதற்கு காக்காய் கூட கிடையாது இப்போது ஊரிலே.

கத்திக்கொண்டிருந்த அம்மம்மா திடீரென்று வீதியில் இருந்து செல்விழுந்து உதிர்ந்து போய் புதர் மூடிக்கிடந்த கோயிலின் சிதிலங்களை நோக்கிப்பாய்ந்தா. நான் தடுப்பதற்காக ஒடினேன் விர்ரா என்னை விர்ரா என்று திமிறியபடி அம்மம்மா விக்கித்துச் என் கைகளில் சரிந்தா. அது தான் அம்மம்மாவின் கடைசிப்பேச்சு மூச்சு இரண்டும் எல்லாம் முடிந்து விட்டது. அவ நேசித்த கோயிலின் எதிரில், அவபார்க்க வளர்ந்த ஊரினதும் கோயிலினதும் சிதைவுகளைத் தாங்கமுடியாமல் என்கைகளில அம்மம்மா பிணமாகிப்போனா.

Monday, May 21, 2007

மழை நின்ற பிறகு...


மழை நின்ற பின்னால்
நீ வந்துபோன
தடங்களை…
மறுபடியும்….
கலைத்துவிட்டு போகிறது
மழை…..

மறுபடியும்
மழை நின்ற பிறகு…
குதித்துக்கொண்டோடுகிறது…
உன் கொலுசு…
மனசிருந்து நழுவி….

Friday, May 18, 2007

"தமிழ் சினிமாவில் அரவாணிகள்" பருத்திவீரன் அமீரின் சிறப்பு பேட்டி

தமிழ் சினிமாப்பரப்பில் அதிர்வுகளைக் கிளப்பியிருக்கும் பருத்திவீரன்.

இயக்குநர் அமீருடனான சிறப்பு நேர்காணல். நேர்கண்டவர் த.அகிலன். ஒளிப்படங்கள் அருண்.

நான் எல்லாப்படங்களையும் பார்க்கிறேன். தனிமையும் துயரும் நிரம்பிக்கிடக்கும் நாட்களில் மாற்றீடாக எதையாவது இட்டு நிரப்பிவிடவேண்டியிருக்கிறது. தனியே வாசித்தும், கேட்டும் நாட்களை நகர்த்துவதன் சாத்தியமின்மை, என்னை ஒரு நாளின் 4 மணிநேரத்தை விழுங்கிவிடும் திரையரங்குகளை நோக்கி செல்லவைக்கிறது. முடிவில் சோழப்பொரி சுற்றித்தரப்படும் காகிதங்களை விட்டு வருவதைப்போல திரையரங்கையும், படங்களையும், அதன் நினைவுகளையும் கடந்து வெளியேறிவிடுகிறேன். அதையும் தாண்டி நான் பார்க்க நேர்கிற படங்களில் மனசைப் பிசைகிற அல்லது வலி நிறைந்த நெடிகளுடன் என் கூடவே வந்துவிடுகிறன படங்கள் சில. அப்படி அண்மையில் என் கூட வந்த படம் பருத்திவீரன்.
கிராமத்து மனிதர்களின் வாசனையை மனமெங்கும் ஏன் அரங்குமுழுவதும் நிரப்பிவிடுகிற கதை பருத்திவீரன்.
சினிமா ரசிக மனங்களை தத்துவங்களாலும் குத்துப்பாட்டாலும் நிறைத்துவிட நினைக்கும் கதாநாயகர்களினிடையில் தனது முதல் படத்தையே இவ்வாறு மண் மணக்கும் பருத்தி வீரனை தேர்ந்தெடுத்ததற்காக நடிகர் கார்த்தியை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
தமிழ் சினிமாவின் பாடற்காட்சிகளில் அழகாக மிக அழகாக மட்டுமே காட்டப்பட்ட நமது கிராமங்களின் இன்னொரு முகத்தை பருத்திவீரன் காட்டுகிறது.
வறண்டு போன பொட்டல் வெளிகளையும் அதனூடே வாழும் பசிய மனங்கொண்ட மனிதர்களையும் நம்மிடையே வாழச்செய்கிறது பருத்தி வீரன்.
நாங்கள் கிராமங்களை விட்டு நிறையத்தூரம் வந்துவிட்டோம். பருத்திவீரனில் வரும் அநேக முகங்கள் மறந்துபோனவை அல்லது அவர்களை நம் சுற்றத்தாராய் புரிந்து கொள்ளாத ஒரு தலைமுறை நம்மிடையே தோன்றியிருக்கிறது. இந்தச் சூழலில் உணர்வும் உயிருமாக நம்மிடையே கிராமத்தையும் அதன் மனிதர்களையும் கொண்டுவருகிறது பருத்திவீரன்.
பெரும்பாலும் வயல் வெளிகளினிடையில் கதாநாயகி நடனம் ஆடுவதை மட்டும் மிக அழகாக பதிவு செய்கிற கமரா, இங்கோ எலும்பும் தோலுமாகிப்போன கிராமத்தை நீர்வற்றிப்போய் தகித்தலையும் ஒருகிராமத்தின் உக்கிரமுகத்தை, நக்கலும் நையாண்டியுமாய் தெனாவெட்டோடு அலையும் மனிதர்களைப் முதல்முறையாகப் பதிவு செய்திருக்கிறது.
படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது எனக்கு தோன்றியது கார்த்தியைவிடவும் சரவணன் நன்றாக நடிக்கிறார் என்று. முடிவில் எல்லோரும் நன்றாகத்தான் நடித்தார்கள் என்கிற முடிவிற்குத்தான் வரவேண்டியிருந்தது. கதாநாயகனையும் கதாநாயகியின் அங்கங்களையும் மட்டுமே சுற்றியலையும் கமரா இந்தப்படத்தில் எல்லோரையும் ஒரே கண்கொண்டு பார்த்திருக்கிறது. அரங்கைவிட்டு வெளியேறுகையில் கதைமாந்தர்கள் அத்தனைபேரும் நம்மிடையே வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.
தமிழ் சினிமாப்பரப்பில் அதிர்வுகளைக் கிளப்பியிருக்கும் பருத்திவீரன் திரைப்படத்தின் உருவாக்க கர்த்தா இயக்குநர் அமீர் அவர்களுடன் பருத்திவீரன் படம் குறித்து எமது ஆதங்கங்களை பகிர்ந்து கொண்டோம்.

01.நாங்கள் இறுதிக்காட்சியிலிருந்தே தொடங்குவோம். படத்தின் அந்த இறுதிக்காட்சி இத்தனை சர்ச்சைகளை கிளப்புகிறதே நீங்கள் அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

நான் பாசிட்டிவ்வாகத்தான் எடுத்துக்கொள்கிறேன். ஏன் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது என்றால் யார் அதைக்கிளப்புகிறார்கள் என்று பார்க்கணும். படம் பார்க்கிற ரசிகர்கள் அதை ஏற்றக்கொள்கிறார்கள். ஒரு சினிமாவை யாருக்காக படைக்கிறோம். ரசிகனுக்கும் மக்களுக்கும் தான் படைக்கிறோம் வேறு யாருக்கும் கிடையாது. இங்கு படைப்பாளிகள் தான் சர்ச்சைகள் செய்கிறார்கள். ஒவ்வொரு படைப்பாளியும் ஒவ்வொரு கோணத்தில் சிந்திக்கிறார்கள். இரண்டு படைப்பாளிகள் ஒரே மாதிரி சிந்திக்கமுடியாது. விமர்சகர்கள் கூட இது அப்படியிருந்திருக்கலாம், அது இப்படியிருந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். நான் சொல்கிறேன் அதெல்லாம் உங்களுடைய கருத்து. உங்களுடைய கருத்தை என்னுடைய படத்தில் திணிக்க முடியாது. இது என்னுடைய படம் என்னுடைய கருத்து ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஐடியா சொல்கிறார்கள்.
'அவர்கள் இரண்டு பேரும் சந்தோசமா சேர்ந்து வாழ்ந்திருக்கலாமே' என்கிறார்கள். நான் ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் ரோமியொ யூலியட் எப்படி வரலாறாக வந்தது? அவர்கள் சந்தோசமாக இருந்திருந்தால் நீங்கள் அதை வரலாறு என்று சொல்லியிருப்பீர்களா? சில கதைகளுக்கு சிலவகையான முடிவுகள் தான் சரியாக இருக்கும். அதில எந்த சந்தேகமும் எனக்கு கிடையாது. அதைத்தவிர இப்படியிருந்திருக்கலாம் அப்படியிருந்திருக்கலாம் அந்த இறுதியிக் காட்சியில் என்கிறார்கள். நான் சொன்னேன் நீங்கள் உங்களுடைய அறிவை உள்ளே திணிக்கிறீர்கள். உங்களுடைய அறிவு சார்ந்து இந்த கிளைமாக்ஸ் இப்படியிருந்திருக்கலாம் என்கிறீர்கள் ஆனால் நான் என்னுடைய அறிவைக்கூட உள்ளே வைக்கவில்லை. ஒரு இயக்குனராக என்னுடைய அறிவைக்கூட நான் உள்ளே வைக்கவில்லை. நான் வைச்சிருக்கிற கிளைமாக்ஸ் பருத்திவீரனின் அறிவு சார்ந்தது. பருத்தி வீரன் என்கிற ஒரு படிக்காத ரவுடித்தனம் பண்ணிக்கொண்டிருக்கும் ஒருத்தன் அவன். எப்படி அந்த இடத்தில் சிந்திப்பான் முடிவெடுக்கிறான். இறந்துபோன தன்னுடைய காதலியை எப்படி ஊர்ப்பொதுமக்களிடமிருந்து காப்பறுவது என்று முடிவெடுக்கிறான். அவனுடைய அறிவு என்னவாக வேலைசெய்கிறது என்பதைத்தான் பதிவு செய்திருக்கிறேன். நீங்கள் அதை அப்படித்தான் அணுகவேண்டுமே தவிர இது இப்படியிருந்தா நல்லாயிருந்திருக்கும் அப்படியிருந்தா நல்லாயிருந்திருக்கும் என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரையில் சரியான விமர்சனமாக ஆகாது.

02.தமிழ்சினிமாவில் இப்போது வரக்கூடிய நல்லபடங்கள் அவற்றிற்கான வெற்றிகள் இவையெல்லாம் ஆரோக்கியமான விசயம் தான் இது தமிழ்சினிமாவின் ரசிகமனம் மாறியதால் ஏற்பட்ட மாற்றமா? அல்லது தமிழ் சினிமாத் தரப்பினரால் ஏற்படுத்தப்பட்ட மாற்றமா?
எங்களைப்போன்ற இயக்குனர்கள் ஏற்படுத்துகிற மாற்றம் தான். ரசிகர்களுடைய மாற்றம் எல்லாம் கிடையாது அவர்கள் எப்பொழுதும் ஒரேமாதிரியாத்தான் இருக்கிறார்கள்.ஒரு உணவு எப்படி பல்வேறு வகைவகையாக ரசிகர்களால் ரசிக்கப்படுகிறதோ அது மாதிரித்தான் சினிமாவும் ரசனை சம்மந்தப்பட்ட விசயம் அது நீங்கள் என்னவிதமான படைப்புகளைக்கொடுத்தாலும் அதைப்பார்ப்பதற்கென்று ஒரு கூட்டம் இருந்துகொண்டுதான் இருக்கும்.

03.அது சரி ஆனா அந்த படைப்பாளிகள், விமர்சகாகள்,ரசிகர்கள் கூட்டத்தால வெகுஜன சினிமாக்களின் வணிகரீதியிலான வெற்றியையும் தாண்டி இந்தப்படத்துக்கு ஒரு பெரிய வணிக ரீதியிலான வெற்றியைத் தரமுடிந்திருக்கே அது மாற்றமில்லையா?

மாற்றம் எல்லாம் இல்லை யார் செர்னனா? (கோபமாகிறார்) அவர்கள் கரெக்டா இருக்காங்க சார். வெகுஜன சினிமாவையும் தாண்டி ஒரு வெற்றியை கொடுத்திருக்கிறார்கள் என்றால் அதை ஒரு set of audience பார்த்திருக்கிறார்கள். இதைவேறு சிலரும் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அப்படித்தான் கொள்ளவேண்டும். அவர்கள் அவதானித்துக் கொண்டேயிருக்கிறார்கள் என்னமாதிரியான சினிமாவுக்கு போகணும் அப்படியென்று சொல்லி பார்த்துக் கொண்டேயிருக்காங்க. சிலருக்கு இந்தமாதிரியான படங்கள் பிடிக்குது போறாங்க. யூத் புல்லான சினிமா பிடிக்கும் போது அதுக்கு போறாங்க. சிலர் குடும்பமாக குடும்பபாங்கான படம் வரும்போது அதைப்போய்ப் பார்க்கிறாங்க. இதுல எல்லாம் மொத்தமா இருக்கிறதால எல்லாரும் வந்து பார்க்கிறாங்க. அவர்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள் குடுக்கவேண்டியது நம்மட கடைமை.

04.இயக்குனரும் நடிகருமான தங்கர்பச்சான் ஒருபேட்டியில் 'என்னுடைய படங்களை புரிந்துகொள்ளுமளவுக்கு இன்னமும் தமிழ்சினிமா ரசிகமனம் வளர்ச்சி அடையவில்லை" என்றார். (அழகி படம் வெளிவந்த புதிதில்) அதை ஒத்த காரணங்கள் தானா பருத்திவீரன் இறுதிக்காட்சி தொடர்பான சர்ச்சசைகளும்? நீங்கள் எடுத்து வைத்திருப்பதாக சொல்லப்படுகின்ற இன்னொரு பருத்திவீரன் பிரதியை தமிழ் சினிமா தளத்தில் வெளியிடாமல் இருப்பதுவும்?

ரசிகமனம் புரிந்து கொள்ளாது என்பதெல்லாம் கிடையாது வணிக ரீதியிலான வெற்றியைப் பெறமுடியாது. ஏனென்றால் வணிக ரீதியிலான வெற்றி முக்கியமானது. நீங்களே சொல்றீங்க நல்லபடம் குடுத்தா ரசிகன் பார்ப்பான் என்று. திரும்பவும் நீங்களே சொல்றீங்க நல்லபடம் குடுத்தா பார்க்மாட்டான்று என்று. ஆனால் ஒரு படைப்பை கொண்டு போய் அவர்களிடம் சேர்ப்து முக்கியமானது. அதிலே நிறையப் பிரச்சினை இருக்கிறது. எந்த படைப்புகளை எடுத்தாலும் ரசிகரிடம் கொண்டு போய் சேர்ப்பதில் நிறைய தடைகள் இங்கே இருக்கின்றன அது ரொம்ப முக்கியமான விசயம் இல்லையா? ஏன்னா இது வியாபரம் சார்ந்த விசயமாகவும் இருக்கிறது. கலையாக இருந்தாலும் வியாபாரம் சார்ந்து இருப்பதால் எனக்கும் ரசிகருக்கும் பாலமாக இருப்பவர்கள் அனைவரும் இதிலே விருப்புள்ளவர்களாக இருந்தால் மட்டும் தான் இது சாத்தியம். அல்லாவிட்டால் இந்த படைப்புக்களுக்கான உரியவிலை கிடைக்காது இவ்வளவு பிரச்சனைகள் இருக்கில்லையா? அதனால் தான் வெளியிடுவதில் பிரச்சினைகள் இருக்கிறதே தவிர மற்றபடி ரசிகர்களுடைய ரசனையை குறைச்சு மதிப்பிடுவதாகாது.

05.பருத்திவீரன் ஒரு படைப்பாளியாக உங்களுக்குள் திருப்தியை தந்திருக்கிறதா?

நான் கொடுத்த அந்த சினிமா சரியான சினிமாவா இருக்கு என்பதில் எனக்கு மாற்றுக் கருத்துகள் கிடையாது. ஒரு படைப்பாளியாக நான் அந்த சினிமாவை பருத்திவீரனை முழுமையாக நான் நினைத்தது மாதிரி எடுத்திருக்கனா என்றால் இல்லை. ஏன்னா என்ன யோசித்தேன் அதில் என்னத்தை வெளிப்படுத்திருக்கிறேன் என்பது ரசிகருக்குத் தெரியாது அவர்கள் வெளியிடப்பட்ட பிரதியை மட்டும் தான் பார்க்கிறார்கள். ஆனால் நான் என்ன யோசித்தேன் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த ஒரு விசயம் அல்லது ஒரு ரகசியம் அது.

06.அதைத்தான் கேட்கிறேன் அந்த வகையில் உங்களுக்கு திருப்பதியா?

அதில் எனக்கு திருப்பதின்னா ஒரு 70 சதவீதம் திருப்தி அவ்வளவுதான். 100 வீதம் நான் எதிர்பார்த்ததை 70 வீதம் அடைந்திருக்கிறென். ஒரு படம் வெளியே வந்ததற்கு பிறகு எத்தனை திருத்தங்கள் மனதில் தோன்றும். இதை இப்படிச் செய்திருக்கலலாமே அதை அப்படி பண்ணியிருக்கலாமே என்று தோன்றும் அப்படித் தோன்றுகிறவன் தான் படைப்பாளி. நோண்டிக் கொண்டே இருக்க வேண்டும். அந்த அனுபவம் ரசிகருக்கு கிடையாது ஏன்னா அவர்கள் பார்க்கும போது ரசிப்பார்கள் அவ்வளவுதான். அதனால் தான் சொல்கிறேன் முழுவதுமாக திருப்திப்பட்டுக் கொள்ள முடியாது எந்த ஒரு படைப்பாளியுமே அது என்ன படமாக இருக்கட்டும் முழுவதுமாக திருப்திப்பட்டுக் கொள்ளமுடியாது.
மற்றப்படி இந்த படத்தினுடைய மிகப்பெரிய வெற்றியே எனக்கு ஒரு பாரம். இப்பத்தான் முதல்படம் வேலைசெய்வது மாதிரியான எண்ணத்தை மனசில வைச்சிருக்கிறேன். எப்பவுமே அப்படித்தான் வச்சிருக்கிறேன்.


07.இந்தப்படத்தின் இசைபற்றிச் சொல்லுங்கள். கிராமியக் கதைகளுக்கான இசை அதை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்தவர் இளையராஜாதான். ஆனால் இதில் யுவன் அதையும் தாண்டி ஏதோ செய்திருக்கிறார் அதைப்பற்றி?

இளையராஜா ஒரு ஜீனியஸ் தமிழ் சினிமாவில் கிராமத்துக்கான அடையாளங்களை சரியான முறையில் வெளிப்படுத்தியவர் அவர்தான். ஒரு கிராமியம்னா எப்படி இருக்கணும் அதற்கான இசை என்றால் எப்படி இருக்கணும் என்பதெல்லாம் தமிழ்சினிமாவில் அவர்தான் விதைச்சு விட்டது. நான் அவருடைய படங்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். இருந்தாலும் எனக்குள்ள தோன்றியது இன்னும் கிராமிய இசை என்று ஒன்று இருக்கிறது. கிராமியப் படங்களுக்கான இசை அமைக்கப்பட்டிருக்கிறதே தவிர கிராமிய இசை என்று ஒன்று புறம்பாக இருக்கிறது. அது இன்னும் சினிமாவில் பயன்படுத்தப்படவில்லை என்று எனக்கு தோன்றியது. நான் அந்த இசையை எல்லாம் தேடி யுவன்சங்கர்ராஜாவின் கையில் கொடுத்தேன் யுவன் அதை அருமையாக பயன்படுத்தியிருக்கிறார் அவ்வளவுதான்.

08.பாரதிராஜா ஒரு இதழுக்கு பருத்திவீரன் படம் பார்த்துவிட்டு சொல்லியிருக்கிறார் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அமீர் கிராமங்கள் குறித்த சில நல்ல விசயங்களையும் காட்டியிருக்கணும் என்று. ஏன் அப்படி? எலும்தோலுமான கிராமத்தை படமாக்கியது குறித்து சொல்லுங்கள்?

கேள்வியிலேயே இதற்கான பதிலும் இருக்கிறதே. கிராமத்தை அழகான கிராமமாக காண்பித்தார்கள், பாடலுக்கு பின்ணணியாக காண்பித்தார்கள் எல்லாமுமாக கிராமங்கள் காண்பிக்கப்பட்டு விட்டன. எலும்பையும் தோலையும் யார் காண்பிப்பது யாரும் காண்பிக்கவில்லை அதான் நான் காண்பித்தேன். அப்படி அந்த வறண்டு போன பூமியை எடுக்கவேண்டும் என்பதற்காக படத்தை தாமதமாக கொண்டு வரவேண்டிக் கூட இருந்தது. அந்த பூமி சில நாட்களில் அப்படி இருப்பதில்லை. விளைஞ்சு நிக்கிறது ஏதோ ஒரு ஆறு மாசம்தான். மத்தநேரம் எல்லாம் வறண்டு போய்த்தானே கிடக்கு. அப்ப அந்த வறண்ட பூமியைக் காட்டணும் இல்லையா? எல்லாமே பிரேமுக்கு அழகா பச்சைப்பசேல்னு அதை நான் காண்பிக்க முடியுமா நான் இதைத்தான் காண்பிக்கணும் என்று நினைத்தேன். என்னுடைய பூமியின் நிஜமான முகத்தை, நிஜமான மனிதர்களின் முகத்தை அதை அப்படியே பதிவு செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டே பதிவு செய்திருக்கிறேன். இதில் ஆட்சேபனை இருக்கிறது என்றால் இருந்து விட்டுப்போகட்டும். ஒவ்வோருவருடைய கருத்துக்கும் நான் பதில்சொல்ல வேண்டியதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பீல் பண்ணுகிறார்கள் பாரதிராஜா சார் மேல எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. அவர் சில விசயங்கள் சொல்யிருக்காரு அது அவருடைய கருத்து. அவர் சொன்னதும் தப்புன்னு நான் சொல்லமுடியாது அதுக்காக அவர் சொன்னதெல்லாம் சரின்னும் சொல்லமுடியாது.


09.பருத்திவீரன் படம் துவக்கத்தில் அல்லது அதன்மையம் ஒரு சாதிச்சிக்கலை மையமாக வைத்து பின்னப்பட்டிருந்தாலும் இறுதியில் அது கரைந்து காணாமல் போய் ஒரு காதல குறித்த பிரச்சினையாக மாறிவிடுகிறது? அதைப்பற்றி சொல்லுங்கள்? ஒட்டுமொத்தமாக சினிமாவில் சாதி கையாளப்படும் முறை குறித்து என்ன சொல்லுகிறீர்கள்?

சாதி நம்ம வாழ்க்கையோட பின்னிப்பிணைஞ்சு கிடக்கு. நம்முடைய ரத்தத்துல நம்முடைய சதையில நம்முடைய மூச்சில நம்முடைய பேச்சில நம்முடைய உணர்வில எல்லாத்திலயுமே சாதி நம்மளோட ஒண்ணோட ஒண்ணா பின்னிப்பிணைஞ்சிருக்கு. நம்ப சமூகத்திலும் நம்மளிடத்திலும் இது இல்லேன்னு சொன்னா அது பொய். ஏன் பொய் சொல்லீட்டு வாழணும்னு நினைக்கிறீங்க? பள்ளிக் கூடத்துல கொண்டு போய் சேர்க்கணும்னு சொல்லும்போதே என்ன ஜாதின்னு கேக்கிறீங்க அங்கே ஆரம்பிக்கிது. தெள்ளத் தெளிவா கேக்கிறீர்கள் அல்லவா? ஜாதிச்சான்றிதழ் வாங்கியிருக்கீங்களா அப்படீன்னு எல்லாத்தையும் சமூகமும் அரசுகளும் சேர்ந்து எங்ககிட்ட கொடுத்துட்டு, இதெல்லாம் வேணும் உனக்கு வைச்சுக்க என்று சொல்லிவிட்டு, அப்புறம் அது சார்ந்த படங்கள் வரும்போது சாதியை முன்னிறுத்தி வராம என்ன செய்யும் அது வரத்தான் செய்யும்.


10.உங்களுடைய தனிப்பட்ட கருத்தென்ன அது சரி என்கிறீர்களா? இல்லை தவறு என்கிறீர்களா?

இது சரியா தவறா என்பதல்ல. சாதியை இப்ப இந்த ஜாதிக்காரர்கள் உயர்ந்தவர்கள் இந்த சாதிக்காரர்கள் தாழ்ந்தவர்கள் இவர்கள் தான் அறிவு பூர்வமானவர்கள் என்று சொல்ல முடியாது எல்லோருக்கும் எல்லாம் சொந்தம். அப்படி குறிப்பிட்ட ஒரு சாதியை முன்னிறுத்தி பண்ணினால்தான் தப்பே ஒழிய கதையோட ஓட்டம் போகணும் என்பதற்காக அங்கே சாதியைப் பயன்படுத்துவது தப்புன்னா முதலில் அது சமூகத்தில் இருந்து எடுக்கப்படணும். அதற்கு பிறகு திரைப்படங்களில் இருந்து ஆட்டோமட்டிக்கா வெளிய போயிரும். அதுல வைச்சுகிட்டு இதில இருந்து எடுங்க எடுங்கன்னா எப்படி எடுக்கமுடியும். சொல்லுங்க அதை எடுக்க முடியாது அது முன்னுக்கு பின் முரணாண விசயம் இல்லையா. ஒரு உண்மையை மறைச்சு எப்படி வேலை செய்யமுடியும் அது ஒரு கமர்சியல் சினிமால வேணுமெண்டா ஒன்றும் இல்லாமல் போயிரலாம். ஒரு யதார்த்த பதிவை செய்கிறபோது சொல்லித்தானே ஆகவேண்டியதிருக்கு . யதார்த்தமான பதிவைச் செய்யம் போது அது கட்டாயம் தேவைப்படுகிறது அங்கே அது இல்லாம சொல்லவே முடியாது.


11.திரைப்படங்களில் சாதி வரலாமா வரக்கூடாதா என்பதல்ல பிரச்சினை அது அணுகப்படும் விதம் குறித்துத்தான் கேட்கிறேன்?

பிரச்சினைக்கு தீர்வெல்லாம் நான் சொல்ல முடியாது. நான் எப்படி சொல்ல முடியும். நான் எங்களைச் சுற்றியிருக்கக் கூடிய பிரச்சினையை உங்க கண்ணு முன்னால கொண்டு வந்து வைக்கிறன் தீர்வை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். இது சரியா தப்பா. கீழ் ஜாதிப் பெண்ணை திருமணம் செய்து கொள்வது சரியா தப்பா சரின்னு தோணிச்சண்ணா அது தான் தீர்வு. நான் இதைத்தான் செய்யணும் என்று ஒருத்தரிடம் போய் சொல்லமுடியாது. ரசிகனிடமே அந்த தீர்வை விட்டாச்சு. நம்மளைச் சுத்தியிருக்கிற பிரச்சினை ஒரு சின்ன விசயத்துக்காக எத்தனை வருசமா அடிச்சுக்கிறாங்க. 25 வருசமா சாதியை மனசில வைச்சுக்கிட்டு போராடிப்போராடி என்னத்தை கண்ட. சாதி சாதின்னு இழந்தது என்ன. உனக்கு சோறு போட்ட உன்னுடைய மச்சானை இழந்தாய். அவனை நம்பி வந்த ஒரு பெண்ணை இழந்தாய். இருவரும் பலியானார்கள் காலச்சக்கரத்தில அதுக்கப்புறம் இப்ப எதை இழந்தாய் அவர்கள் வயிற்றில் பிறந்த 20 வருசமாய் வளர்க்கப்பட்ட ஒரு பையனை இழந்தாய் உன்னுடைய மகளை இழந்தாய். எதை நீ ஜெயித்தாய் ஜாதி ஜாதின்னு மனசில போட்டு குழப்பிக்கொண்டு என்ன ஜெயித்தாய். இழப்புகளை மட்டுமே நாளுக்கு நாள் சந்தித்துக்கொண்டே யிருக்கிறாய் இதற்குப்பின்னால் உன் குடும்பத்தினரும் பலிகிறார்கள். நீ எதைக்கொண்டு போகப்போற சந்தோசத்தையா? துக்கத்தையா? எதை நீ இனிமே சுவாசிக்கப்போறாய்? எதை சாப்பாடா வைச்சிக்கப்போறாய் சாதியைவா? இத்தனையையும் தான் படத்தில் சொல்லியிருக்கிறேன் நீங்கள் தான் எடுத்துக்கணும். நான் தெள்ளத் தெளிவா கொண்டு வந்து உங்க கண்ணு முன்னால வைச்சிட்டன். ஜாதி ஜாதின்னு ஒருத்தன் போனான் அதனால வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறான் என்று நான் காண்பிக்கவில்லை அதனால் ஏற்பட்ட இழப்புகளை பதிவு செய்திருக்கிறன் பார்வையாளன் எடுத்தக்கொள்ள வேண்டும். இது வேணுமா வேண்டாமா?

12.அரவாணிகள் தமிழ்சினிமாவில் பயன்படுத்தப்படுவது பற்றி? உங்களுடைய படத்தில் பயன்படுத்தப்பட்ட விதம் பற்றி?

நான் அரவாணிகள் சார்ந்த படங்கள் நிறையப் பார்த்திருக்கிறேன். அவர்களைப் பயன்படுத்திய படங்கள் எல்லாமே பாடலுக்கு காமெடியா பயன்படுத்துவாங்க. நான் அவர்களை அவர்களின் வாழ்க்கையொடு ஒட்டியிருக்க கூடியமாதிரி அவர்களுடைய தொழில் சார்ந்து உபயோகப்படுத்தியிருக்கிறேன். அவர்கள் என்ன செய்கிறார்கள் அவர்களக்கு ஏது வருமானம் குறிப்பாக கிராமங்களில் இருக்கக் கூடிய அரவாணிகள். இந்தமாதிரியான கூத்துக்களுக்கும் ஆடல் பாடல்களுக்கும் திருவிழாக்களுக்கும் போய்த்தான் அவங்கள் வந்து பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் மத்தபடி அவர்களுடைய வாழ்க்கை என்று ஒன்று தனியாக இருக்கிறது. அதை நான் வேறொரு காலகட்டத்தில் பதிவு செய்வேன். ஆனா இப்ப வந்து இந்தப்படத்தில் அவர்களை அவர்கள் தொழில் சார்ந்து பயன்படுத்தியிருக்கிறேன். எந்த மாற்றமும் இல்லாமல் அதில் கலப்படமெல்லாம் கிடையாது. கலப்படமில்லாம கொடுத்திருக்கன் அதால அதில எந்த தப்பும் கிடையாது அல்லது தோணல. திடீர்னு ஒரு பாட்டுக்கு கொண்டு வந்து திணிக்காம அந்த கிராமத்திலயே அவங்களும் இருக்காங்க அந்தப்பக்கம் திருவிழா நடக்கும்போது இருக்காங்க இந்தப்பக்கம் இன்னொரு திருவிழா நடக்கும்போது இருக்காங்க என்னுடைய படத்தில் அவர்களுடைய இயல்போட இருக்காங்க அதனால தப்பா தோணாது. நிஜம் எப்பொழுதும் தோற்பதில்லை.


இந்தபேட்டி அப்பால் தமிழ் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது

Wednesday, May 16, 2007

பாலபாரதி சொன்னது என்ன...?

வணக்கம் நண்பர்களே
நிறைய இடைவெளிக்குப்பிறகு மீண்டும் ஒரு பதிவு பீற்றாக்குள்ள எல்லாரும் சிக்கித்திணறிய காலத்தில் நான் சிக்ககாமல் இருந்திட்டன் இப்ப மறுபடியும் வந்து பாத்தா என்ன செய்யுறது எண்டு தெரியேல்ல.எல்லாமே மாறிப்போய்க்கிடக்கு. டக்கெண்டு உதவிக்கு வந்தார் எங்கள் வலையுலக சகலகலாவல்லர் எவ்வளவுதான் கலாய்ச்சாலும் கலங்காமல் அவ்வளவையும் ஏற்றும்கொள்ளும் பாலபாரதி அண்ணன் அவரது உதவியுடன் இரண்டாம் தடைவையாக புதுப்பிக்கப்பட்ட இந்த வலைப்பூவில் இடும் முதல் பதிவே அவரது சேவையைப்பாரட்டி அவரைப்பற்றியதாக் இருந்தால் என்ன என்று தோன்றியது அது தான் இந்த ஒலிப்பதிவு. இதை அண்ணனின் உண்மைத்தொண்டர்களாகிய பா.க.சவின் அனைத்து மாநில மற்றும் நாட்டுப்பிரதிநிதிகள் கேட்டுப் பயனுற வேண்டும் என்ற நினைக்கிறேன்.( வாழ்க பா.க.ச வளர்க அண்ணனின் புகழ்)

2006ன் கடைசி லஞ்சமும் 2007ன் முதல் பதிவும்…..

எங்கேயோ இருந்து மெலிதாக சுப்ரபாதம் என் காதுகளிற்கு கேட்கத் தொடங்கும் போதுதான் நான் இதை எழுதத் தொடங்கினேன். எந்த ஆண்டும் நான் இப்படி உணர்ந்ததில்லை எல்லாம் மாறிப்போயிருந்தது. தமிழர்கள் எல்லோரும் இந்தப்புத்தாண்டை இத்தனை ஆரவாரத்துடன் வரவேற்பார்களா என்பதை என்னால் இன்னமும் நம்பமுடியவில்லை.


சென்னை ரொம்ப சூப்பரா இருக்கும் நீங்க பார்க்கணும் அகிலன் என்று சோமி மிகுந்த அக்கறையுடன் வரச்சொன்னார். வெடிவெடிப்பாங்க பசங்களும் பொண்ணுகளும் சும்மா அப்பிடியே ஜாலியா ஒரு ரவுண்டு போவாங்க அங்கங்க கிளப் விருந்து அப்பிடி இப்படி என்று பின்னிரவு வரையும் நிகழ்ச்சிகள் இருக்கும் மெரினாவில் செம கூட்டம் இருக்கும் என்று சொல்லிக்கொண்டே போனார். ம் பார்க்கலாம் என்று அவரது மோட்டார் வண்டியின் பின்னால் ஏறினேன்.

எனக்கு தெருக்கள் அதன் பெயர்கள் வளைவுகள் திருப்பங்கள் எதுவுமே தெரிவதில்லை ஞாபகம் இருப்பதுமில்லை சோமி இங்க 3 வருசமா இருக்கிறார் அதால தான் பாதைகள் ஞாபகமிருக்கு என்று சமாதானம் செய்து கொள்வதுண்டு. எனக்கு பாதைகளை விடவும் விளம்பரத்தட்டிகளில் மொய்க்கும் கண்களை கட்டுப்படுத்த முடிவதில்லை. விளம்பரங்களில் அதிலும் அழகழகான பெண்களை அவர்களின் கண்களை காதுகளை என்று பார்ட் பார்ட்டாக வளைவுகள் திருப்பங்கள் எல்லாவற்றையுமே பாலித்தீன் தாள்களில் அச்சடித்திருக்கிறார்கள் எப்படி பார்க்காமல் போகமுடியும் அதுவும் செம்மண் புழுதிபடிந்த தெருக்களில் ஒன்று இரண்டு ஏசி வாகனங்கள் சர்….. என்று புழுதியை இறைத்தபடி போக நுரையீரல்களில் தூசியை நிறைக்கும் ஊரில் இருந்து வந்தவனுக்கு போர்மணக்கும் சாலையின் சிதிலமடைந்து அல்லது இப்போதுதான் பிறக்க ஆரம்பித்திருக்கும் கட்டிடங்களையே கண்டு பழகிப்போனவனுக்கு தெளிந்த கண்ணாடிபோன்ற மினுங்கும் (நான் ஊரைச்சொல்லவில்லை) விளம்பரத்தட்டிகள் ஆச்சரியம்தான் நிச்சயமாய்….. திருவிழாக் கூட்டத்தை வேடிக்கை பார்க்கும் சிறுவனாட்டம் சோமியின் பின்னால் அமர்ந்திருந்தேன்.

அடடா என்றார் சோமி திடீரென்று என்ன என்கிறென் பெற்றோல் போட மற்நதிட்டனே என்றார். 1லீஇற்கு 100கி.மி கனவுகள் சிதறிப்போக அந்த பெரிய வண்டிக்கம்பனியை கொஞ்சமும் இரக்கமின்றி எவ்வளவு திட்டினாலும் ஆத்திரம் தீராது என்கிற மாதிரி சிக்னலில் கரெக்டாக நின்றது வண்டி. எதிரே போலீஸ் ஒரு கதையும் கிடையாது டபார் என்று வணடிச்சாவியை கையில் எடுத்தார் என்னபண்றா ட்ராபிக்கில நின்னுட்டு லைசன்ஸ் எடு… லைசன்சா அப்படி எண்டா…. என்கிறமாதிரி சோமி முழிக்க… போலீஸ் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம் ஓரங்கட்டு ஓரங்கட்டு என்றார் போலீஸ்காரர் நான் நேரத்தை பார்த்தேன் 11.45 என்றது அலைபேசி. சார் பெட்ரோல் தீர்ந்து போய்ச்சு சார் அப்படி என்று சோமி சமாளிக்க பார்க்க அவரது பேச்சுத்திறமைக்கு மதிப்புக்கொடுத்தும் ஓடுவதற்கும் வசதியாகவும் நான் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டேன் (உங்களிற்கு நண்பனும் கரடியும் கதை ஞாபகம் வரேல்ல தானே) என்ன இங்கன்னா 50 இல்லைன்னா 550 என்று பகிரங்கமாக வியாபாரத்தில் இறங்கினார் பொலிஸ்காரர். அங்கபோறியா அப்படி என்று கைகாட்டிய திசையில் ஜீப்பில் இன்ஸ்பெக்கடர் ஆக இருக்கலாம் இன்னொரு போலீஸ்காரர் இருந்தார். சோமி 50 பதிற்கே விசயத்தை முடித்துகொள்ளலாம் எனத்தீர்மானித்த போது நான் பேசைத்திறந்து பார்த்தேன் சனியன் வருசத்தின் கடைசிக்கணங்களிலும் கூட வருவது மாதிரி ஆகக்குறைந்த பெறுமதி தாளே 100 ரூபாய் தாள்தான் இருந்தது.(ஆகக்கூடிய பெறுமதியும் அதுதான் சும்மா பில்டப்தெரியம்தானே) சரி கதைமுடிஞ்சுது 100 ரூபாய்க்கு ஆப்புத்தான் எண்டு நினைச்சுக்கொண்டு எடுத்து நீட்டினேன். எனக்கு அப்பதான் புரிஞ்சுது தமிழ்நாட்டு போலீசின் சிறப்பு அவர் மிகவும் நேர்மையாக(?) 50 ரூபாய் மிச்சக்காசை சோமியின் கையில் கொடுக்கவும் நான் அப்பபடியே உறைந்து போய்விட்டேன் அட இவ்வளவு நேர்மையான போலீஸ்காரரா? லஞ்சத்துக்கே மிச்சக்காசு கொடுக்கிறாரே என்று. அவரது நேர்மையை வியந்தபடி வண்டியை உருட்டிக்கொண்டு பெட்ரோல் போட்டுக்கொண்டு சோமியின் பின்னால் ஏறிஇருந்தால் அவர் சொன்னார் இண்டைக்கு மட்டும் சென்னை மாநகர காவலுக்காக 7000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று. உங்களிடம் பத்துஇருபது ரூபாயாக சில்லறைகள் இருந்தால் பத்துரூபாய்க்கே பேரத்தை முடிக்கலாம் என்றார் எங்கே அவர் தமிழ்நாடு போலீசின் மரியாதையை மேலும் உயர்த்தி விடுவாரோ என்கிற பயத்தில் போகலாம் என்றேன்.

(நான் உடனடியாக உத்தியோகப்பற்றற்ற வேலை ஒன்றைச்செய்தேன் என் அலைபேசியை எடுத்து அதில இருக்கிற கல்குலேற்றரில 7000தர 50 எண்டு அடிச்சன் நீங்களும் அடிச்சு பாருங்கோ வாற விடை நேற்று இரவு கைமாறியருக்கக் கூடிய ஆகக் குறைந்து லஞ்சத்தொகை)

சோமி கேட்டுது என்னமாதிரி வீட்ட போவமோ இல்லாட்டி சென்னை மாநகரின் லஞ்ச லாவண்யங்களை சீச்சி ரம்மியமான அழகை காணப்போறியளோ எண்டு நான் சொன்னன் போவம் வீட்டை எண்டு. சோமி மனம் மாறி நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்;டும் போவம் மெரினாவுக்கு எண்டு சொன்னார் வண்டி மெரினாவை நோக்கி போகத் தொடங்க….


எனக்கு தீடீரென்று குமார் வாத்தியின்ர ஞாபகம் வந்தது. குமார் வாத்தி கணிதம் தான் படிப்பிக்கிறது ஆனாலும் ஒரு மார்க்கமாக கணித்ததை படிப்பிக்கும் சினிமா பொது அறிவு அப்படி கணிதம் மட்டுமில்லாம எல்லாத்தையும் வகுப்பில சொல்லும் நான் அஞ்சாம் ஆண்டு படிக்கேக்க எனக்கு தெரிஞ்சு ஜனவரி முதல்தேதியை புத்தாண்டாக கொண்டாடுகிற சைவக்காரர் அவர்தான். அங்க இந்த விழா மதத்தின் பிண்ணணியில் தான் கொண்டாடப்பட்டது பெரும்பாலும். கிறிஸ்தவவர்கள் தான் இந்தப்புத்தாண்டை கொண்டாடுவார்கள் பொதுவாக கிறிஸ்தவமதத்தை சேராத தமிழர்கள் சித்திரைப்புத்தாணடத்தான் புத்தாண்டாகக் கொண்டாடுவார்கள். குமார் வாத்தியின்ர அக்கா ஒரு வேதக்காராரை கலியாணம் முடிச்சதாலதான் அவர் அப்படி கொண்டாடுகிறார் எண்டு நினைப்பன். சித்திரை மாதம் தமிழர்களுக்கு ஏன் புது வருசம் தமிழர்களிற்கு தை முதல் தேதி எது தைப்பொங்கல் பண்டிகைதானே அதையெல்லோ தமிழ் வருசப்பிறப்பு எண்டு கொண்டாட வேணும் எண்டு நான் நினைத்திருக்கிறேன்.

அப்ப வகுப்பில ஒருநாள் குமார் வாத்தி மெரினா எண்டா என்ன இடம் அப்படி எண்டு ஒரு பொது அறிவுக்கேள்வியை தூக்கி போட்டிச்சு வகுப்பில எல்லோரும் முழுசுகினம். அப்பவே தமிழக நண்பர்களான கோகுலம், அம்புலிமாமா, பாலமித்ரா,ராணிகாமிக்ஸ்,போன்றவர்களோடு எனது பரிச்சயம் இருந்தததால் நான் சொன்னன் பீச் எண்டு. குமார் வாத்திக்கு குண்டியில் அடிச்ச புழுகம் அப்பிடியே எனக்கு கைதந்து நீஒரு உலக அறிவு படைச்ச சிங்கம் அப்படி இப்படி எண்டு பாராட்டிச்சு….



ஹோ என்கிற பெரிய சத்தம் என் நினைவுகளைக் கலைத்தது. இளைஞர்கள் அப்படி கத்திக்கொண்டே மிகவேகமாக போனார்கள் எனக்கு மெரினா கடற்கரைக்கு போகிறோம் என்பது மகிழ்ச்சியாகத் தான் இருந்தது. வழியெல்லாம் போறவர்கள் வாறவர்கள் எல்லாரும் புத்தாண்டு வாழத்துக்கள் சொல்லியபடியே போய்க்கொண்டிருந்தார்கள். எனக்கு இது ஒரு புதிய அனுபவம் தான் இரவு பன்னிரண்டு மணிக்கு வெடிகொழுத்தி ஹோ..... ஹாப்பி நியூஇயர் அப்படி என்று கத்துகிற வாய்ப்பு எனக்கு இதுவரை கிடைக்கவேயில்லை. அநேகமாக யுத்த காலங்களில் இரண்டு தரப்பும் புத்தாண்டு பிறக்கும் போது துவக்குகளை வெடித்தோ அல்லது ஆட்லெறிகளை வீசியோ கொண்டாடுவார்கள். எனக்கு நன்றாக ஞாபமிருக்கிறது ஆனையிறவிலிருந்து 98 99 களில் டிசம்பர் 31 இரவு பன்னிரண்டு அடிக்க ஆட்டிலெறிகள் தமிழர் பிரதேசங்களை நோக்கி வீசப்படும். புத்தாண்டு பிறக்கும் போதே யுத்தத்தின் கறைகளோடு பிறக்கும். அது தவிரவும் மிக முக்கியமானது என்னவென்றால் அங்கே மதரீதியாக இது புத்தாண்டல்ல எனவே இதை அங்கே இருக்கிற கிறிஸ்தவர்கள் கொண்டாடுவார்கள். அவர்களது பக்கத்து வீடுகளாக இருக்கும் சைவக்காரர்களிற்கு கேக்கொடுத்திருப்பார்கள் அவ்வளவுதான். ஆனால் இங்கே சகலரும் இந்த புத்தாண்டை வரவேற்கிறார்கள் வீட்டின் முன்பாக கோலம் போட்டு happy new year என்று எழுதுகிறார்கள். உலகமயமாதலின் ஒழுங்கிற்குள் நாங்கள் நுழைந்து கொண்டிருப்பதை இது காட்டுகிறதா? அல்லது எங்கள் மத ஒற்றுமையை இது காட்டுகிறதா. அந்நிய முதலீடுகள் பெருகியிருக்கும் சூழலில் தாங்கள் வேலைசெய்கிற பல்தேசிய கம்பனிகளின் முதலாளிகளால் கொண்டாடப்படுகிறதால் இதை நாங்களும் கொண்டாட ஆரம்பித்து விட்டோமா? முதலாளிகளைத் திருப்தி படுத்துவதற்காக அல்லது நாங்களும் இந்த கலண்டரை தானெ பயன்படுத்துகிறோம் அதனால் பொதுவாக இதனைக்கொண்டாடுகிறோமா? என்கிற கேள்விகள் எழுகின்றன.

அலைகள் தெறித்துக்கொண்டிருந்த மெரினாவில் கூட்;டம் குறைந்த ஒரு ஓரத்தில் திருவிழாவை வேடிக்கை பார்க்கும் ஒரு மனநிலையோடு நின்று கொண்டிருந்தேன்.முகம் தெரியாதவர்கள் வாழ்த்துக்களோடு கைகுலுக்க ஏற்றுக்கொண்டேன பதிலுக்கு வாழ்தினேன். ஆட்டம் பாட்டு வெடி என்று அமர்களங்களுக்குள் மூழ்கிப்போனது அலைகளின் சத்தம். வெறித்த படி கொஞ்ச நேரம் நின்றோம்…. போன் வேலைசெய்யவில்லை அத்தனை பிசி எல்லா சேவைகளும் பயங்கர பிசி. அகிலன் தண்ணி அடிப்பீங்களா?

என்று சோமி கேட்க……
…………………………………..
.
.
.
.
மறுபடியும் கட்டுரையின் தொடக்கத்துக்கு போனால் நான் இந்தக்க கட்டுரையை எழுதத் தொடங்குகையில் நேரம் 5.30 நண்பர்கள் ரோட்டில் நின்று உற்சாகமாக வருபவர் போவவர்களை எல்லாம் வாழ்த்திக்கொண்டிருந்தார் கள்… happy new year என்று சொல்லி………